என்னை வாழ வைத்த தெய்வங்களான தமிழக மக்களுக்கும் எனது ரசிகர்களுக்கும், ஊடக நண்பர்களுக்கும் எனது பணிவான வணக்கம். கடந்த வாரம் (மார்ச்5 ) சென்னையில் ரஜினி மக்கள் மன்ற மாவட்ட செயலாளர்களுடன் நான் நடத்திய ஆலோசனை தொடர்பாக, பத்திரிகைகளிலும் , டெலிவிஷன் சேனல்களிலும் யூகத்தின் அடிப்படையில் பல செய்திகள் வெளியாக இருக்கின்றன. அவற்றுள் பல விஷயங்கள் அடிப்படையற்றவை .இவற்றின் மீது டெலிவிஷன் சேனல்கள் விவாதங்களும் நடத்தியுள்ளன .எனவே இந்த ஆலோசனை கூட்டம் எதற்காக நடத்தப்பட்டது ? அரசியல் கட்சி துவங்கும் எனது நோக்கம் என்ன ? இவை பற்றி எல்லாம் விளக்கமாக நானே தெளிவு படுத்திவிடுவது நல்லது என்று நினைக்கிறேன் .
2017 டிசம்பர் மாதம் 31 ஆம் தேதி நான் அரசியலுக்கு வருவேன் என்று முதன் முதலாகக் கூறியபோது “இங்கு சிஸ்டம் (அமைப்பு) சரியில்லை முதலில் அதைச் சரி செய்யவேண்டும்’ என்று சொன்னேன். ஒரு நல்ல ஆட்சியைக் கொடுக்க வேண்டுமென்றால் வெறும் ஆட்சி மாற்றம் மட்டும் போதாது, இங்கு அரசியல் நடத்தப்படும் முறையிலும் மாற்றம் வர வேண்டும். அப்பொழுதுதான் ஒரு நேர்மையான, வெளிப்படையான, ஊழலற்ற சாதி, மதச்சார்பற்ற ஆட்சியை தர முடியும். அரசியல் மாற்றம் இல்லாத ஆட்சி மாற்றம் என்பது மீன் குழம்பு வைத்த பாத்திரத்தை கழுவாமல் அதிலேயே சர்க்கரை பொங்கல் செய்வது போன்றது. ஆக இந்த அரசியல் மாற்றத்துக்காக நான் சில திட்டங்களை வைத்திருக்கின்றேன்.
அதில் முக்கியமான மூன்று திட்டங்களில் ஒன்று கட்சிப் பதவி தொடர்பானது .பெரிய அரசியல் கட்சிகளில் மாநில நிர்வாகிகளில் துவங்கி, ஊராட்சிகள் வரை கிட்டத்தட்ட ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட கட்சி பதவிகள் இருக்கின்றன . இந்த ஐம்பதாயிரம் பதவியில் இருப்பவர்களின் குடும்பத்தினர் ,உறவினர், நண்பர்கள் என்று ஒரு பதவிக்கு சராசரியாக ஐம்பது பேர் என்று எடுத்துக் கொண்டாலும் அவர்களின் எண்ணிக்கை இருபத்தைந்து லட்சமாக இருக்கும். இவர்கள் அனைவரையும் திருப்தி படுத்த வேண்டிய கட்டாயம் ஆளும் கட்சியினருக்கு ஏற்படுவதால் பெரிய அளவில் ஊழல் நடைபெற வாய்ப்புகள் உருவாகின்றன .கட்சிப் பொறுப்புகளில் இருப்பவர்கள் தேர்தல் நேரத்தில் வாக்குகளை பெற்று தர கட்சிகளுக்கு பெரிய அளவில் உதவுவார்களே தவிர, தேர்தலுக்கு பிறகு இவர்களால் அரசுக்கும், மக்களுக்கும் தொந்தரவது தான் அதிகம் .ஆகவே தேர்தல் முடிந்தவுடன் கட்சிக்குத் தேவைப்படும் அத்தியாவசியமான பதவிகளை மட்டும் வைத்துக் கொண்டு தேவையற்ற மற்ற பதவிகளை நீக்க வேண்டும். இதுதான் என்னுடைய முதல் திட்டம் .
