‘குப்பி’ திரைப்படத்தின் 10ஆம் ஆண்டு நிறைவு கொண்டாட்டம்: மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி!
மீண்டும் இணையும் டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணி
டொவினோ தாமஸ் – ஜான்பால் ஜார்ஜ் கூட்டணியில் புதிய திரைப்படம் – மீண்டும் ஒன்றிணையும் ‘குப்பி’ டீம்
மலையாள திரையுலகில் விமர்சன ரீதியாகப் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘குப்பி’ (Guppy) திரைப்படம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், அத்திரைப்படத்தின் நாயகன் டொவினோ தாமஸ் மற்றும் இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் இணைந்துள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும், இவர்களின் அடுத்தகட்ட பிரம்மாண்ட திரைப்படம் குறித்த அறிவிப்பாகவும் இது பார்க்கப்படுகிறது.
திரையுலக வட்டாரங்களின்படி, இவர்கள் இருவரும் மீண்டும் இணையும் புதிய திரைப்படம், இருவரின் திரைப் பயணத்திலேயே மிக அதிக பொருட்செலவில் (High-budget) உருவாகும் பிரம்மாண்ட படைப்பாக இருக்கும் எனத் தெரியவருகிறது. இவர்களுடன் ‘குப்பி’ படத்தில் நடித்த சேத்தன் ஜெயலாலும் இப்புதிய படத்தில் இணையவுள்ளார்.

‘குப்பி’ படத்திற்கு பிறகு ‘என்னு நிண்டே மொய்தீன்’, ‘தீவண்டி’, ‘கோதா’, ‘மாயநதி’, ‘மின்னல் முரளி’, ‘2018’ மற்றும் ‘அஜயண்டே ரண்டாம் மோஷனம்’ (ARM) எனத் தொடர் வெற்றிப் படங்களைக் கொடுத்து, இன்று இந்திய அளவில் அறியப்படும் முன்னணி நாயகனாக டொவினோ தாமஸ் உருவெடுத்துள்ளார்.
அதேபோல, இயக்குநர் ஜான்பால் ஜார்ஜ் தனது அடுத்த படைப்பான ‘அம்பிலி’ மூலம் விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றதோடு, பிளாக்பஸ்டர் வெற்றி பெற்ற ‘ரோமான்சாம்’ திரைப்படத்தை தயாரித்து முன்னணி தயாரிப்பாளராகவும் மலையாள சினிமாவில் தடம் பதித்துள்ளார்.









