உழவர்களுக்காக அரசாங்கத்திற்கு நடிகர் கார்த்தி கோரிக்கை!
#உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்க போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கிறேன்.#
#500 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளில் அனைவரும் சேர்ந்து விவசாயக் கூட்டமைப்பிடம் எங்களுக்குத் தேவையான காய்கறிகளை கேட்டால், அவர்கள் செய்துக் கொடுக்க தயாராக இருக்கிறார்கள்.
#ஒரு மொழியை இழந்தால், அந்த கலாச்சாரமே போய்விடும்..
#எனக்கு எப்படி இவர்களைத் தெரியாமல் இருந்தது? என்று கூச்சமாகவே இருந்தது..
சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்தும் வகையில் விவசாய கருவிகளை உருவாக்கும் போட்டி இந்த ஆண்டு நடைபெறும் – நடிகர் கார்த்தி
சிவராமன் சார், அனந்த் சார் மற்றும் இஸ்மாயில் சார் இவர்கள் தான் இந்த என்.ஜி.ஓ-க்கு முதலீடு என்று கூறுவேன். சமூகத்தின் மீது இவர்களுக்கு இருக்கும் அக்கறை, அனுபவம் எல்லாம் சேர்ந்து தான் இதை வழிநடத்தி செல்கிறார்கள். ராஜ்கிரன் ஐயா, பொன்வண்ணன் சார் மற்றும் பாண்டிராஜ் சாருக்கு நான் நன்றி தெரிவிக்க போவதில்லை. ஏனென்றால், என்னுடைய சிந்தனையில் பாதியைக் கொண்டவர்கள். மேலும், எங்கள் அழைப்பை ஏற்று இங்கு வந்து பரிசு பெற்று எங்களைச் சிறப்பித்த விவசாய பெருமக்களுக்கு நன்றி.



சமூகத்தில் இதன் பிரதிபலிப்பு நிச்சயம் இருக்கும் என்பதற்காகத்தான் ஒவ்வொரு வருடமும் தொடர்ந்து இந்த விழாவை நடத்தி வருகிறோம்.
எங்களை எப்படி தேடிப் பிடித்தார்கள் என்று தெரியவில்லை. இன்று லண்டன் மற்றும் துபாயில் கடை போட்டிருக்கிறேன் என்று கோத்தகிரியில் இருந்து வந்தவர் கூறினார். விவசாயம் செய்ததால் ஊரில் எனக்கு மரியாதை இருக்காது. ஆனால், இன்று என்னிடம் ஆட்டோகிராப் வாங்கும் அளவிற்கு நட்சத்திரமாகி இருக்கிறேன். எங்கு சென்றாலும் கைத்தட்டல்கள் கிடைக்கிறது என்று கூறுகிறார்கள். ஆகையால், ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நடத்த வேண்டிய விழா என்பது புரிகிறது.

ஒரு காரை தயாரித்து பாகங்களை சேர்க்க 1 மணி நேரம் போதும். ஆனால், ஒரு நெல் விளைவதற்கு எத்தனை நாட்கள் ஆகும் என்று தெரியாது. உதாரணத்திற்கு தக்காளியை எடுத்துக் கொண்டால், நாற்று நடுவதற்கு 25 நாட்கள் ஆகும். அதுவரை நாற்றுக்கு எதுவும் ஆகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். நாற்று நட்ட பிறகு பூ பூர்த்து காய்க்கும் வரை தண்ணீர் சரியாக விட வேண்டும். பூச்சி வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மழை அதிகமாகவும் வரக் கூடாது, குறைவாகவும் வரக் கூடாது. இதையெல்லாம் தாண்டி தக்காளி சந்தைக்கு வருகிறது. இங்கு வெங்காயம், தக்காளி இல்லாமல் சமையலே இல்லை என்ற நிலைதான். ஆனால், என்றோ ஒரு நாள் தக்காளி விலை ஏறிவிட்டால், அன்று அதுதான் முக்கியச் செய்தியாக இருக்கும். உடனே, பெங்களூருவில் இருந்து தக்காளியை இறக்குமதி செய்துவிடுவார்கள். கிலோ ரூ.100/-க்கு இருந்த விலை ரூ.5/-க்கு வந்துவிடும். அப்போது விவசாயிக்கு எவ்வளவு ரூபாய் போகும் என்று என்றாவது யோசித்து இருக்கிறோமா? நான் யோசிக்கவில்லை என்று எண்ணும்போது எனக்கு வெட்கமாக இருந்தது. இதேதான் அத்தியாவசிய பொருளான பாலுக்கும் வருகிறது.
