ஆர்.மகாலட்சுமி முருகன் இயக்கத்தில், ஆதவ் கிருஷ்ணா மற்றும் சிம்ரன் அத்வானி நடிப்பில் உருவாகியுள்ள படம்.
இன்றைய இளைஞர்களின் உலகத்தை மையப்படுத்தி, கல்லூரிப் பின்னணியில் காதல் மற்றும் சமூக ஊடக தாக்கத்தை விளக்கும் ஒரு வணிக ரீதியிலான
வந்திருக்கும் படம்.
ஹீரோ ஆதவ் கிருஷ்ணாவும், ஹீரோயின் சிம்ரன் அத்வானியும் கல்லூரியில் காதலிக்கிறராகள். ஆதவ் கிருஷ்ணா பெற்றோர்களுக்கு சிம்ரன் அத்வானியை பிடித்து போகிறது. ஆனால் பெரும் பணக்காரரான சிம்ரன் அத்வானியின் அப்பாவிற்கு ஆதவ் கிருஷ்ணாவை பிடிக்கவில்லை.
தனது தந்தையை விட்டு பிரிந்து காசியில் இருக்கும் தனது அம்மாவிடம் ஆதவ் கிருஷ்ணாவை அறிமுகம் செய்து வைக்க ஆதவை அழைத்து கொண்டு காசிக்கு செல்கிறார் சிம்ரன். சென்ற இடத்தில் காணாமல் போய் விடுகிறார். ஆதவ்தான் ஏதாவது செய்திருப்பான் என்ற எண்ணத்தில் போலீஸ் ஆதவை சிறையில் தள்ளுகிறது. சிம்ரன் அத்வானியின் அப்பாவும் காசிக்கு வந்து தன் மகளை தேடுகிறார். ஹீரோயினுக்கு என்னதான் ஆச்சு? என்று சொல்கிறது இந்த படம்.
படத்தின் முதல் பாதி நல்ல காதல் கதை உள்ள படத்திற்கு வந்து விட்டோம் என்ற உணர்வை தருகிறது. சிம்ரன் அத்வானி – ஆதவ் கல்லூரி காதல் மிகவும் நாகரீகமாக படமாக்கப்பட்டுள்ளது. காதலுடன் சேர்த்து படிப்பின் முக்கியத்துவம், குடும்பத்தின் அன்பு என பல விஷயங்களை டைரக்டர் சொல்லி இருக்கிறார். அதிலும் குறிப்பாக ஹீரோயின், ஹீரோவின் வீட்டிற்கு வந்து குடும்பத்தினருடன் பழகும் காட்சி மிகவும் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இதெல்லாம் படத்தின் முதல் பாதி வரை தான் இருக்கிறது.
பாப் கான் சாப்பிட்டு விட்டு இரண்டாம் பாதியில் ரொமான்டிக் உணர்வுடன் சீட்டில் அமர்ந்து படம் பார்க்க ஆரம்பித்தால், இரண்டாம் பாதி கடத்தல், சேசிங், சுமாரான ஆக்ஷன் என பல படத்தில் பார்த்த டெம்ப்லேட்டில் செல்கிறது. ஒரு நல்ல காதல் கதையை கையில் எடுத்து கொண்டு, முடிக்க தெரியாமல் முடித்திருக்கிறார் டைரக்டர். ஹீரோயின் அம்மா, ஹீரோவின் அப்பாவுடன் வரும் நண்பர் போன்ற கதாபாத்திரங்கள் சரியாக உருவாக்கப்படவில்லை.
ஹீரோயின் சிம்ரன் அத்வானி காதல் காட்சிகளில் சிறப்பாக நடித்திருக்கிறார். முயற்சி செய்தால் 1990 களின் சிம்ரன் போல் வரலாம். ஹீரோ ஆதவ் கிருஷ்ணாவிற்கு நடிப்பில் இன்னும் பயிற்சி தேவை. (மாஸ் காட்டுவது தவிர்த்து நல்லா நடிக்க முயற்சி பண்ணுங்க தம்பி)
சாம் என்ற ஜாவர் சுந்தரேசன் நகைச்சுவைக்கு உத்தரவாதம் தருகிறார். ஹீரோயின் அப்பாவாக நடிப்பவர் சாயலில் அஜித் போல் இருக்கிறார். படத்தின் இரண்டாம் பாதியும் சரியாக இருந்திருந்தால் இந்த L.S.S சூப்பரான காதல் எக்ஸ்பிரஸாக இருந்திருக்கும்.