“தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு இனிதே துவங்கியது!!
ஆன்மீகம், பக்தி மற்றும் ஆக்சன் கலந்த பிரம்மாண்டமான திரைப்படமாக உருவாகும் “தத் த்வம் அஸி” (2026) படத்தின் படப்பிடிப்பு நேற்று (மே 26) இனிதே துவங்கியுள்ளது. தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகும் இந்த திரைப்படம், அறிவிக்கப்பட்ட தருணத்திலிருந்தே ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது.
இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் கடந்த பிப்ரவரி 26ஆம் தேதி தொடங்கப்பட்ட நிலையில், சரியாக மூன்று மாதங்களுக்குள் அனைத்து திட்டமிடல்களும் நிறைவு செய்யப்பட்டு இன்று படப்பிடிப்பு துவங்கியுள்ளது. திரைப்பட உலகில் இத்தகைய துல்லியமான திட்டமிடல் படக்குழுவின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்துவதாக பார்க்கப்படுகிறது.
மலையாளத்தில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற “மாளிகப்புரம்” படத்தின் இயக்குநர் விஷ்ணு சசி சங்கர் இந்த திரைப்படத்தை இயக்குகிறார். ஆன்மீக கதைகளை உணர்வுபூர்வமாக காட்சிப்படுத்தும் அவரது அனுபவம், “தத் த்வம் அஸி” திரைப்படத்திற்கு பெரிய பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பக்தி, நம்பிக்கை மற்றும் ஆன்மீக உணர்வுகளை மையமாகக் கொண்டு, அதனுடன் ஆக்சன் மற்றும் உணர்ச்சி கலந்த பொழுதுபோக்கு அம்சங்களையும் சேர்த்து இந்த திரைப்படம் உருவாக்கப்படவுள்ளது. குடும்ப ரசிகர்களையும் இளைஞர்களையும் ஒருசேர கவரும் வகையில் இப்படத்தின் திரைக்கதை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
எழுத்தாளர்களாக ஆதித்யா தங்கீராலா, நந்தகுமார் தமிழ்செல்வன் மற்றும் ப்ருத்வி ஆதித்யா இணைந்துள்ளனர்.
மேலும், தந்த்ரா ஃபிலிம்ஸ் நிறுவனம் அறிவித்துள்ள மற்றொரு முக்கியமான திரைப்படமான “ஆர்ய கேரள வர்மன்” படமும் வரலாறு மற்றும் ஆன்மீக பின்னணியில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.








