யசோதா- விமர்சனம்
சமந்தா நடித்திருக்கும் யசோதா என்ற திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது அந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
சமந்தா – வரலட்சுமி சரத்குமார், உன்னி முகுந்தன் ஆகியோர் நடிப்பில் ஹரி மற்றும் ஹரிஸ் ஆகிய இருவர் இணைந்து இயக்கியிருக்கும் திரைப்படம் யசோதா.
இந்தியாவில் மரணமடையும் ஹாலிவுட் நடிகை. விபத்தில் இறக்கும் தொழிலதிபர் மற்றும் பிரபல மாடல். வாடகை தாயாக செல்லும் யசோதா. இந்த மூன்று சம்பவங்களுக்கும் என்ன தொடர்பு? இந்த மரணங்கள் எப்படி நிகழ்ந்தன? ஏன் நிகழ்த்தன? என்பதற்கான பதில்தான் யசோதா.

இந்தப் படத்தின் தொடக்க காட்சியே கதைக்குள் நகர்கிறது. யசோதாவின் முக்கிய மூன்று சம்பவங்களும் முதலிலேயே காட்டப்பட்டு அடுத்தக்கட்டத்தை நோக்கி பயணிக்க தயார்படுத்துகின்றன. ஒரு புறம் தொழிலதிபர் விசாரணை, இன்னொரு புறம் வாடகை தாயாக செல்லும் யசோதா. அந்த இடத்தில் நடக்கும் மர்மம் என திரைக்கதையை அமைத்திருக்கின்றனர். ஒரு விறு விறுப்பான படத்திற்கு தேவையான அனைத்து விஷயங்களுக்காக வாய்ப்பும் அந்த இடத்தில் உள்ளது.
வாடகை தாய் முறையில் இருக்கும் இருட்டு பக்கங்களை இந்தப் படம் சொல்லப்போகிறதா என்ற எண்ணத்தை ஆரம்பத்தில் எழுப்புகின்றன. ஆனால் ஒரு கட்டத்திற்கு மேலும் வேறு ஒரு விஷயத்தை நோக்கி நகர்கிறது. அதுதான் படத்தின் மைய கருவாக இயக்குனர்கள் கையாண்டுள்ளார்கள்.
இந்தப் படத்தின் பெரும்பாலான காட்சிகள் surrogacy மருத்துவமனையிலேயே நடக்கிறது. அதற்காக அமைக்கப்பட்ட செட் நன்றாக இருந்தாலும், உண்மையில் இது போன்ற இடங்கள் இருக்க வாய்ப்பு இல்லை. அந்த மருத்துவமனையில் நடக்கும் விஷயங்கள் பார்பவர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்த வேண்டும். ஆனால் அது படம்பார்பவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்த வில்லை.

அத்துடன் தொழிலதிபர் விசாரணை குறித்த காட்சிகள் இல்லாமல் போகிறது. ஒரு சமயத்தில் விசாரணை அதிகாரிகள் என்ன ஆனார்கள் என்றே தோன்ற வைக்கிறது. வாடகை தாய், விசாரணை ஆகிய இராண்டிற்கும் சரிசமமான முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
சமந்தா, வரலட்சுமி, சம்பத், உன்னி முகுந்த் என அனைவரும் நன்றாகவே நடித்துள்ளனர். அதிலும் நடிகை சமந்தா நடிப்பில் மட்டும் அல்லாமல் சண்டைகாட்சியிலும் துணிச்சலுடன் நடித்துள்ளார். அதேபோல் ஒளிப்பதிவு படத்தை சற்று பிரமாண்டமாக காட்டுகின்றன.
Surrogacy முறையில் உள்ள பிரச்னைகள், கொலைகளில் உள்ள திருப்பங்களை வைத்துகொண்டு இன்னும் விறு விறுப்பாக திரைக்கதையை அமைக்க வாய்ப்பிருந்தும் எங்கோ ஒரு இடத்தில் சமரசம் செய்துகொண்டு படத்தை முடித்துள்ளனர்.

இந்திய சினிமாவில் சமீப காலமாக நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் அதிகம் வர தொடங்கியுள்ளன. அதில் சில திரைப்படங்கள் ரசிகர்களை கவரும் வகையிலஅமைகின்றன. இன்னும் சில திரைப்படங்கள் வாய்ப்பு இருந்தும் அதை சரியாக காட்சிப்படுத்தாத படங்கள் உள்ளன. அதில் இரண்டாம் வகையில் நிறைய படஙகள் சேர்ந்து விடுகின்றன. அந்த வகை படமே யசோதா. ஆனால் சமந்தாவின் முயற்சியை பாராட்டலம்.
விமர்சகர் -சரண்
9994667873