அமரம் -விமர்சனம்
திவ்யஷேத்ரா பிலிம்ஸ் சார்பில் சி.ஆர். ராஜன், நிர்மலா ராஜன் தயாரிப்பில், ராஜன் தேஜேஸ்வர், ஐரா அகர்வால், ஜார்ஜ் மரியான், சாய் தீனா, நாகி நீடு உள்ளிட்டோர் நடிப்பில், திருவருள் கிருஷ்ணா எழுதி இயக்கியிருக்கும் திரைப்படம் ‘அமரம்’.
மம்முட்டி நடிப்பில், பரதன் இயக்கத்தில் 1991-ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான கிளாசிக் திரைப்படத்தின் பெயரும் ‘அமரம்’தான். படகின் முக்கியமான ஒரு பகுதி என்ற பொருளில் அந்தப் பெயர் வைக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்த ‘அமரம்’ என்பது அமரத்துவம் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
தாதாக்கள், பெரிய மனிதர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கை காட்டும் நபர்களை பணத்திற்காக ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் நபர் அருகன் (ராஜன் தேஜேஸ்வர்). சிறுவயதில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்ட தனது தாயின் உடலைப் பார்த்து கதறிய சம்பவத்திற்குப் பிறகு, அவனது வாழ்க்கை சென்ற பாதையின் விளைவுதான் அவனது தற்போதைய வாழ்க்கை.
ஒரு அரசியல்வாதியை கொலை செய்யும் வேலை அருகனுக்கு வருகிறது. அவனும் எவ்வித தயக்கமுமின்றி அந்த வேலையைச் செய்து முடிக்கிறான்.
இதன் விளைவாக, அந்த அமைச்சரின் மகள் (ஐரா அகர்வால்) அருகனைக் கொல்ல முடிவு செய்கிறாள். தனது நண்பன், நண்பனின் தந்தை மற்றும் அந்தத் தந்தையின் நண்பரான அரசியல்வாதி (நாகி நீடு) ஆகியோருடன், அருகன் வசிக்கும் அந்த ஒதுக்குப்புறமான, வறண்ட, கரடுமுரடான மலைப்பகுதிக்கு வருகிறாள்.
அங்கு எதிர்பார்த்தபடியே சில திருப்பங்கள் நடக்கின்றன. ஒரு கட்டத்தில், தன்னைக் கொல்ல வந்த அந்தப் பெண்ணையே அருகன் காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகிறது. தனது தந்தையைக் கொன்ற அருகனைவிட, தன்னைச் சுற்றியிருப்பவர்கள்தான் மிகவும் மோசமானவர்கள் என்பதை அந்தப் பெண் புரிந்துகொள்கிறாள்.
உண்மையான எதிரிகள் அருகனையும் அந்தப் பெண்ணையும் கொல்ல முயலும்போது என்ன நடந்தது என்பதுதான் ‘அமரம்’ படத்தின் கதை. (இப்போது படத்தின் தலைப்பை யோசித்தாலே, படத்தின் முடிவு என்னவாக இருக்கும் என்பதையும் ஓரளவு யூகித்துவிட முடியும்.)
அருகன் போன்றவர்களின் ஒருநாள் வாழ்க்கையைப் பதிவு செய்யும் கோயம்பேடு சந்தைக் காட்சிகள் அபாரம். அருகனுக்கும் விஜயனுக்குமான (சாய் தீனா) கோபம் கலந்த பாசமும் கவனிக்க வைக்கிறது.
படத்தின் பெரும்பகுதி கதை நடைபெறும் அந்த வறண்ட, மலைப்பாங்கான லொக்கேஷன் அசத்தலாக உள்ளது. ஒளிப்பதிவாளர் பரத்குமாருக்கும் பாராட்டுகள்.
சிறுவயதிலேயே நெஞ்சில் இருந்த ஈரம் வற்றிப்போன ஒரு கொலைகாரன் கதாபாத்திரத்தில் ராஜன் தேஜேஸ்வர் சிறப்பாக நடித்துள்ளார். குறிப்பாக சண்டைக்காட்சிகளில் பெரும் உழைப்பைக் கொடுத்துள்ளார். மிராக்கிள் மைக்கேல் அமைத்திருக்கும் சண்டைக்காட்சிகளும் சிறப்பு.
ஐரா அகர்வால், ‘ஹைய்யா’ என்று சொல்ல வைக்கும் அளவுக்கு இல்லாவிட்டாலும், ‘அய்யோ’ என்று சொல்ல வைக்கும் அளவிலும் இல்லை.
ஜார்ஜ் மரியான் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஆனால், நடிப்பைப் பொறுத்தவரை அவருக்கு எந்தக் கதாபாத்திரம் கொடுத்தாலும் ஒரே மாதிரியாகவே அணுகுகிறார் என்ற எண்ணம் ஏற்படுகிறது. அதைவிட, அவரது கதாபாத்திரத்தால் படத்துக்கு பெரிய பலன் எதுவும் இல்லை. பெரும்பாலும் வெட்டி பில்டப்புக்கே அது உதவுகிறது.
மிக்கி ஜே. மேயரின் இசையும், ஸ்ரீராமரின் படத்தொகுப்பும் ஜஸ்ட் ஓகே ரகம்.
‘கூடவே இருப்பவர்களாகிய துரோகிகளைவிட, கூலிக்காக கொலை செய்பவன் எவ்வளவோ மேல்’ என்ற கருத்தைச் சொல்ல வருகிறது படம். ஆனால், இந்தக் கருத்தை அழுத்தமாகப் பதிவு செய்யாமல், “So what?” என்று கடந்து செல்லும் அளவுக்கே மேலோட்டமாக எழுதியிருக்கிறார்கள்.
யாரைக் கொல்வதற்காக ஒரு பெண் வருகிறாளோ, இறுதியில் அவளையே அவன் காப்பாற்ற வேண்டிய சூழல் உருவாகும் அந்தத் திருப்பம் வரை செம… செம!
ஆனால், அதற்குப் பிறகு என்ன செய்வது என்று தெரியாமல் திரைக்கதை தடுமாறுகிறது. திரைக்கதை செல்லும் பாதையில் அருகனும் அந்த அமைச்சரின் மகளும் அலைகிறார்கள்; அவர்களுடன் படம் பார்ப்பவர்களையும் கட்டி இழுத்துக்கொண்டு செல்கிறது திரைக்கதை.
கதையும், காட்சியமைப்புகளும், வசனங்களும் நேர்த்தியாக இருந்தாலும், படத்தில் ஏதோ ஒரு குறை இருக்கிறது என்ற உணர்வு ஆரம்பம் முதல் இறுதி வரை மனதுக்குள் தோன்றுவதைத் தவிர்க்க முடியவில்லை.
இப்படிப்பட்ட குறைகள் இருக்கும் படத்தை, இயக்குநர்கள் ஒருமுறைக்கு இருமுறை பார்த்து, தேவையான இடங்களில் சரிசெய்வதே வெற்றிக்கான வழியாக இருக்கும்.
மொத்தத்தில், இந்த ‘அமரம்’ – சுமார் ரகம்.









