இயக்குநர் பா ரஞ்சித் இயக்கத்தில், யாழி ஃபிலிம்ஸ் நிறுவனத்துடன் இணைந்து நீலம் புரடக்சன்ஸ் தயாரித்துள்ள திரைப்படம் ‘நட்சத்திரம் நகர்கிறது’. காதலை மாறுபட்ட கோணத்தில் அதன் அரசியலை பேசும் இப்படத்தில் காளிதாஸ் ஜெயராம், துஷாரா, கலையரசன், டான்ஸிங் ரோஸ் கபீர் ஆகியோருடன் ஒரு பெரும் நட்சத்திரக் கூட்டம் இணைந்து நடித்துள்ளனர். இத்திரைப்படம் ஆகஸ்ட் 31-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா திரைபிரபலங்கள் மற்றும் படக்குழுவினர் கலந்துகொள்ள கோலாகலமாக நடைபெற்றது.
நாயகி துஷாரா பேசியதாவது…‘நட்சத்திரம் நகர்கிறது’ நான் மிகவும் நேசித்து நடித்த படம், மாரியம்மாவாக எனக்கு லைஃப் தந்தவர் ரஞ்சித் சார். ரெனே மூலம் அது தொடருமென நம்புகிறேன். இந்தப்படத்தில் என்னுடன் நடித்த கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. எல்லோரும் கடுமையாக உழைத்திருக்கிறோம். படம் பாருங்கள்.
கலையரசன் பேசியதாவது….படத்துல என்னோட பேர் அர்ஜூன், ரொம்ப முக்கியமான பாத்திரம் எல்லோரும் திட்டிட்டே நடிச்சிருக்காங்க. நிஜத்த கேள்வி கேக்கற ஒரு பாத்திரம். ரஞ்சித் கதை எழுதுறதும், அதை படமாக்கறதும் ரொம்ப வித்தியாசமா இருக்கும். இந்தப்படம் காதல கொண்டாடும்.
இயக்குநர் சசி பேசியதாவது…சிலர் பார்க்க ஆஜானுபாகுவாக இருப்பார்கள். ஆனால் அவர்கள் செயல்கள் கோழைத்தனமாக இருக்கும். ஆனால் அப்படியானவரில்லை ரஞ்சித் துணிச்சலாக எல்லாவற்றையும் செய்வார். இந்த தலைப்பே எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. ஒரு புத்தக தலைப்பை எப்படி தைரியமாக வைக்கிறார் என ஆச்சர்யமாக இருந்தது. யாழி பிலிம்ஸ் அவரை சுதந்திரமாக படமெடுக்க விட்டதற்கு நன்றி. ரஞ்சித் படம் எல்லாவற்றையும் பார்த்தவுடன் என் கருத்தை சொல்லிவிடுவேன். இந்தப்பட கதாப்பாத்திர அறிமுக டிரெய்லரே வித்தியாசமாக இருந்தது, அது படம் உடனே பார்க்கும் ஆவலை தூண்டுகிறது. இந்தப்படம் ரஞ்சித் படங்களில் முக்கியமான படமாக இருக்கும்.
‘அட்டகத்தி’ பார்த்தபோது ஒரு பெரிய மாற்றத்தின் தொடக்கமாக தெரிந்தது. அதே போல் தான் இந்தப்பட டிரெய்லர் பார்க்கும் போதும் இருந்தது. உறவுகள் பற்றி நாம் பேச தயங்குகிற விசயத்தை, தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும். ரஞ்சித் மீண்டும் புது டிரெண்டை உருவாக்கியிருக்கிறார். வாழ்த்துக்கள்.
தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா பேசியது
கலைப்புலி தாணு பேசியதாவது..ரஞ்சித் தனக்கு இருக்கும் நட்புக்களை ஒன்று சேர்த்து பயணிப்பவர். கபாலியில் பயணிக்கும்போது அவரது எண்ணங்களை பகிர்ந்துகொள்வார். அவருக்கு எப்போதும் நான் துணை நிற்பேன். பரியேறும் பெருமாள் படத்திற்கு தியேட்டர் கிடைக்காத போது அவருக்கு தெரியாமலேயே தியேட்டர் கிடைக்க ஏற்பாடு செய்தேன். அவரது பாணியில் இருந்து விலகி, ஹைஃபையாக நட்சத்திரம் நகர்கிறது செய்து கொண்டிருக்கிறார். உண்மையில் இந்த படைப்பு அடித்தட்டு மக்களின் கதையை சொல்லும். தம்பிக்கு எனது வாழ்த்துக்கள்.
இயக்குநர் பா ரஞ்சித் பேசியதாவது…‘ஜெய்பீம்’ இந்த ஒரு வார்த்தை தான் என்னை இங்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. அட்டகத்தியில் துவங்கிய பயணம் நட்சத்திரம் நகர்கிறது வரை வந்துள்ளது. நான் யாரையும் வளர்த்து விட வில்லை. அவர்கள் திறமையானவர்கள் அவர்களை நான் பயன்படுத்திக்கொண்டேன் அவ்வளவுதான். அவர்களுடன் பணிபுரிந்தது மகிழ்ச்சி. வெங்கட் பிரபு சாரிடம் தான் நான் கற்றுக்கொண்டேன். சென்னை 28 படம் தான் என் வாழ்வை செதுக்கியது. நாம் நினைத்ததை எடுக்க முடியும் என்பதை கற்றுக்கொடுத்தது. சசி சார் நான் உதவியாளனாக இருந்த போது என்னை கூப்பிட்டு உட்காரவைத்து பேசினார். எனக்கு ஆச்சர்யமாக இருந்தது. அவரை நான் மறக்க மாட்டேன். என் உதவியாளர்களிடம் நான் நன்றாக நடந்துகொள்ள அது தான் காரணம். வெற்றிமாறன் ஒரு படத்தை எந்த ஒரு காம்ப்ரமைஸ் இல்லாமல் எடுக்கலாம் என்பதை நிரூபித்தவர. இந்த மூன்று பேரும் இங்கிருக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அடுத்ததாக என் வாழ்வில் இரண்டு தயாரிப்பாளர்கள் மிக முக்கியமானவர்கள் ஒன்று கலைப்புலி தாணு சார், ஞானவேல் சார். கலைப்புலி சாரிடம் கபாலி செய்த போது அவர் தந்த சுதந்திரம் பெரியது. அவருக்கு க்ளைமாக்ஸ் பிடிக்கவில்லை எனக்காக ஒத்துக்கொண்டார். படம் வெளிவந்த பிறகு ஹிட் என சொன்னாலும் இண்டஸ்ட்ரியில் பெரிதாக பேசவில்லை மன உளைச்சலில் இருந்தேன், ஆனால் அவர் தான் கூப்பிட்டு படத்தின் கலக்சன் காட்டி என்னை பெரிதும் ஊக்கப்படுத்தினார். ஞானவேல் சார் அட்டகத்தி ரிலீஸ் செய்யவில்லை என்றால் நான் இன்று இங்கிருந்திருக்க மாட்ட்டேன். இவர்கள் எல்லாம் இங்கிருக்க வேண்டுமென ஆசைப்பட்டேன்.









