ஏஜென்ட் கண்ணாயிரம் – விமர்சனம்
சந்தானம் நடித்துள்ள ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்படம் இன்று வெளியாகி உள்ளது இந்த திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
வஞ்சகர் உலகம் படத்தை இயக்கிய மனோஜ் பீதா இந்த படத்தை தயாரித்து இயக்கியுள்ளார். இதில் சந்தானம், ரியா சுமன், நகைச்சுவை நடிகர் புகழ், குரு சோமசுந்தரம் உள்ளிட்டவர் நடித்திருக்கின்றனர்.
தெலுங்கில் வெளியாகி வெற்றியடைந்த ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா என்ற படத்தை தமிழில் ஏஜென்ட் கண்ணாயிரம் என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். சந்தானம் நடிப்பில் கடைசியாக வெளிவந்த குலுகுலு, டிக்கிலோனா, சபாபதி உள்ளிட்ட படங்கள் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்காத நிலையில் தற்போது ஏஜென்ட் கண்ணாயிரம் படம் வெளிவந்துள்ளது.
சரியான கேஸ் கிடைக்காமல் தவிக்கும் தனியார் டிடெக்டிவ் சந்தானம் தன்னுடைய அம்மா இறப்பிற்காக சொந்த ஊர் வருகிறார். ஆனால் அவர் வருவதற்குள் உடலை காசியில் தகனம் செய்ய அனுப்பிவிடுகிறார்கள். அதன் பின் சொத்து பிரச்னைக் காரணமாக சில நாட்கள் அங்கேயே தங்க வேண்டிய சூழல். அப்போது அந்த ஊரின் அருகே இரயில் தண்டவாளம் அருகே அதிக அவ்வபோது இறந்தவர்களின் உடல்கள் கிடப்பதாக தகவல் கிடைக்கிறது. இறப்பவர்கள் யார்? அதன் பின் உள்ள சதி என்ன? அதை நாயகன் கண்டுபிடித்தாரா என்பதே ஏஜென்ட் கண்ணாயிரம்.
சந்தானம் தன்னுடைய வழக்கமான பார்முலாவை விட்டுவிட்டு, சற்று சீரிஸான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இருந்தாலும் சில இடங்களில் அந்த கதாபாத்திரத்துடன் கூடிய சில Counter வசனங்களை பேசுகிறார். அது ஒரிரு இடங்களில் மட்டும் சிரிக்க வைக்கிறது.
ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தில் இருந்து ஏராளமான மாற்றங்களை செய்தே இந்தப் படத்தை எடுத்துள்ளனர். குறிப்பாக நாயகியின் ரோலும் மாறியுள்ளது. மேலும் தெலுங்கு படம் நகைச்சுவை, விறு விறுப்பு என பயணிக்கும். அதுவும் இடைவேளை நெருங்கும்போது படம் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரும். ஆனால் ஏஜென்ட் கண்ணாயிரம் படத்தில் அது சுத்தமாக மிஸ் ஆகிவிட்டது. அம்மா செண்டிமெண்டை இதில் அதிகம் சேர்த்துள்ளனர். ஆனால் அதுவும் அவர்கள் நினைத்ததுக்கு மாறாக ரசிகர்களை சென்றடையவில்லை.
இந்தப் படத்தில் காமெடி சாயல் இல்லாமல் கொஞ்சம் சீர்ஸாக நடித்துள்ளார் சந்தானம். அதை சரியாகவே செய்துள்ளார். ஆனால் ரசிகர்களின் கவலையை மறக்க செய்யும் சந்தானமே நமக்கு தேவை என்றே தோன்றுகிறது. அதேபோல் நாயகி ரியா சுமன், புகழ் ஆகியோர் இந்தப் படத்திற்கு என்ன தேவையோ அதையே செய்துள்ளனர்.
ஏஜென்ட் சாய் ஸ்ரீனிவாச ஆத்ரேயா படத்தை அதன் சாரம்சம் மாறாமல் அப்படியே எடுத்திருந்தாலே நிச்சயம் வெற்றியடைந்திருக்கும். ஆனால் ஒரு நல்ல படத்தை கையில் வைத்துகொண்டு வெற்றி வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள் என்றே தோன்றுகிறது.