வேழம் விமர்சனம்
நடிகர் அசோக்செல்வன் என்றாலே அசத்தும் செல்வன் என்றே சொல்லலாம் . அவரது திரையுலக வாழ்க்கையில் அவர் நடிக்கும் ஒவ்வொரு படங்களின் கதையையும் அவர் தேர்ந்தெடுப்பது ஒரு வித்தியாசமான அனுபவமாகவே இருந்ததாக அவர் ஒரு பேட்டியில் தெரிவித்தார். அவரது திரைப்படங்களை நாம் பார்க்கும் பொழுதும் நிச்சயமாக மனுஷன் ரொம்ப கஷ்டப்பட்டு கதைகளை தேர்வு செய்கிறார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது இந்த வேழம் படத்தின் மூலம்.

‘சீரியல் கில்லிங்’ என்பதை மையமாக வைத்து அதைச் சுற்றி, காதல், சொத்து பிரச்சினை, சென்டிமென்ட் என என்னவெல்லாம் சேர்க்க முடியுமோ அவையனைத்தையும் ஒன்றுவிடாமல் சேர்த்து இந்தப் படத்தைக் கொடுத்திருக்கிறார் அறிமுக இயக்குனர் சந்தீப் ஷியாம்.

காதல் கதை, த்ரில்லர் கதை, நகைச்சுவைக் கதை இப்படி எந்த விதமான கதையாக இருந்தாலும் அதில் பொருத்தமாக பொருந்திப் போகும் ஒரு கதாநாயகனாக அசோக் செல்வன் இருக்கிறார். இந்தப் படத்தில் காதலியை அநியாயமாகப் பறி கொடுத்த குற்ற உணர்வுடன் வாழும் ஒரு கதாபாத்திரம். எப்படியாவது காதலியைக் கொன்றவர்களைப் பழி வாங்கத் துடிக்கிறார். அதை ஒரு கட்டத்தில் நிறைவேற்றவும் செய்கிறார்.
படத்தில் இரண்டு கதாநாயகிகள் ஒருவர் ஐஸ்வர்யா மேனன், மற்றொருவர் ஜனனி. ஐஸ்வர்யா கொஞ்ச நேரமே வந்தாலும் இயல்பான நடிப்பால் மனதைக் கொள்ளை கொள்கிறார். இப்படி ஒரு யதார்த்தமான நடிகைக்கு தமிழ் சினிமாவில் அதிக வாய்ப்புகள் கிடைக்காதது ஆச்சரியமாக உள்ளது. அசோக் செல்வன் மீது பரிதாபப்பட்டு அவரைக் காதலிக்கும் கதாபாத்திரத்தில் ஜனனி. கிடைத்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஊட்டி, குன்னூர், கோவை சுற்றுப்புறங்கள்தான் படத்தின் கதைக்களம். தரமான ஒரு படமாகக் கொடுக்க வேண்டும் என ஒளிப்பதிவாளர் சக்தி அரவிந்த் உழைத்திருக்கிறார். ஜானு சந்தர் இசையில் பாடல்கள் படம் பார்க்கும் போது பிடிக்கிறது. பின்னணி இசையும் பரவாயில்லை.
படத்தில் ஒரே ஒரு வில்லன் என யாரையும் சொல்ல முடியாதபடி சில பல வில்லன் கதாபாத்திரங்களை வைத்திருக்கிறார் இயக்குனர். அதுவே குழப்பத்தையும், திரைக்கதை தள்ளாட்டத்தையும் ஏற்படுத்தி விடுகிறது. இடைவேளைக்குப் பின் எதை நோக்கி திரைக்கதை பயணிக்க வேண்டும் என்பதில் தடுமாற்றம் இருக்கிறது. ஐஸ்வர்யாவின் உறவினர், அடியாட்கள், அரசியல்வாதியின் மகன்கள் என எங்கெங்கோ சுற்றுகிறது திரைக்கதை. இருந்தாலும் நடு நடுவே எதிர்பாராத சில திருப்பங்களையும் வைத்திருக்கிறார்கள். அனைத்தையும் ஒரே நேர்க்கோட்டில் வைத்திருந்தால் படத்திற்கு உதவிகரமாக இருந்திருக்கும்.