மானிட்டரில் பார்க்கும்போதே அழுதுவிட்டார் இயக்குநர்
திறமையான படைப்பாற்றல் கொண்ட இயக்குனர்களை வெளிச்சம் போட்டு காட்டும் விதமாக தொடர்ந்து வித்தியாசமான கதைக்களங்களுடன் படங்களை தயாரித்து வரும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. வடிவேலு நடித்த தெனாலிராமன், எலி ஆகிய படங்களை இயக்கிய யுவராஜ் தயாளன் இப்படத்தை இயக்கியுள்ளார்.
விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ளார். பிரபல ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவின் சிஷ்யரான இவர், பண்ணையாரும் பத்மினியும் படத்தில் துவங்கி சமீபத்தில் வெளியான பர்ஹானா வரை பல வெற்றிப் படங்களில் தனது பங்களிப்பை கொடுத்துள்ளார். குறிப்பாக ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ், பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிக்கும் படங்களில் பணியாற்றி வரும் கோகுல் பினாய் #இறுகப்பற்று படத்தில் பணிபுரிந்த அனுபவம் பற்றி நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார் கோகுல் பினாய்.
அவரின் முந்தைய இரண்டு படங்களுடன் ஒப்பிடும்போது, இறுகப்பற்று படத்திற்காக இப்படி ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் என்பதை நினைத்து உண்மையிலேயே ஆச்சரியப்பட்டு போனேன். யுவராஜை பொறுத்தவரை இந்த கதையைத் தான் தனது முதல் படமாக இயக்க வேண்டும் என நினைத்து வைத்திருந்தார். சில சூழல்களால் வேறு படங்களை இயக்கும்படியாக ஆகிவிட்டது. இனி அடுத்து வரும் படங்களில் விதவிதமான கதை அமைப்பில் தான் அவரது படம் இருக்கும் என உறுதியாக சொல்லலாம்.படப்பிடிப்பின்போது ஒவ்வொரு காட்சியையும் யுவராஜ் நடித்து காட்டுவார். இதுவரை நான் பணியாற்றிய படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருந்தது. சில நேரங்களில் இங்கே காட்சி படமாக்கி கொண்டிருக்கும்போது மானிட்டரின் பக்கத்திலிருந்து அழுகை சத்தம் கேட்கும்.. பார்த்தால் யுவராஜ் தயாளனும் அந்த காட்சியை பார்த்தபடி கண்கலங்கி கொண்டு இருப்பார். அந்த அளவிற்கு இந்த கதாபாத்திரங்களை அவர் வடிவமைத்துள்ளார்
குறிப்பாக படம் பார்க்கும் தம்பதியினர் நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில் கண் கலங்குவார்கள். எடிட்டிங் சமயத்தில் படம் பார்த்தபோது என்னுடன் அமர்ந்திருந்த புதிதாக திருமணமான என் உதவியாளர் சில காட்சிகளில் கண்ணீரை அடக்க முடியாமல் அருகில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து அடிக்கடி கண்களை துடைத்துக் கொண்டதை பார்க்கும்போதே இதை உணர முடிந்தது.விக்ரம் பிரபுவை பொறுத்தவரை இந்த படத்திற்காக வெகு இயல்பாக அந்த கதாபாத்திரத்தை அவர் வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல மூன்று கதாநாயகிகளும் வெவ்வேறு விதமான கேரக்டர்களை அவர்களுக்கே உரிய பாணியில் நடித்துள்ளார்கள். இதில் நடிகை அபர்ணதியின் பங்களிப்பும் உழைப்பும் அபரிமிதமானது. இந்த படம் வெளியான பிறகு அவருக்கென ஒரு தனி ரீச் கிடைக்கும். நான் இதை ஏன் சொல்கிறேன் என்பது படம் வெளியான பிறகு உங்களுக்கு புரியும்.









