• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா!

by Tamil2daynews
May 13, 2026
in சினிமா செய்திகள்
0
0
SHARES
4
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

“சட்டென்று மாறுது வானிலை” திரைப்பட முன் வெளியீட்டு விழா!

 

BV Production நிறுவனத்தின் கீழ், இயக்குநர் பாபு விஜய் தயாரித்து இயக்க, நடிகர் ஜெய் நடிப்பில், இன்றைய சமகால பிரச்சனைகளை அழுத்தமாகப் பேசும் புதுமையான ரொமான்டிக் திரில்லராக உருவாகியுள்ள திரைப்படம் “சட்டென்று மாறுது வானிலை”.

இப்படத்தில் நாயகியாக மீனாட்சி கோவிந்தராஜன் நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கருடா ராம், ஸ்ரீமன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மனித வாழ்வில் தொடர்ந்து நிகழும் அதிர்வுகள், ஆச்சரியங்கள் மற்றும் உணர்வுகளின் பயணமே இப்படத்தின் மையக் கருத்தாக அமைந்துள்ளது. மேலும், நாட்டில் நடைபெறும் மற்றும் நடைபெறவிருக்கும் முக்கிய பிரச்சனைகளை இப்படம் தைரியமாக எடுத்துரைக்கிறது.

வரும் மே 15 ஆம் தேதி திரைக்கு வரவுள்ள இப்படத்தின் முன் வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப் பிரபலங்களும் கலந்து கொள்ள, பத்திரிக்கை மற்றும் ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட் M நாதன் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். பொதுவாக நண்பர்கள் அல்லது பணியிடத்தில் இருக்கும் சக ஊழியர்களின் வெற்றி, தோல்விகள் நம்மை பெரிதாக பாதிக்காமல் கடந்து போய்விடும். ஆனால் சிலரின் வெற்றி மட்டும் நமக்கே ஒரு தனி மகிழ்ச்சியை தரும். ‘நம்முடன் இருந்தவர் இன்று உயர்ந்து நிற்கிறார்’ என்ற பெருமிதம் மனதில் தோன்றும்.

அப்படிப்பட்ட நெருக்கமான வட்டாரத்தில் எனக்கு மிகவும் முக்கியமானவர் இயக்குநர் பாபு விஜய். இந்தப் படத்தில் அவர் இயக்குநராக மட்டுமல்லாமல் தயாரிப்பாளராகவும் செயல்படுகிறார். ஒரு பைக் ரேஸில் ஒரே நேரத்தில் வண்டியையும் ஓட்டிக்கொண்டு, பெட்ரோல் கேனையும் சுமந்து கொண்டு வெற்றியை நோக்கி செல்லுவது எவ்வளவு கடினமோ, அதே அளவுக்கு சவாலான விஷயம்தான் முதல் படத்தை தயாரித்து இயக்குவது.

அந்தப் பொறுப்பும் போராட்டமும் என்ன என்பதை நன்றாக புரிந்துகொண்டதால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் முழு மனதுடன் இந்தப் படத்திற்கு ஆதரவாக நின்று, என்னால் முடிந்த முழு உழைப்பையும் கொடுத்தேன்.

இந்தப் படம் அந்த அர்ப்பணிப்பிற்கும் உழைப்பிற்கும் உரிய வெற்றியை கண்டிப்பாக பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. படம் வெற்றி பெறும் நேரத்திலும் நீங்கள் அனைவரும் இதே அன்பும் ஆதரவும் வழங்குவீர்கள் என்று நம்புகிறேன்.

இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொண்டு, இந்த நிகழ்ச்சியில் ஸ்டண்ட் மாஸ்டர் ஜெய் முரளி அவர்களை அன்புடன் வரவேற்கிறேன்.”

உடை வடிவமைப்பாளர் கமலி பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். முதலில் இந்தப் படக்குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். இந்த வாய்ப்பை வழங்கிய ஜெய் சாருக்கும், இந்தப் படத்தில் காஸ்ட்யூம் டிசைனராக என்னை நம்பி இணைத்த பாபு சாருக்கும் என் மனப்பூர்வமான நன்றிகள்.

உங்களிடம் இருந்து நான் நிறைய விஷயங்களை கற்றுக்கொண்டேன் சார். இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

குறிப்பாக என் நெருங்கிய தோழி மீனாட்சிக்கும் என் இதயம் கனிந்த வாழ்த்துகள். படக்குழுவில் பணியாற்றிய அனைவருக்கும் மீண்டும் ஒருமுறை பாராட்டுகளும் வெற்றிக்கான நல்வாழ்த்துகளும். நன்றி.”

ஸ்டண்ட் மாஸ்டர் முரளி பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பை வழங்கிய பாபு சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.

இந்தப் படத்தின் பாடல்களை திரையில் பார்க்கும்போது மிகவும் பிரம்மாண்டமாக இருந்தது. அதற்காக பாபு சார் முழு அர்ப்பணிப்புடன் கடுமையாக உழைத்திருக்கிறார் என்பது தெளிவாக தெரிகிறது.

நானும் இதற்கு முன்பு ‘கஜினி’, ‘ஏழாம் அறிவு’ போன்ற பல படங்களில் முழு ஈடுபாட்டுடன் பணியாற்றியிருக்கிறேன். அதுபோல பாபு சாரின் முதல் படத்திலேயே அவருடன் இணைந்து வேலை செய்வது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது.

ஜெய் சாருடன் பல ஆக்ஷன் காட்சிகளில் பணியாற்றியிருக்கிறோம். அந்த நேரங்களில் அவர் மிகுந்த ஒத்துழைப்பும் ஆதரவும் அளித்தார். ஆக்ஷன் காட்சிகளில் அவர் மிகச் சிறப்பாக செயல்படுவார்.

இந்தப் படத்தில் எனக்கும் ஒரு முக்கியமான வாய்ப்பை இயக்குநர் வழங்கியுள்ளார். அதற்காக அவர் எடுத்த உழைப்பும் அர்ப்பணிப்பும் பாராட்டத்தக்கது.

வாழ்க்கை எப்போது எப்படி மாறும் என்று சொல்ல முடியாது. அதுபோல இந்தப் படம் இதில் பணியாற்றிய பலரின் வாழ்க்கையிலும் நல்ல மாற்றத்தை உருவாக்கும் என்று நம்புகிறேன்.

ரிச்சர்டுடன் எனக்கு நீண்டநாள் நட்பு உள்ளது. நாங்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் மிகுந்த மகிழ்ச்சியை அளித்தது.

இந்தப் படம் கண்டிப்பாக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. குறிப்பாக இசையமைப்பாளருக்கு நான் தனியாக நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்தப் படத்தின் பாடல்கள் அனைத்தும் மிக அருமையாக வந்துள்ளன. நீண்ட நாட்களுக்கு பிறகு மக்கள் அதிகமாக பேசும் பாடல்களாக இவை இருக்கும் என்று நினைக்கிறேன்.

இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை பெற்று, இதில் பணியாற்றிய அனைவருக்கும் நல்ல எதிர்காலத்தையும் வாழ்க்கையையும் வழங்க வேண்டும் என்று மனதார வாழ்த்துகிறேன். நன்றி.”

எடிட்டர் டார்லிங் ரிச்சர்ட்சன் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். எங்களுடைய இந்தப் பயணம் எங்கிருந்து தொடங்கியது என்று நினைத்துப் பார்த்தால், அதன் அடித்தளமாக இருந்தது ‘பாஃப்டா’ தான். அங்குதான் ஜெய் சாரையும், பாபுவையும் முதன்முதலாக சந்தித்தோம். அங்கிருந்து தொடங்கிய இந்தப் பயணம் இன்று ஒரு திரைப்படமாக உருவாகியுள்ளது.

கிட்டத்தட்ட எட்டு ஆண்டுகளுக்கும் மேலான இந்தப் பயணத்தின் பலனாக இந்த முதல் படம் உருவாகியுள்ளது.

இந்தப் படத்தை என்னை நம்பி ஒப்படைத்த பாபு சாருக்கு என் மனமார்ந்த நன்றிகள். அவர் மிகவும் நல்ல இயக்குநர். பொதுவாக சனி, ஞாயிறு மற்றும் அனைத்து பொது விடுமுறைகளிலும் எங்களுக்கு ஓய்வு கொடுப்பார். மாலை ஆறு மணிக்குள் அலுவலக வேலையையும் முடித்துவிடுவார். இப்படிப்பட்ட அமைதியான மற்றும் அன்பான குழுவுடன் பணியாற்றியது எனக்கு மிகவும் பிடித்த அனுபவமாக இருந்தது.

ஜெய் சாருடன் இதற்கு முன் ‘பலூன்’ படத்தில் அசிஸ்டென்ட் எடிட்டராக பணியாற்றியிருக்கிறேன். அதன் பிறகு என் முதல் படத்திலேயே அவருடன் மீண்டும் பணியாற்றுவது எனக்கு ஒரு ஆசீர்வாதமாக தோன்றுகிறது. அதற்காக அவருக்கு மனமார்ந்த நன்றி.

