கலப்பை மக்கள் இயக்க தலைவர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் இயக்குனர் பி.டி. செல்வகுமார் எஸ்.பி.பாலசுப்ரமணியத்திற்கு வடபழனி சிகரம் ஹாலில் நினைவாஞ்சலி நடத்தினார்.
தலைமையேற்று T.ராஜேந்தர் பேசிய போது ..
பாலு மீது அளவு கடந்த காதல் கொண்டவன் நான். அவருக்கு நான் செல்லம், எனக்கு அவர் செல்லம். அவர் மறைவுக்கு என்னால் போகமுடியவில்லை. அவர் கண் மூடி , வாய் மூடி படுத்திருப்பதை பார்க்கும் சக்தி எனக்கில்லை. இன்னும் பாலு நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார். எனது முதல் படம் ஒரு தலை ராகம் படத்தில் வாசமில்லா மலரிது பாடலை அவர் பாடும் போது இடையில் சிரிப்பு வரவேண்டும் என்று சொன்னேன். சோகப்பாடலில் சிரிப்பா என்று எல்லோரும் கிண்டலாக சிரித்தார்கள். ஆனால் நான் பாடி காட்டி, அவரை பாட வைத்தேன். என்னுடைய பல வெற்றி படங்களின் பாடல்களுக்கு உயிர் தந்தவர். நான் “பாடு நிலா பாலு” பட்டம் கொடுத்த போது அவரால் ஏற்று கொள்ளமுடியவில்லை . நிலா என்றால் பெண் என்று நிராகரித்தார். நான் தான் ஆண்தேவதை என்று விளக்கமளித்து அந்த பெயரை சூட்டினேன். யுகம் உள்ளவரை பாலுவின் பாடல் காற்றோடு ஒலித்துக்கொண்டு தான் இருக்கும். இந்த நினைவாஞ்சலி கள்ளம் கபடமில்லாத ஒரு நேர்மையான உழைப்பாளி கலப்பை மக்கள் இயக்க தலைவர் , புலி தயாரிப்பாளர் பி.டி.செல்வகுமாரால் நடத்தப்படுகிறது. நெல்லை சீமையின் நேர்மையான புலி, எஸ்.ஏ.சி யின் நம்பிக்கை புலி, நல்லதுக்கு குரல் கொடுக்கும் வீர புலி, தொண்டுகள் செய்வதில் முதன்மை புலி, பத்திரிகை துறையில் எழுத்து புலி, இப்படி PTS க்காக நானும் சரி, எஸ்.ஏ.சி. அண்ணனும் எப்போதும் உடன் இருப்போம். மண்ணிலிருந்து விண்ணுலகிற்கு கேட்கும், எனது நினைவஞ்சலி, ஈர ரோஜாக்களால் பன்னீர் பூக்களில் வாசத்தோடு உன் கீதாஞ்சலி மணம் வீசி கொண்டே இருக்கும். என்று கண்ணீர் மல்கி தேம்பி தேம்பி அழுதார் . அழுது கொண்டே எஸ்.பி,பாலு பாடிய வாசமில்லா மலரிது, என்னோட என்னோட மீனாட்சி , சலங்கையிட்டால் ஒரு மாது, ஆகிய பாடல்களை கண்ணீரோடு பாடி அனைவரையும் உணர்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தினார்.
இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ் பேசிய போது..