மாடு வாங்கி பால் கறப்பது பெரிய விஷயமாக இருக்கிறது. ஒரு நாளைக்கு 2 கிலோ தீவனம் ரூ.50/-. காலை முதல் இரவு வரை ஒரு நாள் முழுக்க மாடுக்கு எத்தனை வேலைகள் செய்ய வேண்டியதாக இருக்கிறது. எந்தவொரு சுபநிகழ்ச்சிக்கும் செல்ல முடியாது. இப்படி முழு நேர வேலைக்கு வருமானம் சொற்பமாகவே இருக்கிறது. அரசாங்கம் ஒரு லிட்டருக்கு ரூ.27/- என்று நிர்ணயித்திருக்கிறது. தண்ணீர் பாட்டில் விலை ஏறிக் கொண்டே இருக்கிறது. ஆனால், பால் விலையில் ரூ.2/- கூடினாலே கோபப்படுகிறோம். நீங்கள் என்ன சாப்பிட்டாலும் விவசாயிக்கு எவ்வளவு போகிறது என்று யோசியுங்கள் என்ற அந்து சார் கூறுவார். நாம் என்ன வினை புரிகிறோமோ? அதையே தான் அரசாங்கமும் செய்யும். இங்கு விலைவாசி ஏறும் போது எதற்காக ஏற்றப்படுகிறது? அந்த பணம் யாருக்குச் சென்றடைகிறது? பால் வாங்கும் இடத்தில் 2 ரூபாய் அதிகமாக கொடுக்க வேண்டிவந்தால் அந்த செலவை ஏற்றுக் கொள்ள தயாராக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே நமக்கு நல்ல பால் கிடைக்கும். நகர்புறங்களில் நல்ல பால் கிடைப்பதில்லை. கலப்படங்கள் சாதாரணமாக நடக்கின்றது. நல்ல பால் வேண்டுமென்றால் நாம் தான் தேடிச் சென்று வாங்க வேண்டும். இந்த சிறிய மாற்றம் எல்லோருக்குள்ளும் வர வேண்டும் என்று வேண்டி கேட்டுக் கொள்கிறேன்.

எங்கு சென்றாலும் நம்மாழ்வார் ஐயாவை பார்த்திருக்கிறோம், அவர் கற்றுக் கொடுத்திருக்கிறார் என்று அவர் பெயரைத் தான் சொல்கிறார்கள். இதை அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்வது நிச்சயமாக நமது கடமை. இப்போது உணவு உற்பத்தி 2 சதவிகிதத்திலிருந்து 6 சதவிகிதமாக குறைந்துகொண்டே வருகிறது என்று கூறுகிறார்கள். ஆடி மாதம் பெய்ய வேண்டிய மழை தள்ளிப் போகிறது. இத்தனை வருட காலமாக இந்த பருவத்தில் விதைத்தால் இந்த பருவத்தில் அறுவடை செய்யலாம் என்ற அறிவு இப்போது வீணாகப் போகிறது. அனைத்தும் காலமாற்றத்தினால் மாறிக் கொண்டே இருக்கிறது. இருப்பினும் இன்னும் நமக்கு உணவு கிடைக்கிறதென்றால், பாண்டிராஜ் சார் கூறியது போல, விவசாயத்தை விட மாட்டேன், போராடியே தீருவேன் என்று ஒரு தலைமுறையே போராடிக் கொண்டிருக்கிறார்கள். அந்த தலைமுறைக்கு அடுத்த தலைமுறை தயாராக இருக்கிறதா? என்று கேட்டால், பயமாகத்தான் இருக்கிறது. அதை நாம் தான் தயார் செய்தாக வேண்டும். நாங்கள் படத்தில் கூறிய வசனம் போல, மருத்துவராக இரு, பொறியாளராக இரு, கலெக்டராக கூட இரு, ஆனால் விவசாயியாகவும் இரு என்பதுதான். அவரவர்கள் விவசாயம் செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரிகிறது.