அதேபோல் தனஞ்செயன் சார், சசி சார், மீனாட்சி மற்றும் இந்தப் படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் என் நன்றிகள்.

இங்கே இருக்கும் அனைத்து மாஸ்டர்களுக்கும் என் மரியாதை. இங்கு வந்திருக்கும் நண்பர்கள், குடும்பத்தினர் அனைவருக்கும் நன்றி.

என் வாழ்க்கையில் மிக முக்கியமான மூன்று பேருக்கு நான் சிறப்பு நன்றி சொல்ல விரும்புகிறேன். முதலில் எடிட்டர் லலின் சார் — அவர் தான் என்னுடைய முதல் குரு. அடுத்து எடிட்டர் ரூபன் சார் — அவரிடம் கிட்டத்தட்ட ஒன்பது ஆண்டுகள் அசிஸ்டென்ட் எடிட்டராக பணியாற்றினேன். மூன்றாவதாக இயக்குநர் அட்லி சார். இந்த மூவரிடமிருந்தும் நான் நிறைய கற்றுக்கொண்டேன். இன்று நான் இந்த இடத்தில் நிற்பதற்கு காரணமான முக்கியமான மனிதர்கள் இவர்கள்தான்.

அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றிகள். நன்றி.”

CFO சத்யநாராயணன் பேசியதாவது:

“அனைவருக்கும் மாலை வணக்கம். இயக்குநர் பாபு விஜய் மற்றும் இந்தப் படத்தின் முழு குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

இந்தப் படத்திற்காக அனைவரும் மிகுந்த உழைப்புடன் பணியாற்றியிருக்கிறோம். குறிப்பாக இது பாபு விஜய்க்கு ஒரு கனவு திரைப்படமாகும்.

இந்தப் படத்திற்கு நீங்கள் அனைவரும் ஆதரவு அளித்து, இதை மிகப்பெரிய வெற்றிப் படமாக மாற்றுவீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.”

இசையமைப்பாளர் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். பல மேடைகளில் மைக்கைப் பிடித்து பேசிய அனுபவம் இருந்தாலும், இன்று இந்த மேடையில் பேசுவது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. முதலில் சசி சாரை நேரில் சந்திப்பதில் மிகுந்த சந்தோஷம். நான் உங்கள் மிகப்பெரிய ரசிகன். உங்கள் ஒவ்வொரு படத்திலும் இருக்கும் உணர்ச்சிப்பூர்வமான அம்சம் என்னை மிகவும் பாதித்திருக்கிறது. குறிப்பாக விஜய் ஆண்டனி சாருடன் வரும் உங்கள் அடுத்த படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

‘கொலை’ படத்தில் வேலை செய்துகொண்டிருந்தபோது கூட விஜய் ஆண்டனி சார் உங்களைப் பற்றி நிறையப் பேசுவார். அதனால் இன்று உங்களைச் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது சார்.

முருகதாஸ் சார் பற்றி சொல்ல வேண்டுமென்றால், நீங்கள் கொடுக்காத தாக்கமே இல்லை. உங்கள் படங்கள் தமிழ்நாட்டையே குலுக்கியிருக்கின்றன. இன்றைய பல மாற்றங்களுக்கும் நீங்கள் விதைத்த விதைகளே காரணம் என்று நான் நம்புகிறேன். எங்களுக்கெல்லாம் நீங்கள் ஒரு மிகப்பெரிய ஊக்கமளிப்பவர்.

ஜெய் ப்ரோவுடன் இந்தப் படத்தில் பணியாற்றியது ஒரு அருமையான அனுபவம். அவருடைய இசை அறிவு என்னை ஆச்சரியப்படுத்தியது. தயாரிப்பு விஷயங்களிலிருந்து இசையின் மிகச் சிறிய விவரங்கள் வரை என்னுடன் விவாதிப்பார். ‘இதை எப்படிச் செய்தீர்கள்?’, ‘இப்படிச் செய்தால் எப்படி இருக்கும்?’ என்று அருமையான ஆலோசனைகளை வழங்குவார். இந்தப் படத்தில் உங்களுடன் பணியாற்றியது மிகுந்த மகிழ்ச்சி ப்ரோ. படத்தைப் பார்த்தவுடன் உங்கள் ஸ்கிரீன் பிரசென்ஸ் அனைவருக்கும் புரியும்.

மீனாட்சி இந்தப் படத்தில் அற்புதமாக நடித்திருக்கிறார். அதேபோல் ரிச்சர்டின் வேலை எனக்கு முதல் படத்திலிருந்தே மிகவும் பிடிக்கும். இந்தப் படத்தில் அவர் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருப்பது எனக்கு ஃபுட்டேஜ் பார்க்கும்போதுதான் தெரியவந்தது. யாரும் அதைப் பற்றிச் சொல்லவில்லை. அது இந்தப் படத்தின் ஒரு இனிய சர்ப்ரைஸ் கேமியோ என்று நினைக்கிறேன்.

டார்லிங்கையும் ஒரு பொதுநண்பர் மூலமாகத்தான் எனக்குத் தெரியும். மிகவும் திறமையான எழுத்தாளர். இன்னும் நிறையப் படங்களில் நீங்கள் பணியாற்ற வேண்டும் ப்ரோ.

இப்போது இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொல்ல வேண்டும். அவரிடம் என்னை மிகவும் ஆச்சரியப்படுத்திய விஷயம் அவரது வேகமான முடிவெடுக்கும் திறன். அவருடைய பிசினஸ் பின்னணி காரணமாக இருக்கலாம்; எந்த விஷயத்திலும் உடனே தெளிவான முடிவை எடுப்பார். நான் இதுவரை பணியாற்றிய பல இயக்குநர்கள் நீண்ட நேரம் யோசிப்பார்கள். பலரது கருத்துகளால் முடிவுகளை மாற்றிக்கொள்வார்கள். ஆனால் பாபு விஜய் அப்படியில்லை. அவர் எடுத்த முடிவை யாராலும் மாற்ற முடியாது; அவர் நினைத்தாலும் கூட மாற்ற முடியாது. அந்த அளவுக்கு உறுதியான முடிவெடுப்பவர்.

அது எங்களைப் போன்ற டெக்னீஷியன்களுக்கு வேலை செய்வதை மிகவும் எளிதாக்குகிறது. நான் ஒரு டியூன் கொடுத்துவிட்டால், அது சரியானது என்று நம்பினால் மீண்டும் தேவையற்ற விவாதங்கள் இருக்காது. இப்படிப்பட்ட இயக்குநர்களுடன் பணியாற்றுவது எங்களுக்கெல்லாம் மிகவும் சுலபமாக இருக்கும். அதையும் தாண்டி அவருக்கு மிகச் சிறந்த இசை ரசனை உள்ளது. அவர் ரசித்து மகிழும் இசையை இந்தப் படத்தில் உருவாக்க வேண்டும் என்ற நம்பிக்கையோடு என்னை அணுகினார்.

ஒரு படத்தைத் தயாரித்து, இயக்கி, வெளியீட்டிற்குக் கொண்டு வருவது மிகவும் கடினமான விஷயம். அதுவும் முதல் படத்திலேயே அதைச் சாதித்திருக்கிறார். உண்மையில் இது ஒரு இமாலய சாதனை. இந்தப் பயணத்தில் பல சவால்கள் வந்தன. ஒவ்வொரு பிரச்சனையும் வந்தபோதும் அவர் எனக்கு ஃபோன் செய்வார். ‘பிரதர்…’ என்று குரல் சற்று தளர்ந்திருந்தால் ஏதோ பிரச்சனை என்று புரியும். அதே ‘பிரதர்…’ குரலில் உற்சாகம் இருந்தால் நல்ல செய்தி நடக்கிறது என்று அர்த்தம்.

இவ்வளவு சவால்களைத் தாண்டி இந்தப் படம் இன்று வெளியாகும் நிலைக்கு வந்துள்ளது. வரும் மே 15-ஆம் தேதி அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்தைப் பார்த்து ரசிக்க வேண்டும். அனைவருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். நன்றி.”

தொழிலதிபரும், Muthuraman Group of Companies நிறுவனங்களின் தலைவரும், முன்னாள் சென்சார் போர்டு உறுப்பினருமான திரு சிவகுமார் பேசியதாவது:

“வணக்கம். கிட்டத்தட்ட பத்து ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரு மேடையில் பேச வருகிறேன். கடைசியாக பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு படங்களைத் தயாரித்தேன். அதன் பிறகு சினிமா துறையிலிருந்து முழுமையாக விலகி தொழில் துறையில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். தற்போது ஏழு நாடுகளில் எங்களுடைய தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

எங்களுடைய தொழில் கூட்டாளர்களில் Daimler, BharatBenz, Samsung, Hyundai போன்ற பெரிய நிறுவனங்கள் உள்ளன. மொத்தமாக சுமார் 25 ஆயிரம் ஊழியர்கள் எங்களுடன் பணியாற்றுகிறார்கள். இந்த பத்து ஆண்டுகளில் நான் முழுமையாக தொழில் உலகில் பயணித்தேன். தற்போது புதிதாக 1200 கோடி ரூபாய் முதலீட்டில் ஒரு புதிய தொழிற்சாலையை அமைக்கும் பணிகளிலும் ஈடுபட்டிருக்கிறேன்.

இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்குக் காரணம் CFO சத்யநாராயணன் தான். ஒரு முக்கியமான தொழில் பணியில் அவர் எனக்கு உதவி செய்தார். நான் கொடுத்த ஒரு பெரிய பொறுப்பை வெற்றிகரமாகச் செய்து முடித்தார். அதனால்தான் நேற்று மாலை அவர் கேட்டவுடன் இந்த விழாவிற்கு வரச் சம்மதித்தேன். பொதுவாக நான் இப்படிப்பட்ட சினிமா விழாக்களுக்கும் வருவதில்லை; மேடைகளில் பேசுவதும் இல்லை.

இயக்குநர் விஜய் பாபுவின் அடுத்த படத்திற்கு நான் 100 கோடி ரூபாய் முதலீடு செய்து தயாரிக்கத் தயாராக இருக்கிறேன். அவர் ஒரு நல்ல கதையைச் சொல்லட்டும். எங்களுடைய நிறுவன அளவில் பார்த்தால் அந்த 100 கோடி என்பது பெரிய விஷயமல்ல. ஆனால் அவர் மீதும் CFO சத்யநாராயணன் மீதும் உள்ள நம்பிக்கையைக்காக அதைச் செய்யத் தயாராக இருக்கிறேன்.

சினேகன் எனக்கு மிகவும் நெருக்கமான நண்பர். பத்து வருடங்களுக்கு முன்பு இரண்டு மூன்று ஆண்டுகள் நாங்கள் நெருக்கமாகப் பழகியிருக்கிறோம். அவர் அதை மறந்திருக்கலாம்; ஆனால் இன்று இந்த மேடையில் அவரைப் பார்ப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

இந்த மாதிரியான பொதுவிழா மேடையில் பேசுவது எனக்கு முதல் அனுபவம். கிரிக்கெட் வாரியத்தில் இருந்த காலத்தில் நிறையப் பேசியிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு மீண்டும் மேடையேறுவது இதுவே முதல் முறை. அனைவருக்கும் நன்றி.”

தயாரிப்பாளர் தனஞ்செயன் பேசியதாவது:

“இன்று தமிழ்நாட்டின் முதல்வராக இருக்கும் திரு ஜோசப் விஜய் அவர்களுக்கும், இங்கே இருக்கும் மூன்று பேருக்கும் ஒரு முக்கியமான தொடர்பு இருக்கிறது. அதைப் பற்றிப் பேசுவதில் எனக்கு மகிழ்ச்சி. குறிப்பாக முருகதாஸ் சாரைப் பார்க்கும்போது அது இன்னும் பெருமையாக இருக்கிறது.

விஜய் சாரின் கேரியரை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்ற மூன்று முக்கியமான படங்கள் — ‘துப்பாக்கி’, ‘கத்தி’, ‘சர்கார்’. இந்த மூன்று படங்களும் விஜய் சாருக்கு எவ்வளவு பெரிய வெற்றி கொடுத்ததோ, அதேபோல் முருகதாஸ் சாரின் பயணத்தையும் மிகப்பெரிய அளவுக்கு உயர்த்தியது.

‘சர்கார்’ படத்தில் நீங்கள் காட்டிய அரசியல் விழிப்புணர்வு அசாதாரணம். ஒரு ஓட்டின் சக்தியை அந்த அளவுக்கு சொல்லி வைத்தது ஒரு முன்னோக்கிய பார்வை போல இருந்தது. ஏதோ ஒரு மாற்றம் வரப்போகிறது என்பதை நீங்கள் அப்போதே உணர்த்திவிட்டீர்கள்.

‘கத்தி’ படத்தில் விவசாயிகளின் பிரச்சனையை எடுத்துச் சென்ற விதம் மிகவும் உணர்ச்சிப்பூர்வமானது. அந்தப் படத்தில் விஜய் சார் கொடுத்த நடிப்பு குறித்து நான் அவரிடம் நேரிலேயே பாராட்டி இருந்தேன். கமர்ஷியல் படங்களில் இருந்த அவர், முதல் முறையாக அந்த அளவுக்கு எமோஷனலான மற்றும் அழகான நடிப்பைக் கொடுத்திருந்தார். அவர் அதைக் கேட்டு மிகவும் மகிழ்ந்தார்.

ஜெய் உண்மையிலேயே அன்பான தம்பி மாதிரி. தேர்தல் பிரச்சாரத்தின் போது விஜய் சாருக்காகச் சென்று பிரச்சாரம் செய்தது சாதாரண விஷயமல்ல. சினிமா துறையில் இருந்து ஒருவராகத் திறந்தவெளியில் அரசியல் ஆதரவு கொடுப்பது அவ்வளவு எளிதல்ல. ஆனால் ‘என் அண்ணன் ஜெயிப்பார்’ என்ற நம்பிக்கையுடன் அவர் சென்றார். சமூக வலைதளங்களில் தொடர்ந்து வீடியோக்கள், ரீல்ஸ் வெளியிட்டார். இன்று அந்த நம்பிக்கை உண்மையாகி, விஜய் சார் முதல்வராகியிருக்கிறார். அது நமக்கு மட்டுமல்ல, முழு சினிமா துறைக்கும் பெருமை.

அவர் தமிழ்நாட்டுக்கும், சினிமா துறைக்கும் நல்லது செய்வார் என்ற நம்பிக்கை எல்லோரிடமும் இருக்கிறது. ஜெய் ஆரம்பத்தில் விஜய் சாருக்குத் தம்பியாக நடித்தவர். இன்று இந்தப் படத்தின் டிரெய்லரைப் பார்த்தால், சின்ன தளபதி மாதிரி ஒரு தனி மேனரிசத்துடன் காமெடியும் நடிப்பும் கலந்த ஒரு தனித்துவம் இருக்கிறது.

இனிமேல் திரையில் விஜய் சாரைப் பார்க்க முடியாது. ஆனால் அந்த வெற்றிடத்தை நிரப்பும் திறன் ஜெய்க்கு இருக்கிறது. நல்ல கதைகள் கிடைத்தால், உங்கள் அண்ணனைப் போல நீங்களும் பெரிய உயரத்திற்குப் போக முடியும்.

பாபு விஜய் ஒரு பெரிய தொழில் நிறுவனத்தை நடத்தும் குடும்பத்தைச் சேர்ந்தவர். அப்படியிருக்கும்போது, BOFTA திரைப்படக் கல்லூரியின் முதல் பேட்ச்சில் மாணவனாகச் சேர்ந்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ‘எனக்கு ஒரே குறிக்கோள் — விஜய் சாரோடு ஒரு படம் செய்ய வேண்டும்’ என்று அப்போதே சொன்னார்.

முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராகச் சேர வேண்டும் என்று என்னிடம் கேட்டார். நான் முருகதாஸ் சாரிடம் பேசினேன். அவர் வாய்ப்புக் கொடுத்தார். ‘சர்கார்’ படத்தில் அவர் அசோசியேட்டாக வேலை செய்தார். அப்போது அவர் என்னிடம், ‘சார், என் கனவு நனவாயிடுச்சு. முருகதாஸ் சாரோட சேர்ந்து விஜய் சாரோட படத்தில் வேலை பண்ணிட்டேன்’ என்று மகிழ்ச்சியுடன் சொன்னார்.

அதற்குப் பிறகு அவருடைய கனவு, தானே ஒரு படம் இயக்க வேண்டும் என்பதுதான். அதுதான் இன்று ‘சட்டென்று மாறுது வானிலை’ என்ற படமாக உருவெடுத்துள்ளது.

அவருடைய குடும்பமும் நண்பர்களும் முழுமையாக நம்பிக்கை வைத்து இந்தப் படத்தைப் பெரிய அளவில் தயாரித்திருக்கிறார்கள். இந்தப் படத்தில் BOFTA-வின் முதல் பேட்ச் மாணவர் ஒருவர் எடிட்டராகவும், பாபு விஜய் இயக்குநராகவும் அறிமுகமாகிறார்கள். அவருடைய குருவாக இருந்த முருகதாஸ் சார் இந்த விழாவில் இருப்பதும், BOFTA-வில் அவர்களுக்குக் கற்றுக் கொடுத்த சசிகுமார் சார் இங்கே இருப்பதும் எங்களுக்குப் பெருமை.

முதல் படம் என்பதால் ஒரு சின்ன, எதார்த்தமான படமாக ஆரம்பிக்கலாம் என்று நான் அவரிடம் சொன்னேன். ஆனால் அவர், ‘நான் கமர்ஷியல் இயக்குநரிடம் இருந்து வந்தவன். எனது முதல் படம் கமர்ஷியல் படமாகத்தான் இருக்கும்’ என்றார். அதற்கேற்ற மாதிரி இந்தப் படம் உருவாகியுள்ளது.

