தரமான படைப்புகளைக் கொடுக்கும் இயக்குநர் எம். மணிகண்டன் மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி கூட்டணியில் ஆண்டவன் கட்டளை மற்றும் கடைசி விவசாயி ஆகிய படங்களுக்கு பிறகு பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகியுள்ள வெப் சீரிஸ் தான் முத்து என்கிற காட்டான் . இது கிரைம் மற்றும் ஆக்ஷன் கலந்த மிஸ்டரி திரில்லர் ஆகும்.
ஒரு கிராமத்தின் ஒதுக்குப்புறத்தில் உள்ள ஒரு பாறையின் மீது வெட்டப்பட்ட ஒரு தலை (விஜய் சேதுபதியின் தலை) மர்மமான முறையில் வைக்கப்பட்டிருக்கிறது. உடலைக் காணவில்லை. அந்தத் தலையைச் சுற்றி நிறைய பணமும் சிதறிக் கிடக்கிறது. அந்த முண்டம் எங்கே? அவரை கொன்றது யார்? என்ற கேள்விகளுடன் கதை தொடங்குகிறது.
முத்து என்கிற காட்டான் யார்? அவர் ஒரு கொலைகாரனா, அல்லது பாதிக்கப்பட்டவனா? சிலருக்கு அவர் ஒரு ரட்சகன், சிலருக்கு அவர் ஒரு கொடூர மிருகம் எனப் பல பரிமாணங்களில் அவரைப் பற்றி மக்கள் பேசுகிறார்கள். இந்த முரண்பட்ட கதைகளுக்குப் பின்னால் இருக்கும் உண்மையை கிராமத்து காவல் துறையினரும், மற்றவர்களும் எப்படி கண்டுபிடிக்கிறார்கள் என்பதே ‘முத்து என்கிற காட்டான்’ தொடரின் கதைக்களம்.

கதையின் மர்மம் பார்வையாளர்களைத் தொடர்ந்து அடுத்த எபிசோடை பார்க்கத் தூண்டுகிறது. ஒளிப்பதிவும், மண் சார்ந்த பின்னணி இசையும் கதையின் தீவிரத்தை அதிகரிக்கச் செய்கின்றன. மிலிந்த் சோமன், சுதேவ் நாயர், மற்றும் கிராமத்து மனிதர்களாக வரும் பல நடிகர்கள் தங்களது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். செயற்கைத்தனம் இல்லாத வசனங்கள் படத்திற்கு கூடுதல் பலம்.
இது ஒரு மெதுவாக நகரும் சீரிஸ் என்பதால், ஆரம்பம் முதலே அதிரடியான ஆக்ஷனை எதிர்பார்ப்பவர்களுக்குச் சில இடங்களில் சோர்வை ஏற்படுத்தலாம்.10 எபிசோடுகள் என்பதால் கதையை விவரிப்பதில் அதிக நேரம் எடுத்துக்கொள்கிறார்கள்.
‘முத்து என்கிற காட்டான்’ வெறும் பழிவாங்கும் கதை மட்டுமல்ல; அது மனித வாழ்வின் நோக்கத்தையும், குற்றத்தின் பின்னணியையும் அலசும் ஒரு அழுத்தமான படைப்பு. வழக்கமான சீரிஸ்களில் இருந்து மாறுபட்டு, சற்று நிதானமான ஆனால் ஆழமான கிரைம் மிஸ்டரி தொடரைப் பார்க்க நினைப்பவர்களுக்கு, இது ஒரு மிகச் சிறந்த சாய்ஸ்!









