
8 ஆயிரத்தை நெருங்கிய கொரோனா பலி… 3 நாட்களில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் மரணம்.
உலக அளவில் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 8 ஆயிரத்தை நெருங்கியுள்ள நிலையில், இத்தாலியில் கடந்த 3 நாட்களில் மட்டும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கியுள்ள நிலையில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இத்தாலியில் தொடர்ந்து 3வது நாளாக 350க்கும் மேற்பட்டவர்கள் பலியாகி இருப்பதால் 3 நாட்களில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தைத் தாண்டியுள்ளது.
இதனால் இத்தாலி மட்டுமின்றி ஒட்டு மொத்த உலக நாடுகளும் அதிர்ச்சியில் உறைந்துள்ளன. இத்தாலிக்கு அடுத்தபடியாக நேற்று ஒரே நாளில் மட்டும் ஸ்பெயினில் 190 பேரும், ஈரானில் 135 பேரும் கொரோனாவின் பாதிப்பால் உயிரிழந்துள்ளனர். பிரான்ஸ் மற்றும் அமெரிக்காவில் முறையே 27 பேரும், 14 பேரும் இறந்துள்ளனர்.

இந்நிலையில் இங்கிலாந்தில் தொற்று நோயால் ஏற்பட்ட முடக்கத்தையடுத்து பல்வேறு சலுகைகளை அந்நாடு அறிவித்துள்ளது. அதன்படி தொழிலாளர்கள் 3 மாதங்கள் வரை விடுமுறை எடுக்கலாம் என்று அந்நாட்டு நிதியமைச்சர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
மேலும் பப்கள் மற்றும் உணவங்களில் ஒரு ஆண்டுக்கு வரி வசூலிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் பணிக்கு வராத தொழிலாளர்களை பணி நீக்கம் செய்யக் கூடாது என்றும் நிறுவனங்களுக்கு ரிஷி வேண்டுகோள் விடுத்துள்ளார். கொரோனா தாக்குதலில் இருந்து இங்கிலாந்தை மீட்டெடுக்க 330 பில்லியன் பவுண்டுகளை அவர் ஒதுக்கியுள்ளார்.
இந்த நிலையில் இங்கிலாந்தில் தடையை மீறி நட்சத்திர ஹோட்டல் நீச்சல் குளத்தில் உற்சாகமாக குளித்துக் கொண்டிருந்த ஸ்பெயின் நாட்டுப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். கொரோனாவால் பொது இடங்களில் குளிப்பது அங்கு தடை செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சீனா மற்றும் ரஷ்யாவைத் தொடர்ந்து ஜெர்மனியும் அவசரகாலத்தில் மருத்துவமனை ஒன்றினை கட்டத் தயாராகி வருகிறது. சீனாவில் கொரோனா பரவியதையடுத்து அங்கு ஒரு வாரத்திற்குள் இரு மிகப்பெரும் மருத்துவமனைகள் கட்டப்பட்டன.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரஷ்யத் தலைநகர் மாஸ்கோவில் இரண்டாவது மருத்துவமனை கட்டப்பட்டு வருகிறது. போர்க்கால அடிப்படையில் கட்டப்பட்டு வரும் இந்த மருத்துவமனையில் 500 படுக்கை வசதிகள் இருக்கும் என்றும் 12 வாரங்களில் கட்டி முடிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ரஷ்யாவைத் தொடர்ந்து ஜெர்மனியும் ஆயிரம் படுக்கை வசதிகள் கொண்ட அதிநவீன மருத்துவமனையை கட்டத் தீர்மானித்தது. இதையடுத்து அதற்கானப் பூர்வாங்கப் பணிகளையும் அந்நாடு தொடங்கியுள்ளது.