முருகதாஸ் சார் படங்களில் இருப்பது போலவே இதில் என்டர்டெயின்மென்ட்டும் இருக்கும்; அதே நேரத்தில் சமூகப் பொறுப்புள்ள ஒரு கருத்தும் இருக்கும். பாபு விஜய் தனது முழு முயற்சியையும் இந்தப் படத்தில் கொடுத்திருக்கிறார்.

இறுதியாக, இந்தப் படம் அனைவரையும் சென்றடையும் என்று நம்புகிறேன். ஊடக நண்பர்கள் இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவைக் கொடுக்க வேண்டும். இன்று தளபதி விஜய் மிகப்பெரிய சாதனையைச் செய்து தமிழ்நாட்டின் முதல்வராக உயர்ந்திருக்கிறார். அவருடன் தொடர்புடைய பலர் இணைந்து உருவாக்கிய இந்தப் படைப்பும் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று உங்கள் ஆதரவைக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி.”

நடிகர் கதிர் பேசியதாவது:

“‘சட்டென்று மாறுது வானிலை’ எனக்கு மிகவும் ஸ்பெஷலான படம். எனக்கு எப்போதுமே விஜய் சாருடன் சேர்ந்து நடிக்க வேண்டும் என்ற ஆசை இருந்தது. ஆனால் அப்போது அவர் அரசியலுக்கு வந்துவிட்டார். அதனால் அவருடன் நேரடியாக நடிக்க முடியாத ஒரு குறை இருந்தது. ஆனால் ஜெய் சாருடன் இந்தப் படத்தில் நடித்தபோது, விஜய் சாருடன் நடித்த உணர்வே கிடைத்தது. படம் முழுவதும் அவர் அந்த மாதிரியான ஒரு ஆற்றலோடு நடித்திருக்கிறார்.

அதிலும் முக்கியமாக, படம் சரியாக முடிந்து, ரிலீஸ் ஆகும் நிலைக்கு வந்திருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. ஏனென்றால் நாம் ஒரு படத்தில் நடித்தாலும், அது மக்களிடம் சென்று சேர வேண்டுமென்றால் படம் வெளியாவதே முக்கியம். அந்த விஷயத்தை நீங்கள் வெற்றிகரமாகச் செய்து முடித்திருக்கிறீர்கள். அதற்காக மிகவும் மகிழ்ச்சி.

மீனாட்சி மேம் உடன் நடித்ததும் ஒரு நல்ல அனுபவம். ஒவ்வொரு காட்சியிலும் நீங்கள் உணர்ச்சிபூர்வமாகவும், அதே நேரத்தில் மிகவும் இயல்பாகவும் நடித்திருக்கிறீர்கள். முருகதாஸ் சார் இருக்கும் இந்த மேடையில் நானும் இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. அதேபோல் போஸ் வெங்கட் சார், தனஞ்செயன் சார், ரிச்சர்ட் அண்ணா, சினேகன் சார் மற்றும் இங்கே இருக்கும் அனைவருடனும் இந்த விழாவில் இருப்பது மகிழ்ச்சி.

ஊடக நண்பர்கள் இந்தப் படத்தைப் பார்த்து மகிழுங்கள், நல்ல முறையில் எழுதுங்கள். இன்று மக்கள் திரையரங்கிற்கு வருவது முழுமையான பொழுதுபோக்கை எதிர்பார்த்துதான். அந்த எல்லா அம்சங்களும் இந்தப் படத்தில் இருக்கின்றன. அதனால் அனைவரும் இந்தப் படத்துக்கு ஆதரவு தர வேண்டும். நன்றி.”

பாடலாசிரியர் சினேகன் பேசியதாவது:

“இந்தப் படத்தில் பணியாற்றிய அனுபவம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. குறிப்பாக ஒரு இசையமைப்பாளர், கவிதைகளுக்கும் வரிகளுக்கும் உண்மையான ரசிகராக இருப்பது ஒரு பாடலாசிரியருக்கு மிகப்பெரிய சந்தோஷம். சாதாரணமாக ஒரு மெட்டு கிடைத்தாலே போதும், அதற்குள் வரிகளைப் பொருத்திவிடலாம் என்ற மனநிலை பல இடங்களில் இருக்கும். ஆனால் வரிகளை ரசித்து, படைப்பாளிகளையும் கவிஞர்களையும் ஊக்கப்படுத்தும் இசையமைப்பாளர்கள் மிகவும் அரிது.

அந்த வரிசையில் இன்று மிக அழகாக வளர்ந்து கொண்டிருப்பவர் இந்தப் படத்தின் இசையமைப்பாளர். தமிழ் வரிகளையும் கவிதைகளையும் அவர் ரசிக்கும் விதம் எனக்கு மிகவும் பிடித்தது. இந்தப் படத்தில் நான் இரண்டு பாடல்கள் எழுதியிருக்கிறேன். ஒன்று ‘சட்டென்று மாறுது வானிலை’, இன்னொன்று ‘உயிரே’. அந்த இரண்டு பாடல்களையும் நாங்கள் சேர்ந்து உருவாக்கினோம்.

மீதமுள்ள ஒரு பாடலை வேறு குழுவாகச் சேர்ந்து எழுதியிருந்தார்கள். அப்போது கூட நாங்கள் சிரித்துக்கொண்டே, ‘அந்த ஒரு பாடலையாவது எங்களுக்குக் கொடுங்கள்’ என்று சொன்னோம். ஆனால் அவர்கள், ‘இது நாங்கள் கூட்டமாகச் சேர்ந்து எழுதிக்கொண்டிருக்கிற பாடல்; இதற்குள் நீங்கள் வராதீர்கள்’ என்று நகைச்சுவையாகச் சொன்னார்கள். அந்த முழு அனுபவமும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

பாபு விஜய் சாரைப் பார்க்கும்போது என்னை மிகவும் கவர்ந்த விஷயம் அவரது எளிமை. அவர் ஒரு பெரிய தொழிலதிபர் என்று சொன்னபோது எனக்கு ஆச்சரியமாக இருந்தது. ஏனென்றால் ஒரு பக்கம் வியாபாரத்தைக் கவனித்துக்கொண்டு, இன்னொரு பக்கம் கலை உலகத்தில் முழுமையாக இறங்குவது மிகவும் கடினம். பொதுவாக ஒருவருக்குக் கணக்குப் பார்ப்பதிலோ அல்லது கலையை ரசிப்பதிலோ தான் முழு கவனம் இருக்கும். ஆனால் இந்த இரண்டு உலகங்களையும் சமநிலையுடன் கையாண்டு, இப்படத்தை ஒரு அழகான படைப்பாக உருவாக்கியிருக்கிறார்.

இந்த மேடையில் இவ்வளவு நாட்களுக்குப் பிறகு ஊடக நண்பர்களையும், பல பழைய நண்பர்களையும் சந்திப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இன்றைய நவீன உலகத்தில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் நேரில் சந்திப்பதே ஒரு திருவிழா போல ஆகிவிட்டது. எல்லாமே பிரிந்து போயிருக்கும் இந்த காலத்தில், முகத்தைப் பார்த்துப் பேசும் ஒரு அருமையான வாய்ப்பைப் இந்தப் படம் கொடுத்திருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்த இயக்குநர்களில் சசி சார் மற்றும் முருகதாஸ் சார் இருவரும் முக்கியமானவர்கள். அவர்களுடன் நேரடியாக வேலை செய்யவில்லை என்றாலும், அவர்களுடைய ரசிகனாக நான் எப்போதும் ஒரு மூலையில் இருப்பேன்.

ஜெய் சாரைப் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், அவரைப் பார்க்கும்போதெல்லாம் புதிதாகப் பள்ளியில் சேர்ந்த ஒரு குழந்தையைப் போலவே தோன்றுவார். எவ்வளவு பெரிய கூட்டம் இருந்தாலும், எவ்வளவு அனுபவம் இருந்தாலும், அவரிடம் ஒரு குழந்தைத்தனமான குணம் இருக்கும். அதுதான் அவருடைய மிகப்பெரிய பலம் என்று நான் நினைக்கிறேன்.

இந்தப் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியது எனக்கு ஒரு வரமாக அமைந்தது. குறிப்பாக நான் எழுதிய பாடல்களுக்கு அவர் கொடுத்த முக்கியத்துவம் மிகவும் பெரிய விஷயம். இன்றைய காலகட்டத்தில் பாடல்கள் சின்னச் சின்னப் பகுதிகளாக வெட்டி சமூக வலைதளங்களில் கொண்டாடப்படும் நிலை இருக்கிறது. அப்படிப்பட்ட சூழலில் முழுமையான நீளமான பாடல்களும், நல்ல தமிழ்ச் சொற்களும் கொண்ட பாடல்கள் வருவது அரிது.

அந்த வகையில் இந்தப் படத்தில் நான் எழுதிய இரண்டு பாடல்களும் மக்கள் திரும்பத் திரும்பக் கேட்கும் பாடல்களாக அமையும் என்று நம்புகிறேன். அந்த வாய்ப்பை அளித்த இசையமைப்பாளருக்கும், இயக்குநருக்கும் என் மனமார்ந்த நன்றியும் வாழ்த்துகளும்.”

