சர்தார் 2 – விமர்சனம்
கார்த்தி – இயக்குனர் மித்ரன் கூட்டணியில் கடந்த 2022ம் ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சர்தார். இந்திய ராணுவ உளவாளியை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த திரைப்படத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, அந்த கூட்டணி மீண்டும் இணைந்து சர்தார் 2 திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. கார்த்தி இரட்டை வேடத்தில் நடிக்க, எஸ்.ஜே. சூர்யா வில்லனாக நடித்துள்ள இந்த படத்திற்கு சாம் சிஎஸ் இசையமைத்துள்ளார்
படத்தின் தொடக்கத்தில் உளவு அமைப்பு ‘வால்ரஸ்’ என்ற மர்ம ஏஜென்ட்டை தேடுகிறது. அவரை கார்த்தி தேடிச் செல்லும் அதே நேரத்தில், எஸ்.ஜே. சூர்யாவின் ஆட்களும் அவரை பின்தொடர்கின்றனர். ஒரு கட்டத்தில் வால்ரஸ் உயிரிழக்க, இறப்பதற்கு முன்பாக ஒரு கத்தி வடிவிலான சாவியை கார்த்தியிடம் ஒப்படைக்கிறார். அந்த சாவியின் பின்னால் இருக்கும் மர்மத்தை கண்டுபிடிக்க கார்த்தி களமிறங்குகிறார். அப்போது இதுபோன்று மேலும் இரண்டு சாவிகள் இருப்பதும், மூன்று சாவிகளும் இணைந்தால் மிகப்பெரிய பயோ அபோகலிப்ஸுக்கு வழிவகுக்கும் ஆபத்தான ஒன்றை திறக்க முடியும் என்பதும் தெரிய வருகிறது. மனித குலத்தின் பெரும் பகுதியை அழிக்க வேண்டும் என்பதே எஸ்.ஜே. சூர்யாவின் திட்டம். ஆனால் இந்தக் கதை இன்றைக்கு தொடங்கியதல்ல; இதன் வேர்கள் 1981-ம் ஆண்டிலேயே இருப்பதை கார்த்தி கண்டுபிடிக்கிறார்.
1981-ல் ஏற்பட்ட மிகப்பெரிய உயிரியல் பேரழிவை தடுத்து நாட்டை காப்பாற்றியவர் சர்தார் என்பது மகனான விஜய பிரகாஷுக்கு தெரிய வருகிறது. ஆனால் அந்த சம்பவத்தில் ஒரு கிராமமே கடுமையாக பாதிக்கப்படுகிறது. சுமார் 3,000 பேர் வசித்த அந்த கிராமத்தில் வெறும் 54 பேரை மட்டுமே சர்தாரால் மாற்று மருந்தின் உதவியுடன் காப்பாற்ற முடிகிறது. அனைவரையும் காப்பாற்றுவேன் என்று கொடுத்த வாக்கை நிறைவேற்ற முடியாத குற்ற உணர்வு சர்தாரை பல ஆண்டுகளாக துரத்துகிறது. அப்படியிருக்க, பல ஆண்டுகளுக்கு முன்பு தடுக்கப்பட்ட அந்த பேரழிவை மீண்டும் எதற்காக நிகழ்த்த எஸ்.ஜே. சூர்யா முயற்சிக்கிறார்? அவருடைய நோக்கம் என்ன? சர்தார் மீண்டும் அந்த ஆபத்தை தடுக்கிறாரா? என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
முதல் பாகத்தில் தண்ணீர் தொடர்பான பிரச்சனையை மையமாக வைத்து சமூகத்துக்கு ஒரு முக்கியமான எச்சரிக்கையை முன்வைத்திருந்தார் இயக்குநர் பி.எஸ். மித்ரன். இந்தப் பாகத்தில் ‘கொலிஸ்டின்’ என்ற ஆன்டிபயாடிக்கின் தவறான பயன்பாடு எதிர்காலத்தில் ஏற்படுத்தக்கூடிய பேரழிவு குறித்து கவனம் செலுத்தியிருக்கிறார். அதை வெறும் சீரியஸான கருத்தாக மட்டும் சொல்லாமல், எஸ்.ஜே. சூர்யா, யோகி பாபு, நிழல்கள் ரவி ஆகியோரின் காட்சிகள் மூலம் சுவாரஸ்யமாகவும், நகைச்சுவையுடனும் கொண்டு சென்றிருப்பது படத்தின் முக்கியமான பலம். சிரிக்க வைக்கும் அதே நேரத்தில் சிந்திக்கவும் வைக்கும் வகையில் இந்தப் பகுதி

கார்த்தி – எஸ்.ஜே. சூர்யா நடிப்பு; வலுவான கதாபாத்திர வடிவமைப்பு; கொலிஸ்டின் குறித்த சமூக அக்கறையுள்ள களம்; ஆக்ஷன் காட்சிகள்; ஒளிப்பதிவு மற்றும் டெக்னிக்கல் ஒர்க்; துணை நடிகர்களின் சிறப்பான பங்களிப்பு ஆகியவை படத்திற்கு ப்ளஸ் ஆக அமைந்துள்ளன.
படத்தின் நீளம் சற்று அதிகம், அதை குறைத்திருக்கலாம். அதேபோல் எமோஷனல் கனெக்ட் இன்னும் வலுவாக இருந்திருக்கலாம் இவை தான் படத்திற்கு மைனஸாக அமைந்துள்ளன.
மொத்தத்தில் படத்தில் வரும் இவ்வகையான கொடிய நோய்க்கு முக்கால் டம்ளர் நிலவேம்பு கஷாயமே போதும், இதற்கு மூன்று மணி நேரம் திரைக்கதை தேவையா என்ற எண்ணம் தோன்றுகிறது.
தொழில்நுட்ப ரீதியாக படம் வென்று இருக்கிறது என்றுதான் சொல்லலாம்.









