• About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us
Tamil2daynews
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
  • முகப்பு
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்
No Result
View All Result
Tamil2daynews
No Result
View All Result
Home சினிமா சினிமா செய்திகள்

சத்யராஜ் முதல் அமீர்கான் வரை : ஒரு படப்பிடிப்பு ஏற்பாட்டாளரின் அனுபவங்கள்!

by Tamil2daynews
May 25, 2023
in சினிமா செய்திகள்
0
0
SHARES
38
VIEWS
Share on FacebookShare on TwitterShare on Whatsapp

சத்யராஜ் முதல் அமீர்கான் வரை : ஒரு படப்பிடிப்பு ஏற்பாட்டாளரின் அனுபவங்கள்!

 

திரைப்படங்களைப் பார்க்கும்போது சண்டைக் காட்சிகளில் கண் இமைப்பதற்குள் சரேலென வேகமாகப் பறந்து செல்லும் வாகனங்களை  ஓட்டுபவர்களை நமக்குத்  தெரியாது.  முன் பக்கம் உயர்த்தி,இரண்டு சக்கரத்தில் எகிறிப்பாயும் காருக்குள் இருப்பது யார் என்றோ, கர்ணம்  அடித்து சறுக்கி விழும் மோட்டார் சைக்கிளில் இருப்பவர் முகம் யாருடையது என்றோ எவருக்கும் தெரியாது.பிரபல கதாநாயகர்களை மிரட்டும் வில்லனின் அடியாட்களில் ஒருவராக வந்து பேசும் அந்த நடிகரின் முகமோ நமக்குத் தெரியாது.ஒரு படத்தின் பரபரப்புக்காகத் தேவைப்படும் இவர்களுக்குச் சரியான அடையாளமும் அங்கீகாரமும் கிடைப்பதில்லை.இந்த வரிசையில் உள்ளவர் தான் நடிகர் டி. குமரன் .இவரது வாழ்க்கையை அறிந்தால் அவரை நொடிப்பொழுதுகளில் கடந்து போகும் ஒருவராக நினைக்க முடியாது.
நூற்றுக்கணக்கான படங்களில் இப்படிச் சில நிமிடங்களில் பிரபலங்களுடன் நடித்துள்ளவர் இவர். அதுமட்டுமல்ல பாண்டிச்சேரியில் 500க்கும் மேற்பட்ட படங்களுக்கு லொகேஷன் மேனேஜராக இவர் பணியாற்றி இருக்கிறார். பாண்டிச்சேரி பகுதியில் எந்த இடத்தில் படப்பிடிப்பு என்றாலும் இவர் அனுமதி வாங்கிக் கொடுத்து சேவை செய்து வருகிறார்.
இனி,  குமரனுடன் பேசுவோம்.
உங்களுக்குள் சினிமா ஆர்வம் எப்படி வந்தது?
நான் பத்து வயதில் இருந்து கூத்துபட்டறையில் கற்றுக்கொண்டு இயங்கி வருகிறேன் .நானே ஒரு கூத்துப் பட்டறையைப் பாண்டிச்சேரியில் வைத்துள்ளேன்.ஏராளமான விழாக்கள் உள்ளூர், வெளியூர், வெளிநாடு சார்ந்த விழாக்கள் ,ஆலய விழாக்கள் போன்றவற்றில் நாங்கள் நாடகங்கள், கூத்துகள், என்று மாறுவேடம் பூண்டு நடித்துள்ளோம். குறிப்பாக நான் 35 ஆண்டுகளாக நான் காளி வேடம் போட்டு, தோன்றி வருகிறேன். 15 ஆண்டுகளாக குறத்தி வேடம் போட்டு நடித்து வருகிறேன்.பாண்டிச்சேரியில் நான் ஒரு கூத்துக் கலைஞனாகப்  பரவலாக அறியப்பட்டவன்.நிறைய கற்றுக் கொண்டும் கற்றுக் கொடுத்தும் வருகிறேன்.
எனக்குச் சின்ன வயதிலேயே சினிமா மீது இனம் புரியாத ஆர்வம் வந்தது .நான் அடிப்படையில் ஒரு கூத்து கலைஞன் அல்லவா?
நான் ஒரு கூத்து கலைஞனாக இருந்தாலும் எனக்கு வண்டி வாகனங்கள் மீது ஆர்வம் உண்டு. ஆட்டோ ஓட்டுநர்,வாகனங்கள் ஓட்டுநர், மெக்கானிக் என்று எனக்கு இன்னொரு பக்கம் உண்டு.
பாண்டிச்சேரி ராஜா திரையரங்கில் ஆட்டோ ஓட்டினேன். திரையரங்கிலும் பணியாற்றினேன். சொந்தமாக வாங்கி 15 ஆட்டோக்கள், டெம்போக்கள் என்று   ஓட்டியிருக்கிறேன்.
ராஜா திரையரங்கில் நிறைய படங்கள் பார்த்திருக்கிறேன்.படம் ரிலீஸ் ஆகும் போது பெட்டி எடுத்துச் செல்வது ஒரு விழாவுக்கான கொண்டாட்டமான அனுபவம். சிறு சிறு படங்களை விநியோகமும் செய்துள்ளேன்.சினிமா மீதுள்ள ஆர்வத்தில் சென்னை வந்து ஏவிஎம் ஸ்டுடியோவில் நுழைய முயற்சி செய்வேன். வாசலிலேயே விரட்டி அடித்து விடுவார்கள். ஆனால் வண்டி வாகனங்களை மட்டும் உள்ளே விடுவார்கள். அப்படி ஒரு நாள் அதிகாலை 5 மணிக்கு ஆட்டோவில் வந்தேன். உள்ளே விட்டார்கள்.
