“இரண்டு படங்களின் ரிலீஸையும் உதயநிதி அழகாக கையாண்டார்” ; நன்றி தெரிவித்த ஷாம்
தமிழ் திரையுலகில் இயக்குநர் ஜீவா இயக்கத்தில் வித்தியாசமான முயற்சியாக உருவான 12B படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஷாம். கடந்த 20 வருடங்களில் நல்ல கதை, நல்ல கதாபாத்திரம் என படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் ஷாம் இந்த நிலையில் தற்போது தளபதி விஜய் நடிப்பில் இயக்குநர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் கடந்த பொங்கல் பண்டிகையன்று வெளியான வாரிசு படத்தில் விஜய்யின் சகோதரராக மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் ஷாம்.
தில் ராஜு தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக படத்தில் நடித்த ஷாம் கதாபாத்திரத்திற்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளதுடன் அதற்கான வரவேற்பும் திரையரங்குகளில் நன்றாகவே வெளிப்பட்டுள்ளது.

இந்த நிகழ்வில் படத்தில் நடித்த அனுபவம் குறித்து நடிகர் ஷாம் பேசும்போது, “ஒரே சமயத்தில் வாரிசு, துணிவு என இரண்டு படங்களும் வெளியான சூழ்நிலையில் இதை அழகாக கையாண்டு இரண்டு படங்களையும் சமமாக பாவித்த உதயநிதி ஸ்டாலினுக்கும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனத்திற்கும் இந்த சமயத்தில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இதுவரை என் நடிப்பு அனுபவத்தில் நான் பார்த்த தயாரிப்பாளர்கள் பலரும் இரண்டு மூன்று நாட்கள் மட்டும் படப்பிடிப்புக்கு வருவதோடு சரி. பின் எப்போதாவது ஒருநாள் தான் வருவார்கள். ஆனால். தயாரிப்பாளர் தில் ராஜு, தினசரி படப்பிடிப்பு தளத்திற்கு வந்து விடுவார்.. அந்த அளவிற்கு சினிமாவின் மீது அவர் ரொம்ப ஈடுபாடு கொண்டிருகிறார். இவ்வளவு பணம் போடுகிறாரே, அது அவருக்கு பத்திரமாக் திரும்பி வந்துவிடுமா என்று கூட நான் யோசித்திருக்கிறேன். ஆனால் பணம் என்பது அவருக்கு ஒரு விஷயமே அல்ல. அவர் தமிழில் சினிமாவில் தொடரவேண்டும்.. இன்னும் தமிழில் நிறைய படங்கள் தயாரிக்க வேண்டும்.

நான் எப்போதும் வெளிப்படையாக பேசுபவன்.. இந்த படத்தின் டப்பிங் பணிகளை முடித்த பின் படம் எப்படி இருக்கிறது என என்னிடம் வம்சி கேட்டார். நாம் எவ்வளவுதான் அழகாக எடுத்து இருந்தாலும் டப்பிங், எடிட் பண்ணி இருந்தாலும் பின்னணி இசை தான் இந்த படத்தோட வெற்றியை தூக்கி நிறுத்தும் என்று கூறினேன். அது உண்மை என படம் பார்க்கும்போது நிரூபித்து விட்டார் இசையமைப்பாளர் தமன். படத்தின் வெற்றியில் மிகப்பெரிய பங்கு அவருக்கு இருக்கிறது.

புறம்போக்கு படத்தில் நடித்தபிறகு கிட்டத்தட்ட ஐந்து வருட இடைவெளி விழுந்துவிட்டது. இந்த இடைவெளியை நிரப்புவதற்கு சரியான படமாக வாரிசு வந்தபோது தளபதி விஜய் படம் என்பதால் உடனே ஒப்புக்கொண்டேன். இப்போது அந்த இடைவெளியை இந்த படம் நிரப்பி விட்டது. படம் பார்த்துவிட்டு பல நண்பர்கள் என்னை அழைத்து பாராட்டும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது” என்று கூறினார்