பொதுவாகவே இந்தியாவில் சட்ட மன்றங்களிலும் பாராளுமன்றத்திலும் ஐம்பது வயதுக்கு மேற்பட்டவர்கள் தான் பெரும்பாண்மை உறுப்பினர்களாக இருக்கின்றனர். அந்த வயதுக்கு கீழ் உள்ளவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். ஒரு இளைஞன் அரசியலில் பிரகாசிக்க வேண்டுமென்றால், அவர் ஒரு எம்.பி மகனாகவோ, எம்.எல்.ஏ மகனாகவோ, பணக்காரனாகவோ, செல்வாக்கு உள்ளவராக இருக்க வேண்டும் என்கின்ற நிலை மாற வேண்டும். நல்லவர்கள், படித்தவர்கள், இளைஞர்கள் அரசியல் ஒரு சாக்கடை என்று ஒதுங்கி விடாமல், அரசியலில் ஈடு படுபட முன்வர வேண்டும். குறிப்பாக இளைஞர்கருக்கு அதிகமான வாய்ப்புகள் வழங்க பட வேண்டும். எனது கட்சியில் ஐம்பது வயதுக்கு கீழ் உள்ளவர்கள், ஓரளவு படித்தவர்கள் ,நேர்மையான தொழில் செய்பவர்கள், அவர்கள் வாழும் பகுதியில் கண்ணியமானவர் எனப் பெயரெடுத்தவர்களைத் தேர்வு செய்து, 60 முதல் 65 சதவீதம் அவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பளித்து மீதியுள்ள 35 – 40 சதவீதத்தில் வேறு கட்சியில் வாய்ப்பு கிடைக்காத நல்லவர்கள், ஓய்வு பெற்ற ஐ.ஏ.ஸ், ஐ.பி.ஸ் அதிகாரிகள் விருப்பப்பட்டு நமது இயக்கத்தில் சேரவிரும்பினால் அவர்களுக்கு வாய்ப்பளித்து அனைவரையும் சட்டமன்றத்திற்கு அனுப்பி அதிகார சூத்திரத்தை கையில் எடுத்து கொள்ளும்படி செய்ய வேண்டும் .அதற்கு நான் பாலமாக இருக்க வேண்டும். இந்த நோக்கத்தை அடைவதற்கு கடந்த 45 வருடங்களாக நான் திரையுலகில் ஈட்டிய புகழ், தமிழ் மக்கள் என் மீது செலுத்தி வரும் பேரன்பு அவர்களுக்கு என் மேல் இருக்கும் நம்பிக்கை அனைத்தும் உதவுமென நம்புகிறேன் இது எனது இரண்டாவது திட்டம்.