இந்த வருடத்தை சிறுதானியத்திற்கான முக்கிய வருடமாக கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவை எடுத்துக்கொண்டால் சிறுதானியம் ஏன் அவசியமாக இருக்கிறது? என்றால், அது மானாவாரி பயிர், அதற்கு தண்ணீர் காட்டத் தேவையில்லை, உரம் போட தேவையில்லை, ஹைபிரிட் கிடையாது. அழகாக கையில் கிடைத்துவிடும். இருந்தும் ஏன் பலர் இதை செய்யவில்லையென்றால், அதற்கான செயலாக்கத் திட்டம் சரியாக இல்லை. சிறு கிராமங்களிலும், மலைப் பிரதேசங்களிலும் சிறுதானியம் கிடைக்கிறது. ஆனால், அப்படி வருகின்ற சிறுதானியங்கள் அனைத்தும் மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களாக கம்பு முறுக்கு, ராகி பிஸ்கட் என்று போய் விடுகிறது. ஆனால், உணவாக உண்ணும்போது தான் அனைத்து ஊட்டச்சத்துகளும் கிடைக்கிறது. கடைகளில் கிடைக்கக் கூடிய அனைத்தும் வெள்ளையாக பாலிஷ் செய்து வருகிறது. கம்பு, ராகி அனைத்தும் ஒரே நிறமாக இருக்கிறது. பாலிஷ் செய்தாலே அனைத்து சத்துகளும் போய்விடும். அரை வேக்காட்டில் சாப்பிடுவது மிக மிக அவசியம். அதற்காக செயலாக்கக் கூடம் தமிழ்நாட்டில் மிகக் குறைவாகவே இருக்கிறது.
விவசாயிகள் அவர்களின் விளைபொருட்களை பாதுகாத்து வைக்கக் கூடிய இடத்தில் சேமித்து வைத்து, விலை ஏறும்போது விற்பதற்கு அரசாங்கம் செயலாக்கக் கூடத்தை வைத்திருக்கிறது. அதுபோல சிறுதானியத்திற்கும் செயலாக்கக் கூடத்தை அதிக எண்ணிக்கையில் நிறுவ வேண்டும். விவசாயிக்கு எளிய வகையில் தேக்கி வைக்க அங்காடிக்கு அருகிலேயே நிறுவ வேண்டும். இப்படி செய்தால் அதிக அளவில் குறைந்த விலையில் சிறுதானியம் கிடைக்கும். அரிசி கிலோ ரூ.60/-க்கு கிடைக்கிறது. ஆனால், சிறுதானியம் ரூ.90/- முதல் ரூ.130/- வரை விற்கிறது. அனைவரும் வாங்கி சாப்பிட முடியும்.
மேலும், விவசாயிகள் அவர்களின் விளைப் பொருட்களை அவர்களே கொண்டு சென்றுதான் சந்தையில் விற்க வேண்டும். அதுவும் 2 மணி நேரத்திற்குள் விற்க வேண்டும். அதன்பிறகு, அவர்கள் வீட்டைப் பார்க்க வேண்டும், காட்டைப் பார்க்க வேண்டும், பிற வேலைகளைப் பார்க்க வேண்டும். அவருக்கு பையன் இருந்தால் மட்டுமே வேலைகளைப் பகிர்ந்து கொள்ள முடியும். இல்லையென்றால், எல்லாவற்றையும் செய்வதற்கு ஆட்கள் கிடையாது. உழவர் சந்தையிலோ, அங்காடிகளிலோ பொருட்களைக் கொண்டு சேர்க்க போக்குவரத்து தேவைப்படுகிறது. அதை அரசாங்கள் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பதை மாபெரும் கோரிக்கையாக வைக்கிறேன்.
இதுபோன்று, இன்னும் பல திட்டங்களை எதிர்காலத்தில் கொண்டு வருவோம். இந்நிலையில், நீரும் நாமும் என்பது எனக்குப் பிடித்த விஷயம். இதை நாம் கற்றுக் கொண்டு அடுத்த தலைமுறைக்கு கற்றுக் கொடுப்பதன் மூலம் இதை பாதுகாக்க முடியும் என்று நம்புகிறோம். இத்திட்டத்திற்கு பல நண்பர்கள் உதவியாக இருக்கிறார்கள்.
அதேசமயம், அந்து சார் கூறியது போல சிறு குறு விவசாயிகள் மற்றும் பெண்கள் பயன்படுத்துவதற்கேற்ப கருவிகளை வடிவமைக்கும் போட்டியும் ஏற்பாடு செய்திருக்கிறோம். சென்ற வருடமே முன்னெடுக்கத் திட்டமிட்டிருந்தோம். ஆனால், தாமதமாகி விட்டது. இந்த வருடம் நிச்சயம் நடத்துவோம். இதற்கு அண்ணா பல்கலைக் கழகமும் உடன் இருக்கிறார்கள் என்பதில் மிகப் பெரிய சந்தோஷம். ஏனென்றால், பொறியியலாளர்களால் தான் சுலபமாகவும், எளிமையாக உருவாக்க முடியும்.
இங்கு வந்த அனைவருக்கும் நன்றி என்றார்.