நடிகை மீனாட்சி பேசியதாவது:

“அனைவருக்கும் வணக்கம். பாபு விஜய் சாருக்கு நான் ஒரு சிறப்பு நன்றி சொல்ல வேண்டும். இந்த வாய்ப்பை எனக்கு வழங்கியதற்காக மிகவும் நன்றி சார். நம்முடைய பயணத்தில் நிறையத் தடைகள் இருந்தன. ஆனாலும் அவற்றையெல்லாம் தாண்டி இன்று இந்த நிகழ்வை நடத்தும் நிலைக்கு வந்திருக்கிறோம். என்னை நம்பி இந்த வாய்ப்பைக் கொடுத்ததற்கு மனமார்ந்த நன்றி.

ஜெய் சாருடன் இது என்னுடைய இரண்டாவது படம். மீண்டும் அவருடன் பணியாற்றியது மிகவும் மகிழ்ச்சியான அனுபவமாக இருந்தது. அதேபோல் ரிச்சர்ட் சாருக்கு ஒரு சிறப்பு நன்றி. எங்களை அனைவரையும் திரையில் மிகவும் அழகாகக் காட்டியிருக்கிறார்.

இந்தப் படத்தில் பணியாற்றிய மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் மற்றும் முழு குழுவினருக்கும் என் நன்றிகள். வரும் மே 15-ஆம் தேதி படம் வெளியாகிறது. அனைவரும் திரையரங்கிற்கு வந்து இந்தப் படத்திற்கு உங்கள் ஆதரவை அளிப்பீர்கள் என்று நம்புகிறோம். நன்றி.”

இயக்குநர் சசி பேசியதாவது:

“பாபு விஜய் என்னிடம் வந்து ‘நான் ஒரு படம் இயக்கப் போகிறேன்’ என்று சொன்னபோது, முதலில் நான் ‘யார் தயாரிப்பாளர்?’ என்று கேட்டேன். அதற்கு அவர், ‘நான்தான் சார் தயாரிப்பாளர்’ என்றார். அதைக் கேட்டவுடன் எனக்குக் கொஞ்சம் பதட்டமாக இருந்தது. முதல் படமே இயக்கி, அதையும் தானே தயாரிப்பது ஏன் இந்த அளவுக்குப் பெரிய பரீட்சை என்று தோன்றியது.

அவர் எத்தனை நாட்களில் படத்தை முடிப்பீர்கள் என்று சொன்னபோதும் எனக்கு ஒரு பயம் இருந்தது. இவ்வளவு குறுகிய காலத்தில் ஒரு படத்தை எப்படி அந்த அளவுக்குத் தரமாக முடிக்க முடியும் என்று நினைத்தேன். ஆனால் இன்று டிரெய்லர், பாடல்கள், அவற்றின் விஷுவல்ஸ் எல்லாம் பார்த்த பிறகு நான் உண்மையாகவே அதிர்ச்சியிலும் ஆச்சரியத்திலும் இருக்கிறேன். ஒரு இயக்குநராக இதைப் பார்த்து மிகவும் பிரமிப்பாக இருக்கிறது.

முதலில் நான் நன்றி சொல்ல வேண்டியது ரிச்சர்ட்டின் ஒளிப்பதிவிற்குத்தான். ரிச்சர்ட் இல்லாமல் இந்த அளவுக்குக் குறுகிய காலத்தில் இவ்வளவு தரமான காட்சிகளை உருவாக்குவது சாத்தியமே இல்லை. அவருக்கு உண்மையாகவே ‘ஹாட்ஸ் ஆஃப்’. அதேபோல் கிரிஷின் இசையும் மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது. பாடல்களும் சிறப்பாக வந்துள்ளன. குறிப்பாக பாரதியார் பாடலில் ராப் கலந்த விதம் மிகவும் அருமையாக இருந்தது.

பாபு விஜய் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், நான் பாஃப்டாவில் (BOFTA) வகுப்பு எடுத்துக்கொண்டிருந்தபோது ஒவ்வொரு ஆண்டும் சில மாணவர்கள் மட்டும் தனியாகக் கவனிக்கப்படுவார்கள். அப்படிப்பட்ட மாணவர்களில் ஒருவர் தான் பாபு விஜய். அவர்கள் எக்ஸாம், டெஸ்ட்டுக்காக எடுத்த குறும்படங்களே, ‘இவர் யார்?’ என்று எங்களைத் திரும்பிப் பார்க்க வைத்துவிடும். அந்த மாதிரி நான் குறிப்பாக நினைவில் வைத்திருந்த மாணவர்தான் இவர்.

அவருடைய படம் எப்படி இருக்கும் என்று நான் மிகவும் ஆர்வமாகக் காத்திருந்தேன். அவர் ஒருமுறை இந்தக் கதையின் மையக் கருத்தை மட்டும் என்னிடம் சொன்னார். அது மிகவும் இயல்பான, நம்ம வாழ்க்கையில் நடந்திருக்கக்கூடிய ஒரு விஷயமாக இருந்தது. அந்த ஒரு கருத்தே இந்தப் படத்தை வெற்றிகரமான இடத்திற்குக் கொண்டு செல்லும் என்று நான் அப்போதே நம்பினேன்.

மாணவராக இருந்தபோது பாபு விஜய் என்னிடம் எப்படி ஒரு பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கினாரோ, அதே எதிர்பார்ப்பை இந்த டிரெய்லரும் பாடல்களும் மீண்டும் கொடுத்திருக்கின்றன. ஜெய் சாரின் முக்கியமான படங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும் என்று நான் நம்புகிறேன். பாபு விஜய்க்கும், இந்தப் படக்குழுவினருக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள். அனைவருக்கும் நன்றி.”

இயக்குநர் முருகதாஸ் பேசியதாவது:

“அனைவருக்கும் இனிய மாலை வணக்கம். இன்று பாபு விஜய்யின் முதல் இயக்கம் மற்றும் தயாரிப்பாளராக அறிமுகமாகும் பட விழாவில் கலந்து கொள்வதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சி. என்னுடைய முதல் படம் வெளியான போது நான் எவ்வளவு ஆர்வத்துடனும் உற்சாகத்துடனும் இருந்தேனோ, அதே உணர்வை இன்று பாபு விஜய்யிடம் பார்க்கிறேன்.

பாபு விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர். அவருடன் வேலை செய்த அனைத்து டெக்னீஷியன்களுக்கும் ஒரு விஷயம் தெரியும் — ஆரம்பத்தில் வேலைக்கு அழைக்கும் போது நல்ல சம்பளம் பேசிவிடுவார். ஆனால் படம் முடியும் நேரத்தில் தான் புரியும்; அவர் எல்லோரிடமிருந்தும் மூன்று மடங்கு உழைப்பை வாங்கியிருப்பார். அது அவருடைய அர்ப்பணிப்பு.

ஒரு சுவாரஸ்யமான சம்பவம் ஞாபகம் வருகிறது. ‘சர்கார்’ படத்தின் போது நடந்தது. படம் முடிந்த பிறகு ஒரு இன்டர்வியூ நிகழ்ச்சி நடந்தது. அதில் நான், ஹீரோயின் மற்றும் பழ.கருப்பையா சார் கலந்து கொண்டோம். அப்போது பழ.கருப்பையா சார் பாபு விஜய்யை அழைத்து, “எனக்கு அரசியல் மேடைகளில் பேசத் தெரியும். ஆனால் சினிமா இன்டர்வியூ கொடுக்கத் தெரியாது. என்ன பேசுவது?” என்று கேட்டார்.

அதற்கு பாபு விஜய், “சார், நீங்கள் முதலில் இந்தப் படத்தில் நடிக்கப் பயந்தீர்கள். ‘நான் அரசியலில் இருக்கிறேன், வில்லன் கதாபாத்திரம் எப்படிச் செய்வது?’ என்று கேட்டீர்கள். அப்போது நான், ‘உங்கள் பேரப்பிள்ளைகளிடம் கேளுங்கள்’ என்றேன். அவர்கள் ‘விஜய் சார் படம் என்றால் கண்டிப்பாகச் செய்யுங்கள், நீங்கள் மக்களிடம் நன்றாக ரீச் ஆகுவீர்கள்’ என்று சொன்னார்கள். அதையே சொல்லுங்கள் சார்,” என்று கூறினார்.

இன்டர்வியூ ஆரம்பித்ததும், பழ.கருப்பையா சார் தொடர்ந்து “பாபு விஜய்… பாபு விஜய்…” என்று பெயரைச் சொல்லிக்கொண்டே பேச ஆரம்பித்தார். நான் பக்கத்தில் இருந்தபடி, ‘இவ்வளவு தடவை என் பெயரைச் சொல்கிறாரே!’ என்று ஆச்சரியப்பட்டேன். அந்த நேரம் இன்றும் மறக்க முடியாத நினைவு.