என்னுடைய மூன்றாவது திட்டம் கட்சித் தலைமையையும், ஆட்சித் தலைமையையும் தனித் தனியாக பிரிப்பது .அதாவது கட்சியை நடத்தும் தலைவர் வேறு ,ஆட்சியை நடத்தும் தலைவர் வேறு, இந்த இரண்டையும் ஒன்றாகவே இணைத்து பார்த்து பழகிவிட்ட தமிழக அரசியலில் ஒரு மாற்று அரசியலை கொண்டுவர வேண்டியது அவசியம் என்று நான் கருதுகிறேன். கட்சிக்கும் ஆட்சிக்கும் ஒரே நபரின் தலைமை எனும் பட்சத்தில் தேர்தலில் ஜெயித்து ஆட்சி அதிகாரத்திற்கு வருபவரின் ஐந்துவருட ஆட்சியில் என்ன தப்பு நடந்தாலும் மக்களோ, கட்சி பிரமுகர்களோ ஆட்சியாளரை தட்டி கேட்க முடியாது, அவரை பதவியிலிருந்து கீழே இறக்கவும் முடியாது . இதையும் மீறி கட்சியில் இருப்பவர்கள் தட்டிக் கேட்டால் அவர்களை பதவியிலிருந்து இறக்கிவிடுவார்கள் அல்லது தூரமாக தள்ளி வைத்து விடுவார்கள். இந்த நிலை மாற கட்சி தலைமை மிகவும் வலிமையாக இருந்தால் தான் ஆட்சியில் இருப்பவர்கள் தவறுசெய்யும் போது தட்டி கேட்க முடியும் . தவறு செய்தவர்களைத் தூக்கி எறியவும் முடியும் .மேலும் மக்களுக்கு கட்சி கொடுத்த வாக்குறுதிகளை ஆட்சியாளர்கள் சரிவர செயல்படுத்தும் படி பார்த்துக்கொள்ளும் .கட்சி சார்ந்த விழாக்கள், கல்யாணம், காதணி போன்ற விழாக்களிலும் ஆட்சியாளர்கள் கலந்து கொள்ள வேண்டியதில்லை.
ஆட்சி நிர்வாகத்தில் அவர்களின் முழுக்கவனமும் இருப்பதற்கு இது உதவும்.கட்சி சிறப்பாக நடைபெற மக்கள் வளர்ச்சிப் பணியில் அனுபவம் வாய்ந்த பல்வேறு துறைகளை சார்ந்த வல்லுனர்களை தேர்ந்தெடுத்து ஒரு ஆலோசனைக் குழுவை உருவாக்கி அவர்கள் பரிந்துரைக்கும் ஆலோசனைகளை ,அரசின் மூலம் செயல்படுத்தப்படுவதை கட்சி தலைமை உறுதி செய்யும் .இதுவே எனது மூன்றாவது திட்டம் .
முதலமைச்சர் ஆக வேண்டும் என்ற ஆசை எனக்கு என்றைக்குமே இருந்ததில்லை. முதல்வராக நான் என்னை கனவில் கூட நினைத்து பார்த்ததில்லை. தமிழகத்தில் உள்ள அனைவருக்கும் இது பற்றி 1996 லேயே தெரியும். ஆக நான் வலிமையான கட்சி தலைமை பொறுப்பை வகிப்பேன் .எனது கட்சியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நேர்மையும், திறமையும் ஒருங்கே அமையப் பெற்ற தன்னம்பிக்கை உள்ள படித்த சுயமரியாதையுள்ள ஒரு இளைஞரை (அவர் பெண்ணாக கூட இருக்கலாம்) முதல்வர் பதவியில் அமர்த்துவேன். அவர் தலையாட்டும் பொம்மையாக இருக்க மாட்டார். ஆட்சி நிர்வாகத்தில் கட்சி தலையிடாது .அதே சமயம் தவறு செய்தால் சுட்டிக் காட்டி திருத்துவோம். கட்சிக்காரர்கள் ஆட்சியாளர்களை தொந்தரவோ, அதிகாரமோ செய்யாமல் பார்த்துக் கொள்வோம். இது தான் அரசியல் மாற்றத்துக்கான எனது முக்கியான திட்டங்கள். இது தான் நான் விரும்பும் மாற்று அரசியல் ;உண்மையான ஜனநாயகம் ;என்னுடைய கனவு இதற்காகத் தான். நான் அரசியலுக்கு வருகிறனே தவிர பெயருக்காகவோ, புகழுக்காகவோ பணத்துக்குக்காகவோ கிடையாது, ஊழலற்ற வளமான தமிழகத்தை உருவாக்க விரும்பும் தமிழக மக்கள் எனது நல்ல நோக்கத்தைச் சரியாகப் புரிந்து கொண்டு இத்தகைய அரசியல் மாற்றத்திற்கும், ஆட்சி மாற்றத்திற்கும் ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கை எனக்கிருக்கிறது” இவ்வாறு பேசினார்.