‘சந்திரமுகி-2’ விமர்சனம்
பி.வாசு இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளியான சந்திரமுகி படத்தின் முதல் பாகத்தை தொடர்ந்து பல ஆண்டுகள் கழித்து அதன் இரண்டாவது பாகம் (Chandramukhi 2) இன்று வெளியாகியுள்ளது. ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவான இப்படத்தின் விமர்சனத்தை பார்க்கலாம்.

முதல் பாகத்தின் தொடர்ச்சி, இப்படத்தில் காட்டப்படுகிறது. அதில் இருக்கும் முருகேஷன், (வடிவேலு) இந்த பாகத்திலும் அதே கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதை மாந்தர்களான வேட்டையன் மற்றும் சந்திரமுகியை சுற்றியே படக்கதை நகர்கிறது.
பேய் படங்களை பொறுத்துவரை, தனது சொந்த வாழ்க்கையில் பிரச்சினைக்கு உள்ளாகி, இறக்கும் நபர்களே பழிவாங்குவதற்காக பேயாக மாறுவார்கள். ஆனால், சந்திரமுகி படக்கதை, இதில் இருந்து வேறுபடுகிறது எந்தவொரு தொடர்பும் இல்லாத மூன்றாவது நபர்கள், பலியாடாக மாறுவது மற்ற படத்தில் இருந்து சந்திரமுகி 2 படத்தை தனித்து காட்டுகிறது. முதல் பாகத்தில் க்ளாசிக் டச் கொடுத்த பி.வாசு, இதில் பிரம்மாண்டத்தோடு சேர்த்து கமர்ஷியல் கதைக்கான வித்தைகளையும் மொத்தமாக இறக்கியுள்ளார்.
பாண்டியன் மற்றும் வேட்டையனாக நடித்த ராகவா, ரஜினியை இன்பிரேஷனாக எடுத்து நடித்துள்ளார். அதுபோல், பால்கார பெண்ணான மஹிமாவின் நடிப்பில் தோட்டக்கார பெண்ணாக நடித்த நயன்தாராவை காணமுடிகிறது.
ராதிகா சரத்குமார் தனக்கு கொடுத்த கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். வடிவேலுக்கு கொடுக்கப்பட்ட காட்சிகள் சற்று மிகைப்படுத்தி காண்பிக்கப்பட்டதனால், முதல் பாகத்தில் இருக்கும் அலப்பறையான காமெடி காட்சிகள் இதில் மிஸ்ஸிங். மேலும் லக்ஷ்மி மேனனுக்கு முதல் பாதியில் ஸ்கோப் இல்லையென்றாலும், இரண்டாம் பாதியில் தன்னால் முடிந்ததை செய்திருக்கிறார்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்கர் புகழ் கீரவாணியின் இசையில் பாடல்கள் இடம் பெற்றிருந்தாலும், முதல் சந்திரமுகியை நினைவூட்டும் வகையில் தான் ஒவ்வொரு பாடலும் உள்ளது. குறிப்பாக படத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட “ரா ரா”பாடலை இரண்டு வெர்ஷனில் உருவாக்கி ரசிகர்களின் பொறுமையை சோதிக்கிறார். ஏராளமான பாடல்கள் நிறைந்துள்ள நிலையில் பின்னணி இசை சில இடங்களில் மிரட்டலாக இருக்கிறது.
முதல் பாகத்தில் வேட்டையனாகவும் சந்திரமுகியாவும் தன்னை தாங்களே நினைத்து கொள்பவர்களாக ரஜினி, ஜோதிகா நடித்திருப்பார்கள். மனநல பிரச்சினை என சொல்லி இந்த நிகழ்விற்கு முதல் பாகத்தில் தீர்வு காணப்பட்டிருக்கும். ஆனால், 2ஆம் பாகத்தில் சந்திரமுகி மற்றும் வேட்டையன் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது. இந்த பிளாஷ்பேக் காட்சியில் காட்டப்படும் ட்விஸ்ட் ரசிகர்கள் நிச்சயம் எதிர்பாராத ஒன்றாக இருக்கும்.