அதுமட்டுமல்ல, எனக்கு மிகவும் கடினமான காலங்களில் பாபு விஜய் என்னுடன் இருந்திருக்கிறார். ஒரு படம் வெளியானபோது, போஸ்டர்கள் கிழிக்கப்பட்டு பெரிய பிரச்சனைகள் நடந்துகொண்டிருந்தன. போலீஸ் சூழ்ந்திருந்த சூழ்நிலையில், நாங்கள் இருவரும் டிண்டட் கிளாஸ் கொண்ட காரில் அமைதியாக உட்கார்ந்து காசி தியேட்டர் அருகே நடந்ததைப் பார்த்துக்கொண்டிருந்தோம். போஸ்டர்கள் கிழிக்கப்படுவதைப் பார்த்தபோது கண்களில் தண்ணீர் வந்தது. அந்த மாதிரி கடினமான நேரத்திலும் அவர் என்னுடன் இருந்தார்.

இன்று காலை கூட அவர் என்னிடம், “சார், அந்தச் சம்பவத்தைப் பேசுங்க” என்று சொன்னார். இப்போ பார்த்தீங்களா? மறுபடியும் அதையே பேச வைத்துவிட்டார். அதுதான் பாபு விஜய்யின் திறமை. மிகவும் நேர்மையானவர், உழைப்பாளி.

என்னிடம் இருந்து இதுவரை பன்னிரண்டு உதவி இயக்குநர்கள் இயக்குநர்களாகி இருக்கிறார்கள். அதில் இன்று பாபு விஜய்யின் முதல் படம் வெளிவருவது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. தினமும் காலையில் ஏழு, ஏழரை மணிக்கே காரில் கீழே நின்றுகொண்டிருப்பார். ரெடியாக எல்லா ரிஹர்சல்களையும் செய்து வைத்திருப்பார். அந்த அளவுக்கு உழைப்பாளி. என்னைக் கூட சோம்பேறியாக்கிய உதவி இயக்குநர்களில் முக்கியமானவர் பாபு விஜய்.

இன்று அவர் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் அறிமுகமாகியிருக்கிறார். இந்தப் படம் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று நான் வாழ்த்துவதல்ல, இறைவனை வேண்டிக்கொள்கிறேன்.

ஜெய் பற்றியும் சொல்ல வேண்டும். அவருடனும் எனக்கு ஒரு நல்ல கனெக்ஷன் இருக்கிறது. என் தயாரிப்பில் வந்த ‘எங்கேயும் எப்போதும்’ படத்தில் அவர் ஹீரோவாக நடித்தார். அதன் பிறகு ‘ராஜா ராணி’. இப்போது இது மூன்றாவது முக்கியமான கூட்டணி போல இருக்கிறது. இது ஹாட்ரிக் வெற்றியாக அமைய வேண்டும்.

ஜெய் மிகவும் நல்ல நடிகர். அவருடைய காமெடி டைமிங் அருமை. திரையில் மட்டுமல்ல, நேரில் பேசினாலும் அதே நகைச்சுவை உணர்வு இருக்கும்.

மீனாட்சி ஒரு கிளாசிக்கல் டான்சர். என் மகளும் அவரும் ஒரே குருவிடம் நடனம் கற்றவர்கள். அதனால் அவரை முன்பே பார்த்திருக்கிறேன். இந்தப் படத்தில் அவர் மிகவும் அழகாகவும் நன்றாகவும் நடித்திருக்கிறார். தமிழ் சினிமாவில் அவருக்கு நல்ல எதிர்காலம் அமைய வேண்டும் என்று வாழ்த்துகிறேன்.

ஒளிப்பதிவாளர் ரிச்சர்டின் வேகத்தைப் பற்றித் தெரிந்துகொண்டேன். “ரொம்ப ஃபாஸ்ட் சார்” என்று சொன்னார்கள். வேகமாக வேலை செய்வது ஒரு விஷயம்; அதே நேரத்தில் தரத்தையும் கொடுப்பது மிகவும் கடினம். ஆனால் ரிச்சர்ட் அதைச் சாதித்திருக்கிறார். செலவழித்த பணத்தைத் திரையில் தரமாகக் காட்டுவது ஒரு கேமராமேனின் மிகப்பெரிய பொறுப்பு. அதைச் சிறப்பாகச் செய்திருக்கிறார்.

எடிட்டரும் மிகச் சிறப்பாக வேலை செய்திருக்கிறார். இசையும் அருமை. குறிப்பாக அந்த “பீவர் என்று…” பாடலின் வைப்ரேஷன் கேட்கும்போதே மிகவும் நன்றாக இருந்தது. பாடல்களும் விஷுவல்ஸும் தரமாக இருந்தன.

பல தடைகள், போராட்டங்களைத் தாண்டி பாபு விஜய் இந்தப் படத்தை உங்கள் முன் கொண்டு வந்திருக்கிறார். அதனால் பத்திரிக்கை நண்பர்கள், தொலைக்காட்சி நண்பர்கள், யூடியூபர்கள் அனைவரும் இந்தப் படத்துக்கு நல்ல ஆதரவு கொடுக்க வேண்டும். பாபு விஜய் இயக்குநராகவும் தயாரிப்பாளராகவும் வெற்றி பெற வேண்டும் என்று நான் மனதார வாழ்த்துகிறேன். நன்றி. வணக்கம்.”

இயக்குநர் பாபு விஜய் பேசியதாவது:

“முதலில் ஆண்டவனுக்கு நன்றி. இப்படி ஒரு அற்புதமான தருணத்தையும், உங்கள் அனைவரின் வாழ்த்துகளையும் கொடுத்ததற்கு. என் பெற்றோருக்கு என் மனமார்ந்த அன்பும் நன்றியும். அதைவிட முக்கியமாக என் மனைவி லக்ஷ்மி சர்மாவுக்கு நான் பெரிய நன்றி சொல்ல வேண்டும். அவர்கள் இல்லையென்றால் இன்று நான் இந்த இடத்தில் இருக்க முடியாது. எல்லா வகையிலும் என்னை முழுமையாக ஆதரித்தவர் அவர் தான்.

அதேபோல் என் நண்பர் சத்யநாராயணன். நான் சோர்ந்து போன நேரங்களில் எல்லாம் என்னைத் தாங்கிப் பிடித்து, ‘உங்களால் முடியும்’ என்று சொல்லி என்னைத் தொடர்ந்து ஊக்கப்படுத்தியவர். அவருக்கும் என் நன்றி.

எனக்கு சினிமா என்றால் மனதில் முதலில் வருவது ஒரே ஒரு பேர் — A.R. முருகதாஸ் சார். எனக்கு ஆரம்பத்தில் இயக்குநராக வேண்டும் என்ற ஆசையே இல்லை. ‘ரமணா’ படம் பார்த்ததிலிருந்து முருகதாஸ் சாரிடம் உதவி இயக்குநராக ஒரு படம் வேலை செய்தாலே போதும் என்ற ஆசை மட்டும் தான் இருந்தது. அந்த அளவுக்கு அவர் மீது ஒரு பைத்தியக்காரமான அன்பு. நான் ஒரு பெண்ணாகப் பிறந்திருந்தால், அவர்களுடைய வீட்டில் பெரிய பிரச்சனை வந்திருக்கும் அளவுக்கு அவர் மீது காதல் இருந்தது.

சாருக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன். ஏனென்றால் அவர் மற்றவர்களுக்காக அதைவிட அதிகமாகச் செய்வார். குறிப்பாக உதவி இயக்குநர்களுக்காக. இன்று நான் இங்கே நிற்பதற்கும், இந்தப் படம் உருவானதற்கும் காரணம் நான் அவரிடம் கற்றுக்கொண்ட விஷயங்கள்தான்.

உண்மையில் அவரிடம் இருந்து நான் கற்றது ஐந்து சதவீதம் கூட இருக்காது. அந்த ஐந்து சதவீதத்திற்குத்தான் நீங்கள் இவ்வளவு பாராட்டுகள் சொல்கிறீர்கள். அவரை முழுமையாக யாராலும் கற்றுக்கொள்ள முடியாது.

முருகதாஸ் சார் உதவி இயக்குநர்களை வேலை செய்ய விடுவார். அது சரியா, தவறா என்று முதலில் கேட்க மாட்டார். முதலில் செய்யச் சொல்வார். பிறகு திருத்துவார். உதவி இயக்குநர்களை எப்படி நடத்த வேண்டும் என்பதற்கே அவர் ஒரு பெரிய எடுத்துக்காட்டு.

அவருடன் வேலை செய்தால் வெளியுலகமே தெரியாது. அந்த அளவுக்கு எல்லா விஷயங்களையும் பகிர்ந்து கற்றுக்கொடுப்பார். நான் படம் தயாரிக்கப் போகிறேன் என்று முடிவு செய்தவுடன் முதலில் தனஞ்செயன் சாரைச் சந்தித்தேன். அவர் சொன்ன ஆலோசனைகள் இந்தப் படத்தில் மிகவும் உதவியாக இருந்தது.

தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றி. முதலில் ரிச்சர்ட் சார். உண்மையில் இந்தப் படம் இந்த அளவுக்குத் தரமாக வந்ததற்கு மிகப்பெரிய காரணம் அவர். நான் முதலில் அவரை அணுகவே இல்லை. பெரிய கேமராமேன், சின்ன படம் என்று நினைத்தேன். ஆனால் அவருக்கே விஷயம் தெரிந்து அவர் என்னைத் தொடர்பு கொண்டார். ‘நான் இந்தப் படம் பண்ணுறேன்’ என்றார்.

அது பெரிய விஷயம் — இன்று வரை அவர் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. ‘நீங்கள் முதல் முறையாகத் தயாரிக்கிறீர்கள். பணம் முக்கியமில்லை’ என்று சொல்லிவிட்டு முழு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார். ஒரு கேமராமேன் மாதிரி அல்ல, ஒரு தயாரிப்பு நிர்வாகி மாதிரி வேலை பார்த்தார். இந்தப் படத்துக்கு அவர் செய்த உதவியை நான் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாது.

இசையமைப்பாளர் கிரிஷ், அவர் ஒரு நல்ல லிஸனர் (Listener). நாங்கள் என்ன நினைக்கிறோம் என்பதைப் பொறுமையாகக் கேட்டு, அதற்குச் சரியான இசையைத் தருவார். நாங்கள் சொல்ல முடியாத உணர்வுகளை இசையாக மாற்றிவிடுவார்.

கதாநாயகி மீனாட்சியை முதலில் ஒரு நிகழ்ச்சியில் பார்த்தேன். இந்தக் கதைக்குச் சரியானவர் இவர்தான் என்று தோன்றியது. அவரைத் தொடர்பு கொள்வதில் கொஞ்சம் சிரமம் இருந்தது. ஆனால் கதை கேட்டவுடன் உடனே ஒப்புக்கொண்டார்கள். அவருக்கும் என் நன்றி.

ஜெய் சாரை அணுகும் முன்பே நிறையப் பேர் என்னிடம் எதிர்மறையாகப் பேசினார்கள். ‘ஜெய்யா? அவர் ஷூட்டிங்கே வரமாட்டார்’, ‘அவரை வைத்து படம் எடுக்க முடியாது’, ‘அது வேலை ஆகாது’ என்று பலரும் சொன்னார்கள். ஒருநேரம் எனக்கே கொஞ்சம் பயமாக இருந்தது.

அப்போது சரவணா சாரிடம் பேசினேன். அவர் என்னிடம் ஒரு விஷயம் சொன்னார் — ‘அவர் ஒரு குழந்தை மாதிரி. சரியாகப் பழகி, அவரைப் புரிந்து கொண்டு நடத்தினால், உங்களைவிட முன்னாடியே ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்து நிற்பார்’ என்றார்.

அது உண்மையிலேயே அப்படித்தான் நடந்தது. ஜெய் சார் உண்மையில் ஒரு குழந்தை மாதிரி. நடுவில் சில பிரச்சனைகள் வந்தாலும், அமைதியாக விளக்கிப் பேசினால் உடனே புரிந்துகொள்வார். ஒரு ஹீரோவாக ஷூட்டிங் ஸ்பாட்டில் எந்த ஈகோவும் காட்ட மாட்டார். கேரவனுக்குப் போனால் நேரம் ஆகிவிடும், லைட்டிங் மாறிவிடும் என்று நினைத்து, அங்கேயே உடை மாற்றிக்கொள்வார். அந்த அளவுக்கு அர்ப்பணிப்புடன் வேலை செய்தார்.

அவர் ஒரு சிறந்த நடிகர். உண்மையாகச் சொன்னால், அவரை இன்னும் முழுமையாக எந்த இயக்குநரும் பயன்படுத்தவில்லை — என்னையும் சேர்த்துச் சொல்கிறேன். படம் பார்க்கும்போது எனக்கே தோன்றியது, ‘இவரை வைத்து இன்னும் எவ்வளவு பெரிய கதைகள் செய்யலாம்!’ என்று. அந்த அளவுக்கு அற்புதமான பர்ஃபார்மன்ஸ் கொடுத்தார். மிகவும் ஒத்துழைப்பானவர்.

அவரைப் பற்றிச் சிலருக்குத் தவறான எண்ணங்கள் இருக்கலாம். சில சம்பவங்களை வைத்து அவரைத் தவறாகப் புரிந்துகொண்டிருக்கலாம். ஆனால் உண்மையில் அவர் மிகவும் நல்ல மனிதர். ரொம்ப நல்ல மனசு. “தேங்க் யூ செல்லம்… லவ் யூ,” என்று உணர்ச்சியுடன் பேசினார்.

அனைத்து டெக்னீஷியன்களும் இந்தப் படத்துக்காக மிகவும் கடினமாக உழைத்தார்கள். ஆனால் அது வெறும் வேலை இல்லை — அன்போடு செய்த வேலை. எல்லோரும் மகிழ்ச்சியுடன் வேலை செய்தார்கள். அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி.

“A.R. முருகதாஸ் சாரின் ‘சர்கார்’ படத்தில்தான் என் உதவி இயக்குநர் வாழ்க்கை ஆரம்பித்தது. இன்று சிஎம் விஜய் சாராக அவர் உயர்ந்திருக்கும் நேரத்தில், அவருடைய ‘சர்கார்’ காலத்தில், இன்று என் முதல் படம் வெளிவருகிறது. அதற்கான வாய்ப்பைக் கொடுத்த முருகதாஸ் சாருக்கும் இந்த பிரபஞ்சத்திற்கும் நான் நன்றி சொல்கிறேன்.

இந்தப் படத்தில் விஜய் சார் ரெஃபரன்ஸ்கள் இருக்கின்றன என்று சிலர் சொல்கிறார்கள். அது உண்மைதான். ஏனென்றால் நான் அவருடைய ரசிகன். எங்கள் படம் மே 15 வருகிறது. அனைவரும் ஆதரவு தாருங்கள். நன்றி.”

நடிகர் ஜெய் பேசியதாவது:

“இங்கே வந்திருக்கும் அனைத்துப் பெரியவர்களுக்கும், மீடியா நண்பர்களுக்கும், பத்திரிக்கை நண்பர்களுக்கும், நண்பர்கள் மற்றும் குடும்பத்தினருக்கும் என் மனமார்ந்த நன்றி. குறிப்பாக A.R. முருகதாஸ் சார், சசி சார், சினேகன் சார், எங்கள் ஃபைட் மாஸ்டர், எடிட்டர், இசையமைப்பாளர், கேமராமேன் ரிச்சர்ட் சார் — எல்லோருக்கும் ரொம்ப நன்றி.

இப்போது எல்லாருமே பிஸியானவர்கள். அவ்வளவு வேலைகளுக்கு நடுவிலும், ‘இவர்கள் அழைக்கிறார்கள், போய் பார்க்கலாம்’ என்ற அன்போடு இங்கே வந்திருக்கிறீர்கள். அதற்காக நான் உண்மையாகவே மிகவும் நன்றியுடன் இருக்கிறேன். நீங்கள் இந்த நேரத்தை எங்களுக்காகச் செலவழிப்பதை நான் மிகவும் மதிக்கிறேன்.

பொதுவாக என் நண்பர்கள், குடும்பத்தினர் எல்லாரும் என்னிடம் ‘உனக்கு பிடித்த இயக்குநர் யார்?’ என்று கேட்பார்கள். நான் எப்போதுமே ஒரே பெயரைத் தான் சொல்வேன் — முருகதாஸ் சார். பின்னாளில் அவர்கள் கூட ஆப்ஷன்ஸ் கொடுக்க ஆரம்பித்தார்கள் — மணிரத்னம் சார், ஷங்கர் சார், முருகதாஸ் சார்… யார் பிடிக்கும்? என்றாலும், நான் ‘முருகதாஸ் சார் தான்’ என்பேன்.

ஏனென்றால் அவருடைய படங்களையும், அவருடைய கேரக்டரையும், பேசும் விதத்தையும் நான் அந்த அளவுக்கு ரசித்திருக்கிறேன். அவருக்கே தெரியாமல் நிறைய விஷயங்களை நான் அவரிடமிருந்து ஃபாலோ பண்ண ஆரம்பித்தேன். ஒரு விஷயத்தை மிகவும் இனிமையாக, சரியாகப் புரியும்படிச் சொல்வார்.

ஒருநாள் காலை ஷூட்டிங் ஸ்பாட்டில் அவர் என்னிடம் சொன்ன ஒரு விஷயம் இன்னும் என் வாழ்க்கையில் நான் பின்பற்றிக்கொண்டிருக்கிறேன்.

‘ஷூட்டிங் டைம்ல மட்டும் கொஞ்சம் சீக்கிரம் தூங்குங்க. லேட்டா தூங்கினா டார்க் சர்கிள்ஸ் வரும். அதை மறைக்க மேக்கப் போடுவாங்க. அந்த மேக்கப்புக்கு கேமராமேன் லைட்டிங் மாற்றணும். அதனால் உங்க ஒரு சின்ன தூக்கமின்மை பின்னாடி நிறைய பேரோட வேலையைப் பாதிக்கும்’ என்றார்.

