“’அஞ்சாமை’ என டைட்டில் வைத்துவிட்டு பயந்தால் எப்படி ?” ; இயக்குநர் சுப்புராமனின் தில்லான பேச்சு
தரமான படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்க்கும் பணியை செவ்வனே செய்துவரும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் கடந்த வருடம் ‘இறுகப்பற்று’ படத்தின் மூலம் பல இளைஞர்களின் மனதில் இருக்கும் குழப்பங்களுக்கு நல்லதொரு தீர்வை சொன்னது.. அந்தவகையில் திருச்சித்ரம் சார்பில் டாக்டர் திருநாவுக்கரசு தயாரிப்பில் உருவாகியுள்ள ‘அஞ்சாமை’ படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் உலகமெங்கும் வெளியிடுகிறது.
ஜூன்-7ஆம் தேதி (நாளை) இப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. எப்போதுமே அரசியல் அரங்கில் பரபரப்பான பேசுபொருளாக இருந்து வரும் நீட் தேர்வை மையப்படுத்தி தனது முதல் படத்தை இயக்கியுள்ளார் இயக்குநர் சுப்புராமன். படம் நீட் தேர்வுக்கு ஆதரவாக குரல் கொடுக்கிறதா ? இல்லை எதிர்க்கிறதா ? படம் வெளியானால் சர்ச்சையை கிளப்புமா என்பது உள்ளிட்ட பல கேள்விகளுக்கு மனம் திறந்து பதிலளித்துள்ளார் இயக்குநர் சுப்புராமன்.
இந்த படத்தின் கதை மக்களிடம் சென்று சேருமா, சேராதா என்பது நம் கையில் இல்லை. மெனக்கெட்டு தான் இதன் திரைக்கதையை எழுதியுள்ளோம். காரணம் மக்களுக்கு இந்த படத்தின் மூலம் கருத்து சொல்லவில்லை. என்ன நிலைமையில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம், கொஞ்சம் திரும்பி பாருங்கள் என்று சொல்வது போலத்தான் உருவாக்கியிருக்கிறோம்.
இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் வலி நிறைந்ததாக இருக்கும். நான் கதை சொல்லும்போது யாராவது அழுதால் அதை பார்த்து நான் சிரித்து விடுவேன். இதற்கெல்லாம் அழுகிறார்களே என்று. ஆனால் மற்றவர்களுக்கு நான் கதை சொல்லும்போது எனக்கே அது பலமுறை நடந்தது. படப்பிடிப்பில் கூட விதார்த்தை வைத்து காட்சிகளை படமாக்கும்போது அவருடைய கதாபாத்திரத்திற்குள் நானும் சென்று விடுவேன். உடனடியாக அடுத்த ரகுமான் சாரை வைத்து காட்சிகளை எடுக்க வேண்டும் என்றால் அதிலிருந்து வெளியே வருவதற்கு சிரமமாக இருக்கும்.