
பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி கோயிலில் சனிக்கிழமை இந்திய கிரிக்கெட் வீரர் நடராஜன் மொட்டையடித்து சுவாமி தரிசனம் செய்தார். நடராஜனை ரசிகர்கள் ஏராளமானோர் பார்த்து செல்பி படம் எடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஐபிஎல் 2020 தொடரில் மிக சிறப்பாக செயல்பட்டதன் விளைவாக இந்திய அணியில் இடம் பிடித்தார் தமிழக வேகப்பந்து வீச்சாளர் கிரிக்கெட் வீரர் நடராஜன் .ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணியில் வலைப்பந்து வீச்சாளராக சென்ற நடராஜன் முன்னணி வீரர்களின் காயத்தால் இந்தியா விளையாடிய மூன்று விதமான போட்டிகளிலும் இடம்பெற்றார். அறிமுக தொடரிலேயே மிகச்சிறப்பாக செயல்பட்டு இந்தியாவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். இந்நிலையில் சில தினங்களுக்கு சொந்த ஊருக்கு திரும்பிய நடராஜன் சனிக்கிழமை பழனிக்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக வருகை புரிந்தார். மலையடிவாரம் திருக்கோயில் முடிக்காணிக்கை மண்டபத்தில் மொட்டையடித்த நடராஜன் பழனி மலைக்கோயிலுக்கு ரோப்கார் மூலம் சென்றார்.


அங்கு அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்த நடராஜன் குடும்பத்தார் பெயரில் அர்ச்சனைகள் செய்தார். பின்னர் ரோப்கார் மூலமாகவே அடிவாரம் வந்தடைந்தார். மலைக்கோயில் மற்றும் அடிவாரத்தில் அவரைப் பார்த்த ரசிகர்கள் குவிந்து செல்பி படம் எடுத்துக் கொண்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. தைப்பூச நேரம் என்பதால் கூட்டம் அதிகமாக இருந்த நிலையில் அவரை போலீஸார் பாதுகாப்பாக மீட்டு காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர். தற்போது கிரிக்கெட் போட்டிகளில் தமிழகத்தைச் சேர்ந்த இளம் வீரர் நடராஜன் பங்கேற்று சிறப்பாக விளையாடி வருவதையடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் பலரையும் கவர்ந்து வருகிறார். பழனி முருகனை தரிசனம் செய்ய வந்த இடத்தில் கிரிக்கெட் வீரர் நடராஜனை பார்த்து புகைப்படம் எடுத்துக் கொண்டது மகிழ்ச்சி அளிப்பதாக ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.