பார்வையற்ற சகோதர்கள் எஸ் .பி.பியின் பாடலை பாடி இந்நிகழ்ச்சி தொடங்கியது கண்கலங்குகிறது.கலப்பை மக்கள் இயக்கதலைவர் P.T.செல்வகுமார் நேர்மையானவர், நேர்த்தியானவர்.அவர் நடத்தும் இந்த நிகழ்வு உயிரோட்டமாக உள்ளது.நான் 1500 பாடல்களுக்கு மேல் இசை அமைத்துள்ளேன். எனது இசை பயணத்தில் பிரமிக்க வைத்த பாடகர் எஸ் .பி.பாலு. வரிகளை உள்வாங்கிய வேகத்தில் கமல் என்றால் கமலாக, ரஜினி என்றால் ரஜினியாக ,விஜய் என்றால் விஜயாக அவரவர் குரல் போலவே பாடும் பாங்கு கொண்டவர் பாலு..பட்டி,தொட்டி ,பாமரர் ,படித்தவர் ,பேதமில்லாமல் எல்லா இடங்களிலும் அவரது பாடல் உயிரோடு வாழ்கிறது.பாலு நம்மோடு வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்.இந்த நினைவு அஞ்சலிக்கு எஸ்.ஏ.சந்திரசேகர் ,டி .ராஜேந்தர் வருகை தந்திருப்பது பெருமையாக இருக்கிறது. இறுதியாக கமல் நடித்து எஸ்.பி.பி பாடிய உன்னை நான் பார்த்தது வெண்ணிலா கேட்டது என்ற பாடலை முழுவதும் பாடி அஞ்சலி செலுத்தினார் இசை அமைப்பாளர் சங்கர் கணேஷ்.
100 பார்வையற்ற பாடகர்களுக்கு உதவித்தொகை…
டைரக்டர் எஸ்.ஏ .சந்திரசேகரன் பேசும் போது ,நான் இயக்கிய நான் சிகப்பு மனிதன் படத்தில் எஸ்.பி.பி. பாடிய “பெண் மானே சங்கீதம் பாடி வா” இன்று வரை இதமாக ஒலிக்கும் பாடல்.மனதுக்கு அமைதி வேண்டும் என்றால் இந்த பாடலை கேட்பேன் .P.T.செல்வகுமார் எங்கள் குடும்பத்தில் ஒருவர். அவர் எந்த நிகழ்வு நடத்தினாலும் தட்டாமல் வந்து விடுவேன்.ஜெமினி சினிமாவில் சிறந்த எழுத்தாளராக இருந்த அவரை எனக்கும் விஜய்க்கும் பி.ர்.ஓவாக அமர்த்தினேன். ஒழுக்கம், உழைப்புக்கு சொந்தக்காரர். கொரோனா கால கட்டத்தில் தினந்தோறும் ஏழைகளுக்கு அரிசி, மளிகை பொருட்கள், என உதவி செய்து வந்தவர் தான் படித்த LMS மேல் நிலை பள்ளிக்கு தனது சொந்த செலவில் கட்டிடம் , குபேர தியான மண்டபம், மலை குகை மாத கோவில் என பல நற்பணிகளை செய்து வரும் செல்வகுமார் நினைத்த உடன் ஒரு நிகழ்ச்சியை நடத்தும் சாதூர்யம் அவரிடம் உண்டு. காலையில் தான் ஊரில் இருந்து வந்தார். இப்படி ஒரு அற்புதமான நிகழ்ச்சியை நடத்திவிட்டார். வெறுமனே நினைவஞ்சலி என்று மாலையும் பூவும் போடாமல் அவர் நினைவாக 100 பார்வையற்ற பாடகர்களுக்கு உதவித்தொகை வழங்கியது பாராட்டுக்குரியது. காதல் என்றால் அதன் பல்கலைக்கழகம் டி .ஆர் தான் காதலுக்கு அத்தனை பெருமை சேர்த்தவர். அதே போல் வாழ்ந்தும் வருபவர், இவ்வாறு எஸ்.ஏ.சந்திரசேகரன் பேசினார் .
இந்த நிகழ்வில் இயக்குனர் பேரரசு,இசை அமைப்பாளர் சிற்பி,பாபு கணேஷ், ரமேஷ் கண்ணா, இயக்குனர் சாமி, சிகரம் சந்திரசேகர்,பாடலாசிரியர் சினேகன் மற்றும் பல திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர். கலப்பை தலைவர் P.T..செல்வகுமார் வரவேற்று பேசினார்.









