“எலக்சன்” – விமர்சனம்
ரீல் குட் ஃபிலிம் தயாரிப்பில் இயக்குநர் தமிழ் இயக்கத்தில் உறியடி விஜயகுமார், பாவல், ஜார்ஜ் மரியான், திலீபன், ப்ரீத்தி அஷ்ராணி உள்ளிட்டோர் நடிப்பில், வெளியாகியுள்ள படம் எலக்சன்.
உள்ளாட்சி தேர்தலைக் கொண்டே படம் நகர்வதால், இது சாதாரண மக்களுக்கும் மிகவும் நெருக்கமான கதையாக அமைகிறது. படத்தின் திரைக்கதையில், காட்சி அமைப்பில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருந்தால் படத்தினைப் பார்க்கும் அனைவரது மனதிலும் நீங்காத இடம் பிடித்த படமாக இருந்திருக்கும். ஒரு உள்ளாட்சித் தேர்தல் நண்பர்கள் பகையாளிகளாக மாறியதும், பகையாளிகள் கூட்டாளிகளாக மாறிய பல கதைகள் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ளது.
வேலூர் மாவட்டத்திற்குரிய பேச்சு மொழியில் கதாப்பாத்திரங்கள் அனைவரும் உரையாடுவது கதைக் களத்திற்கு கச்சிதமாக பொருந்தியதுடன், படம் பார்ப்பவர்கள் மனதிலும் பதிகின்றது. இதற்கு முக்கிய காரணம் இயக்குநர் தமிழ், எழுத்தாளர் அழகிய பெரியவன், படத்தின் நாயகன் விஜயகுமார் என மூன்று பேரும் இணைந்து எழுதிய வசனங்கள்தான். படத்தில் பல கதாபாத்திரங்கள் இருந்தாலும் பாவல் நடிப்பில் ஸ்கோர் செய்துள்ளார்.
அதேபோல் குரூரமான வில்லன் கதாபாத்திரத்தை முடிந்தளவு தனது நடிப்பின் மூலம் நிலைநாட்டியுள்ளார் திலீபன். கதாநாயகன் விஜய குமார், நாயகி ப்ரீத்தி அர்ஷனி நடிப்பு ஓ.கே. ரகம்தான். ஜார்ஜ் மரியான் கதாபாத்திரம் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் உண்மைத் தொண்டனை நினைவுக்கு கொண்டு வரும். கோவிந்த் வசந்தாவின் இசை கொஞ்சம் ஓ.கே ரகம்தான். மகேந்திரன் ஜெயராஜுவின் ஒளிப்பதிவில் உள்ளாட்சித் தேர்தலுக்கான மோடில் படம் பார்க்கும் நம்மையும் அழைத்துச் செல்கின்றார்.
பொதுத்தேர்தலைவிடவும் உள்ளாட்சித் தேர்தலில்தான் மக்கள் மத்தியில் இயல்பாகவே அரசியல் காழ்ப்புணர்ச்சி, குரூரம் உள்ளிட்டவை அதிகமாக இருக்கும். அதனை ஓரளவுக்கு நெருங்கியுள்ளது எலக்சன்.
பாராளுமன்ற தேர்தலுக்கு முன்பு படம் திரையில் வந்திருந்தால் மக்களுக்கு சற்று விழிப்புணர்வு கிடைத்திருக்கும்.