அது எனக்குப் பெரிய பாடம் தந்தது. அன்றிலிருந்து இன்று வரை நான் சீக்கிரம் தூங்கும் பழக்கத்தைப் பின்பற்றுகிறேன். இன்னைக்கும் மறுநாள் காலை ஷூட்டிங் என்றால் இரவு 10:30 ஆனாலே முருகதாஸ் சார் ஞாபகம் வந்துவிடுவார். அந்த ஒரு பழக்கம் என் வாழ்க்கையில் பெரிய மாற்றம் செய்தது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளர் பற்றிச் சொல்ல வேண்டுமென்றால், முதலில் வேறு ஒருவர் பற்றிப் பேச்சு நடந்தது. பின்னர் ‘மூக்குத்தி அம்மன்’ படத்தின் இசையமைப்பாளர்தான் நமக்கு வேண்டும் என்று இயக்குநர் சொன்னார். முதல் பாடலின் முதல் 30 விநாடிகள் கேட்டவுடனே புரிந்துவிட்டது — ‘சரியான ஆள் கிடைத்துட்டார்’ என்று.

அந்தப் பாடல் AirPods-ல் கேட்கும்போது அவ்வளவு தரமாக, புதுசாக இருந்தது. அதனால் தான் பாடல் வெளியான உடனே மில்லியன் கணக்கில் பார்வைகள் போனது.

எடிட்டரும் அதே மாதிரி மிக நேர்த்தியாக வேலை செய்திருக்கிறார். இந்தப் படம் அவருக்கு ரொம்ப சவாலான படம். படம் பார்க்கும்போது உங்களுக்கே தெரியும்.

முக்கியமாக ரிச்சர்ட் சார்… ரொம்ப நன்றி சார். உங்கள் உழைப்பை நினைத்தாலே எனக்குக் கஷ்டமாக இருக்கும். நாங்கள் ‘9 to 6 ஷூட்டிங்’ என்று சொல்வோம். ஆனால் காலை 8 மணிக்குப் போய், மாலை 5:30-க்கு ‘சன்செட்டில் இன்னொரு ஷாட் எடுத்தா நல்லா இருக்கும்’ என்று ஆரம்பித்து, அது ஒரு முழு சீனாக மாறி, இரவு 10 மணி ஆகிவிடும்.

நான் வீட்டுக்குப் போகும்போது கூட, ‘இன்னும் ஷூட் முடியல சார், வேறு லொக்கேஷனுக்கு போயிருக்காங்க’ என்பார்கள். அவர்கள் இரவு 12, 1 மணி வரை வேலை செய்து, மறுநாள் காலை 7 மணிக்கே மீண்டும் ஸ்பாட்டில் இருப்பார்கள். அந்த அளவுக்கு அர்ப்பணிப்பு.

அவரை கேமராமேனாக அறிவித்த உடனே எனக்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் அப்போதுதான் ‘மாநாடு’ படம் வந்திருந்தது. அந்தப் படம் கேமராமேன், எடிட்டர் இருவருக்கும் மிகச் சவாலான படம். அதைப் பார்த்தவுடன் ‘வாவ்’ என்று தோன்றியது. அதே தரமும், ஃப்ரேமிங்கும் இந்தப் படத்திலும் இருக்கிறது.

இப்போது தயாரிப்பாளர் பாபு விஜய் பற்றிச் சொல்லணும். ஒரு தயாரிப்பாளரின் கஷ்டம் என்ன என்று இந்தப் படத்தில்தான் எனக்கு நெருக்கமாகத் தெரிந்தது. ஒரு நடிகனாக இருந்தால், பணம் எங்கிருந்து வருகிறது, என்ன வட்டி கொடுக்கிறார்கள் — இதெல்லாம் தெரியாது. ஆனால் இங்கே நான் நேரில் பார்த்தேன்.

ஒரு ஷாட்டுக்காக கூட அவர் கணக்குப் பார்த்துக் கொண்டிருப்பார். தேவையான இடத்தில் செலவு செய்வார். தேவையில்லாத இடத்தில் வீண் செலவு செய்ய மாட்டார். அது ஒரு நல்ல தயாரிப்பாளரின் குணம்.

இயக்குநர் பாபு விஜய் பற்றிச் சொன்னால், சில சமயம் ஷூட்டிங் முடிந்து வீட்டுக்குப் போன பிறகும் கனவில் கூட ‘டார்லிங் ரெடி டார்லிங்’ என்று கூப்பிடுவார் போல இருக்கும். அந்த அளவுக்கு அவர் நம்மைச் சோர்வடைய விடமாட்டார்.

ஒரு நாளில் 150 சீன்கள் எடுத்த மாதிரி வேலை நடக்கும். ஆனால் நம்மை எங்கும் டயர்ட் ஆக விடாமல், ஒரு எனர்ஜிக்குள் வைத்திருப்பார். அவருக்கு வேலை என்ன வேண்டும் என்று தெளிவாகத் தெரியும். அதே நேரத்தில் யாராவது ஒரு நல்ல சஜெஷன் சொன்னால் அதை அழகாக ஏற்றுக்கொள்வார்.

கதை சொன்ன உடனே எனக்கு மிகவும் பிடித்தது. ஏனென்றால் அவர் முழுக்க ஒரு பேக்கேஜாக இந்தப் படத்தை யோசித்திருந்தார். முதல் பாதியில் கொஞ்சம் விஜய் சார் ஃபேன் மொமெண்ட்ஸ் இருக்கும். உடல் மொழி, டயலாக் டெலிவரி — அந்தச் சாயல் இருக்கும். ஆனால் இரண்டாம் பாதியில் கதை முழுக்க வேறு ஒரு இம்பாக்ட்டுக்கு போய்விடும்.

அது ஒரு முதல் இயக்குநருக்கு ரொம்ப சவாலான ஸ்கிரிப்ட். அவர் நினைத்திருந்தால் சாதாரண கமர்ஷியல் பாதைக்கு போயிருக்கலாம். ஆனால் கதைக்குத் தேவையான இடத்தில் ஹீரோயிசத்தையும், கதையின் எடையையும் சமநிலைப்படுத்தி எடுத்திருக்கிறார்.

அதனால் இந்தப் படத்தை நீங்கள் திரையரங்கில் பார்த்தால் கண்டிப்பாக ரசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன். அனைவருக்கும் நன்றி.”

இப்படத்திற்குக் கிரிஷ் கோபாலகிருஷ்ணன் இசையமைத்துள்ளார். ஒளிப்பதிவை ரிச்சர்ட் M. நாதன் மேற்கொண்டுள்ளார். எடிட்டிங் டார்லிங் ரிச்சர்ட்சன், கலை இயக்கம் S. கண்ணன் உள்ளிட்ட தொழில்நுட்பக் குழுவினர் இப்படத்தின் தரத்தை உயர்த்தியுள்ளனர்.

இப்படம் வரும் மே 15-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.

Previous Post

சென்சேஷனல் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் பிறந்தநாள் ஸ்பெஷல் போஸ்டர் ‘ரவுடி ஜனார்த்தனா’ படத்தில் இருந்து வெளியாகியுள்ளது!

Next Post

‘ஜாலி ஓ ஜிம்கானா’ நிகழ்ச்சியில் ‘வட சென்னை 2’ படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Next Post

'ஜாலி ஓ ஜிம்கானா' நிகழ்ச்சியில் 'வட சென்னை 2' படத்தின் அப்டேட்டை அறிவித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்

Popular News

  • ‘கங்கணம்’ பட பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட தயாரிப்பாளர் கலைப்புலி தாணு

    0 shares
    Share 0 Tweet 0
  • நடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு

    0 shares
    Share 0 Tweet 0
  • கள்ள நோட்டு படத்திற்காக சிகரெட் பிடிக்கப் பழகிக் கொண்ட நடிகை சுமதி!

    0 shares
    Share 0 Tweet 0
  • வானம் இலக்கிய விருது, வாழ்நாள் சாதனையாளர் விருது எழுத்தாளர் ராஜ் கவுதமனுக்கு நீலம் பண்பாட்டு மையம் சார்பாக வழங்கப்பட்டது.

    0 shares
    Share 0 Tweet 0
  • அஜித்தின் வலிமையை பார்த்து ரசித்த மலேசிய அமைச்சர்!

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

‘அன்பில் அவன்’ படத்தின் ‘ஆசை வரமே’ ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியானது !! –

August 15, 2026

தமிழ் மற்றும் கன்னடத்தில் டப்பிங் செய்து மனோரமாமேக்ஸ் தளத்தில் ஸ்ட்ரீம் ஆகும் ‘காட்டாளன்’ திரைப்படம்!

August 15, 2026

டிரைடெண்ட் ஆர்ட்ஸ் ஆர். ரவீந்திரன் தயாரிப்பில் பிரியன் ராஜேந்திரன் இயக்கத்தில் ‘மேரிகோல்ட்’

August 15, 2026

’மொத ராத்திரி’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா!

August 15, 2026

விறுவிறுப்பான இரண்டாம் கட்ட படப்பிடிப்பில் ரஜினியின் ‘தர்மன்’.

August 15, 2026

மகுடம் – விமர்சனம்

August 15, 2026
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.