
ஜோதிகாவின் 50வது படம். ஜோதிகாவை சுற்றிய கதைகளம். கிணற்றில் இரு குழந்தைகள் தவறி விழுகிறது. ஏதாவது ஒரு குழந்தையைத் தான் காப்பாற்ற முடியும் என்கிற நிர்ப்பந்தம். தன் குழந்தையைக் கழற்றிவிட்டு, அண்ணன் குழந்தையைக் காப்பாற்றுகிறார் ஜோதிகா. பாசம் என்பது அண்ணன்-தங்கை இடையே தானா? பெற்ற குழந்தையிடம் ஒரு தாய் எப்படி அந்த பாசத்தை வெளிப்படுத்தாமல் இருக்க முடியும்? அப்படி முடியும் படியான கல் நெஞ்சம் இருந்தால், எப்படி அண்ணனுக்கு மட்டும் இவ்வளவு பாசமாக இருக்க முடியும்? சமுத்திரக்கனி ஒரு நேர்மையான ஆள். அவருக்கு அடிதடியெல்லாம் பிடிக்காது. அந்த பக்கமே இருக்கமாட்டேன் என்கிற ஆள். அவர் எப்படி அடிதடி ஆரவாரம் செய்வதாகக் கூறப்படும் சசிக்குமார் குடும்பத்தில் பெண் எடுத்தார்?
குடும்பப் பாசம் மிகுந்த பெண் என்பதோடு மாந்தநேயம் மிக்க பெண் என்பதற்கான காட்சிகள் அதிகம். எல்லோருக்கும் எடுத்துக்காட்டாக விளங்க வேண்டிய பொறுப்பை உணர்ந்து ஒவ்வொரு காட்சிக்கும் உயிர் கொடுத்திருக்கிறார்.உயிர்களைக் காக்க தா;லியைக் கழற்றும் துணிவு, மகளைக் கத்தியால் குத்தியவனுக்கும் பணம் கொடுத்து உதவும் கருணை, மகனா? அண்ணன் மகனா? என்ற மிகக்கடின நேரத்தில் எடுக்கும் முடிவு என எல்லா இடங்களிலும் கைதட்டல் பெறுகிறார்.
ஜோதிகாவின் அண்ணனாக சசிகுமார். வேட்டி சட்டை முறுக்குமீசை. சிறுநரை என கம்பீரமாக வருகிறார். தோற்றத்தில் மட்டுமல்ல அவர் வரும் காட்சிகளும் பேசும் வசனங்களும் கம்பீரம்தான்.
சர்பத் குடிக்கிறதுன்னா கூட சட்டப்படிதான் குடிக்கணும் என்று சொல்லும் சமுத்திரக்கனி. அழுத்தமான வேடம் அமைதியான தோற்றம். ஆர்ப்பாட்டமில்லாமல் நடித்து வரவேற்புப் பெறுகிறார்.
சசிகுமாரின் மனைவியாக சிஜாரோஸ். கணவரின் கண்ணியம் காக்கும் வேடம். அளவாக நடித்திருக்கிறார்.
மக்களைச் சிரிக்கவைக்கும் பொறுப்பு சூரிக்கு.வாய்விட்டுச் சிரிக்க வைத்திருக்கிறார்.
காவல்துறை ஆய்வாளராக வரும் வேல்ராஜ், வில்லன் கலையரசன், சசிகுமார் மகனாக வருகிற சித்தார்த், ஜோதிகாவின் மகள் நிவேதிதா சதீஷ், ஆடுகளம் நரேன் ஆகிய அனைவரும் பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.
வேல்ராஜின் ஒளிப்பதிவு நன்று. இமானின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
அருகிப்போய்க் கொண்டிருக்கும் பாச உணர்வுகளோடு, கடன்தவணை கட்டாத விவசாயியின் உழுவை வாகனத்தைப் பறித்துச் செல்லும் மார்வாடிக்கு சசிகுமார் நடத்தும் பாடம், நீரை மண்ணுக்குள் தேடாதே வானத்தில் தேடு என்கிற நம்மாழ்வாரின் சொல் ஆகிய சமுதாய அக்கறைகளை அளவோடு கலந்து திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் இரா.சரவணன்.
வீட்டுக்கு மட்டுமன்று நாட்டுக்கும் உடன்பிறப்பே









