‘நீல நிறச்சூரியன்’ – விமர்சனம்
முழுக்க முழுக்க திருநங்கை இயக்கி நடித்த படம் என்ற சிறப்பை பெறுகிறது இந்த நீல நிற சூரியன்.
சம்யுக்தா விஜயன் தனக்குள் ஏற்படும் பெண் தன்மையை உணர்ந்து தன் அடையாளத்தை பலமாக நிறுவுகிறார்..அப்படி அவர் நிறுவும் பட்சத்தில் வீட்டிலும் சுற்றத்திலும் அவர் சந்திக்கும் இன்னல்கள் தான் படத்தின் திரைக்கதையாக விரிகிறது.
தனது மிகச்சிறந்த நடிப்பால் கதைக்கு உயிர் கொடுத்துள்ளார் சம்யுத்கா. பெரும் பாலான காட்சிகள் அவர் வாழ்வின் வழியே தொகுக்கப்பட்டுள்ளதால், அந்தந்த காட்சிகளில் கணம் கூடுகிறது. சம்யுக்தா அப்பா கேரக்டரும், அம்மா கேரக்டரும் தங்கள் மகன்(ள்)ன் அடையாளத்தை காணும் போது, காட்டும் ரியாக்சன்ஸ் எல்லாம் அசத்தல் ரகம்..சக ஆசிரியர்கள், அனைவருமே நல்ல நடிப்பை கொடுத்துள்ளனர்.
ட்டீவ் பெஞ்சமின் எடிட்டிங், இசை, கேமரா என மூன்று துறைகளை கையாண்டுள்ளார். சிறிய பட்ஜெட் என்ற தொனி ஏற்படாத வண்ணம் அவர் ஒளிப்பதிவைச் செய்துள்ளார். எடிட்டராக, ‘நீளமான படம்’ என்ற விமர்சனத்திற்கு படத்தை தப்பவிட்டுள்ளார். இசை அமைப்பிலும் கவனம் ஈர்த்துள்ளார்
ஒரு ஆண் தன்னை பெண்ணாக உணரும் தருணத்தில் ஏற்படும் உளவியல் சிக்கல்களை இவ்வளவு நேர்த்தியாக யாருமே படம் பிடித்திருக்க மாட்டார்கள். எழுத்தில் அவ்வளவு அழுத்தம் உள்ளது. மேலும் திருநங்கை சான்றிதழ் பெறுவதற்கான டீடைலிங்கும் சிறப்பாக காட்சியாக்கப்பட்டுள்ளது. ஒரு பெண் தன்மை கொண்ட ஆணுக்கு இயற்கையாக வளரும் மார்புப் பகுதியும், செயற்கையாக மார்பை விரிவு படுத்தும் போது ஏற்படும் மருத்துவ விளைவுகளையும் படம் போகிற போக்கில் சிறப்பாகப் பேசியிருக்கிறது
மெயின் கேரக்டரின் அகத்தேவையை புரிந்துகொள்ளாத மனிதர்கள் திரையில் வருகிறார்கள். அவர்கள் வேறு யாருமல்ல..நம்மில் பலர் தான். திரையில் எதையும் ஈசியாக மாற்ற முடியும். நிஜத்தில் கொஞ்சம் கஷ்டப்பட்டேனும் மாற வேண்டும். அதைத் தான் இப்படம் சொல்கிறது.
கமர்சியல் தன்மை இல்லாவிட்டாலும், அகத்தூய்மை கோரும் இப்படத்தை நாம் வரவேற்றே ஆக வேண்டும். விருதுக்கு தகுதியுடைய படம் இந்த நீல நிறச்சூரியன்









