தங்கை மகன் ஹமரேஷ் நாயகனாக அறிமுகமாகும் ‘ரங்கோலி’ திரைப்படக் குழுவுக்கு நடிகர் உதயா மனமார்ந்த வாழ்த்துகள்
தலைப்புக்கேற்றார் போல் வண்ணமயமான இளமை ததும்பும் திரைப்படமான ‘ரங்கோலி’ இன்று திரைக்கு வந்துள்ளது. என்னுடைய தங்கையின் மகன் ஹமரேஷ் இதில் நாயகனாக நடித்துள்ளார் என்பது எங்களது குடும்பத்திற்கு பெருமை அளிக்கும் விஷயமாகும்.
‘தெய்வத்திருமகள்’ மற்றும் ‘மாநகரம்’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது சிறு வயதில் நடித்த ஹமரேஷ் இன்று வளர்ந்து நாயகனாக நம்முன் நிற்கிறார். அவர் திரை உலகில் மிகப்பெரிய வெற்றி பெற வேண்டும் என்று ஒரு நடிகனாகவும் தாய் மாமனாகவும் நான் வாழ்த்துகிறேன்.
இப்படத்தின் மிகப்பெரிய பலமாக மருதநாயகத்தின் ஒளிப்பதிவும் கே எஸ் சுந்தரமூர்த்தியின் இசையும் அமைந்துள்ளது. ஆர் சத்தியநாராயணணின் படத்தொகுப்பு ‘ரங்கோலி’ திரைப்படத்திற்கு வலு சேர்த்துள்ளது. படத்தில் பணியாற்றியுள்ள அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். திரைப்படத்தை மிகவும் சிறப்பாக தயாரித்துள்ள திரு கே பாபு ரெட்டி அவர்களுக்கும் எனது மைத்துனர் திரு ஜி சதீஷ்குமார் அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
இதுவரை இத்திரைப்படத்தை பார்த்த திரையுலகப் பிரபலங்கள், பத்திரிகையாளர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் தங்களது பாராட்டுகளை தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். மக்கள் அனைவரும் இப்படத்தை திரையரங்குகளில் சென்று கண்டு, ரசித்து, வாழ்த்த வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நல்ல திரைப்படங்களை மக்கள் என்றுமே கொண்டாடி இருக்கிறார்கள். அந்த வரிசையில் ‘ரங்கோலி’ அமையும் என்பது எனது நம்பிக்கை. திரையுலகில் நடிக்கவும், ஜெயிக்கவும் திரைப்பட பின்புலம் மட்டும் போதாது, அதற்கு கடவுளின் ஆசியும் மக்களின் ஆதரவும் கட்டாயம் வேண்டும். இவை இரண்டும் ஹமரேஷுக்கு கட்டாயம் அமையும் என்பது உறுதி.