சிறை விக்ரம் பிரபு நடித்த டாணாக்காரன் திரைப்படம் பாசிட்டிவான விமர்சனங்களைப் பெற்றது. இப்படத்தின் இயக்குநர் தமிழ் கதை எழுத சுரேஷ் ராஜகுமாரி இயக்கத்தில் தற்போது உருவாகியுள்ள படம் சிறை.
7ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள சிறை இதில் விக்ரம் பிரபு, எல்கே அக்ஷய் குமார், அனிஷ்மா அனில்குமார் (அறிமுகம்) மற்றும் ஆனந்த தம்பிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
ஒரு நேர்மையான காவலரையும் ஒரு கைதியையும் ஒன்றிணைத்து, அவர்களை மிகவும் கடினமான சூழ்நிலைகளில் நிறுத்தும் ஒரு சிறந்த காவல்துறை சார்ந்த திரைப்படம் இது. காவலர், கைதி மற்றும் அவனது காதலி ஆகியோருக்கு இடையேயான பயணத்தை சுவாரஸ்யமான உரையாடல் மற்றும் த்ரில்லான அனுபவத்துடன் சொல்லியிருக்கிறார்கள்.
இயக்குநர் சுரேஷ் ராஜகுமாரியை அவரது பணிக்காகப் பெரிதும் பாராட்ட வேண்டும். அவரது எழுத்து, உச்சகட்ட தருணங்களிலும் சரி, உணர்ச்சிகளிலும் சரி, கச்சிதமாக இருக்கிறது. இயக்குநர் ஒன்று அல்லது இரண்டு காட்சிகளில் மட்டும் வரும் கலைஞர்கள் உட்பட, தனது அனைத்து நடிகர்களிடமிருந்தும் அவர் சிறந்த நடிப்பை வெளிக்கொணர்ந்துள்ளார்.
விக்ரம் பிரபுவின் நடிப்பு விக்ரம் பிரபுவுக்கு இந்த படம் ஒரு சிறப்பான கம்பேக். மீண்டும் காக்கிச் சட்டையில் அசத்தியிருக்கிறார். ஆனால் இது அவரை அடுத்த கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் அவரது சிறந்த பாத்திரங்களில் ஒன்றாகும், மேலும் இதற்காக அவர் நிச்சயம் பெரிதும் பேசப்படுவார். படத்தில் அவர் மிகவும் ஸ்மார்ட்டாகத் தெரிகிறார், மேலும் அவரது உயரமான உடலமைப்பையும் தோற்றத்தையும் இயக்குநர்கள் இப்படித்தான் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அறிமுக நாயகன் எல்.கே. அக்ஷய் குமாருக்கு ஒரு பெரிய பாராட்டு. ஒரு சவாலான பாத்திரத்தில் நடித்து அவர் நம்பிக்கையுடன் தனது பயணத்தைத் தொடங்குகிறார்.
வேலூர் சிறையில் இருக்கும் அப்துல் ரெளஃப் எனும் கைதியை சிவகங்கை நீதிமன்றத்திற்கு அழைத்துச் செல்கிறார் கதிரவன் எனும் போலீஸ் ஏட்டு. அந்தப் பயணத்தின் வாயிலாக, நீதித்துறையின் போதாமைகள், அழுத்தமான காதல் கதை, போலீஸார்க்கு நேரும் சங்கடம், கொம்பு முளைத்தது போல் பொதுமக்களிடம் நடந்து கொள்ளும் போலீஸாரின் ஆணவப்போக்கு என அழுத்தமான கதை சொல்லியுள்ளார் இயக்குநர்.அப்துல் ரெளஃபாக L.K.அக்ஷய் குமார் நடித்துள்ளார். செவன் ஸ்க்ரீன் ஸ்டுடியோ லலித் குமாரின் மகனாவார். இவரை சினிமாவில் அறிமுகப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படமிது. அதற்காக லலித் குமார், டாணாக்காரன் தமிழிடம், விசாரணை போலொரு கதை கேட்டுள்ளார். தமிழ் சொன்ன உண்மைக்கதையில், அப்துல் கதாபாத்திரத்திற்குக் கன கச்சிதமாகப் பொருந்திப் போகிறார் அக்ஷய். அவரது குரலும், உடற்மொழியும், மருண்ட பார்வையும் அவரை அப்துலாகவே மாற்றியுள்ளது. இயக்குநரால் மிகச் சிறப்பாக நடிக்க வைக்கப்பட்டுள்ளார்.
மரியத்தின் கணவர் ஏட்டு கதிரவனாக வரும் விக்ரம் பிரபுவிற்கு இது 25 ஆவது படமாகும். அதை மேலும் சிறப்பாக்கும் விதமாக, இப்படம், 2025 ஆம் ஆண்டில் டிசம்பர் 25 அன்று கிறிஸ்துமஸ் நாளில் வெளியாகிறது. டாணாக்காரனைப் போலவே அவர் பெருமைப்பட்டுக் கொள்ளும்படி வாழ்நாளிற்கான கதாபாத்திரம் வாய்த்துள்ளது.படத்திற்கு மிகப்பெரிய பக்கபலம் ஒளிப்பதிவும் பின்னணி செய்யும் இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரனை படத்தின் இன்னொரு கதாநாயகன் என்று சொல்லலாம் அந்த அளவுக்கு பின்னி இருக்கிறார்.
ரெளஃபின் காதலி கலையரசியாக மலையாள நடிகை அனிஷ்மா நடித்துள்ளார். படத்தின் ஆன்மா எனச் சொல்லுமளவு மிகச் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளார். திரையில் அவரது இருப்பே, படத்திற்கு ஓர் அழகையும் கனத்தையும் தீவிரத்தையும் (intense) தந்துவிடுகிறது. அவரது பெரிய கண்களும், புன்னகையும் வசீகரிப்பதோடு மட்டுமல்லாமல், அவர் கலங்கும்போது பார்வையாளர்களையும் சேர்த்துக் கலங்கடிக்கிறார்.
விசாரிக்கப்படாமலே, வாய்தா மட்டும் அளிக்கப்பட்டு ஆண்டுகணக்காகச் சிறையில் வாடும் கொடுமை எவர்க்கும் நிகழக்கூடாதது. அதுவும் பாதிக்கப்பட்ட அந்த நபர் முஸ்லிமாக இருந்துவிட்டால் அது சகிக்க முடியாத கூடுதல் கொடுமை. நீதித்துறையின் மெத்தனத்தை மட்டுமல்லாமல், பொதுப்புத்தியையும் கேள்விக்கு உட்படுத்தியுள்ளார் இயக்குநர்.
எத்தனை சரிகள் நம் பக்கமிருப்பினும், எனது அதிகாரத்திற்கு நீ அடங்கியே ஆகவேண்டுமென்ற போலீஸின் கொடும் மனநிலையை எதிர்கொள்ள நேரிடும் பொழுது ஏற்படும் பதற்றத்தைத் தணிக்கச் சிரமப்பட வேண்டியதிருக்கும். அத்தகைய மனநிலையில் உள்ள வேலூர் கான்ஸ்டபிளை, விக்கிரவாண்டி காவல்துறை அதிகாரி டீல் செய்யும் விதம் உள்ளபடிக்கு மிகுந்த மனநிறைவைத் தரும் அதே சமயத்தில் மனதைக் கனக்கவும் வைக்கிறது. அதிகாரம் உள்ளவர்கள் (அது சிறியதோ/ பெரியதோ) கரிசணத்துடன் நடந்து கொண்டால், பலரின் வாழ்க்கை அதனால் நல்லவிதமாக மாறும் என அழுத்தமாக இயக்குநர் படத்தை முடித்துள்ளது சிறப்பு..
நீண்ட நாட்களுக்குப் பிறகு விக்ரம் பிரபு தனக்கு கொடுத்த வேலையை இந்தப் படத்தில்தான் கச்சிதமாக செய்திருக்கிறார்.