ஒரு தளத்தில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.அதிகாலையில்தான் லைட்மேன்கள் மேலே ஏறுவார்கள்.நானும் அவர்களைக் கெஞ்சி மேலே ஏறினேன். ஒரு நாள் முழுக்க அங்கிருந்து நான் கீழேநடக்கும் படப்பிடிப்பை வேடிக்கை பார்த்தேன்.
அவர்கள் மதிய உணவு கீழே வரும் போது கூட , கீழே நான் இறங்கி வரவில்லை.
ஏனென்றால் என்னை துரத்தி அடித்து விடுவார்களோ என்று பயம். இப்படி ஒரு நாள் முழுக்க காலை முதல் மாலை வரை சிறுநீர் கழிக்கக் கூட வராமல் மேலேயே இருந்தேன். அப்படி மெல்ல மெல்ல பழக்கம் வந்தது.படப்பிடிப்பில் அவசரமாக ஒரு டிரைவர் தேவை என்றால் ஆள் கிடைக்காமல் விழிப்பார்கள்.அப்போது திடீர் ஓட்டுநராக மாறி நான் ஓட்டுவதுண்டு.  நான் அனைத்து வாகனங்களும் ஓட்டுவதால் மெல்ல மெல்ல பழக்கம் கிடைத்தது. படப்பிடிப்பு இடங்களில் அவசரத்திற்கு வாகனங்களை ஓட்டி நகர்த்தி அவர்களுக்கு உதவுவேன்.
எந்த வண்டியாக இருந்தாலும் நான் எடுப்பது அனைவருக்கும் தெரியும்.
இந்த விஷயம் தெரிந்து,
பல படங்களில் இப்படி வேகமாக வாகனங்களை என்னை ஓட்ட வைத்து காட்சிகள் எடுத்துள்ளார்கள்.மோட்டார் பைக்குகளை ஒற்றைச் சக்கரத்தில் சீறவிட்டு ஓட்டி உள்ளேன்.
இப்படிப் பார்த்து ஒரு வழியாகப் பலரது  அறிமுகங்களும் எனக்குக் கிடைத்தன.
அந்த அறிமுகத்தில் சிவசக்தி மூவி மேக்கர்ஸ் அலுவலகத்தில் வேலை பார்த்தேன் .அது வெற்றிக் கொடி கட்டு படத்தின் காலம்.
ஆனாலும் வருமான நம்பிக்கை ஏதும் கிடைக்கவில்லை
ஒரு கட்டத்தில் சினிமா நமக்குச் சரிப்பட்டு வராது என்று தோன்றியது. அதன்படி1995-ல் பாண்டிச்சேரி திரும்பி விட்டேன்.இனி சினிமாவே நமக்கு வேண்டாம் என்று ஒதுங்கி நான் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன்.
மீண்டும் சினிமாவுக்குள் வர எந்தச் சூழல் காரணமாக இருந்தது?
இயக்குநர் அமீர் இயக்கிய மெளனம் பேசியதே படத்தில் லொகேஷன் பார்க்க எனக்கு ஒரு வாய்ப்பு வந்தது .இத்தோடு சரி என்று தான் நான் வேலை பார்த்தேன்.ஆனால் பிறகு எனக்கு வந்த ஒரு போன் தான் என் வாழ்க்கையையே மாற்றியது.
ஒரு நாள் பாண்டிச்சேரிக்குப் படப்பிடிப்புக்கு வந்த சத்யராஜ் சார் என்னை அழைத்தார். அந்தப் படம் ஐயர் ஐபிஎஸ். பாண்டிச்சேரியில் எந்த வேலை கொடுத்தாலும் குமரன் செய்து விடுவான் என்று கூறி என்னைக் கூப்பிட வைத்தார். அந்தப் படப்பிடிப்புக்கான இடங்களைக் கேட்டபோது நான் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அது மட்டுமல்ல நான் அந்தப் படத்தில் தோன்றி நடிக்கவும் வாய்ப்பு கொடுத்தார்.அதன்படி நான் அதில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆக நடித்தேன். அதற்கு முன்பு நான் வைகாசி பொறந்தாச்சு, கடவுள் போன்ற படங்கள் சில சிறு காட்சிகளில் வந்தாலும் ஐயர் ஐபிஎஸ் என்னால் மறக்க முடியாத படம்.இது நடந்தது 2000த்தில்.அதன் பிறகு எனக்கு மளமளவென லொகேஷன் பார்க்க வாய்ப்புகள் வந்தன. அதற்குப் பிள்ளையார் சுழி போட்டவர் சத்யராஜ் சார் தான் என்பேன்.
இப்படிப் பாண்டிச்சேரியிலேயே படப்பிடிப்புகளுக்கு ஏற்பாடு செய்வது, லொகேஷன்கள் ஏற்பாடு செய்வது,தயாரிப்பு நிர்வாகத்தை கவனித்துக் கொள்வது என்று மெல்ல மெல்ல வளர ஆரம்பித்தேன்.”பாண்டிச்சேரி படப்பிடிப்பா உடனே குமரனைக் கூப்பிடு “என்கிற அளவிற்கு வந்துவிட்டேன்.எல்லாமே ஒருவர் மூலம் ஒருவர் என்று கூறிவந்த வாய்ப்புகள் தான். இப்படி இதுவரை சுமார் 500 படங்களிலும் , 500 விளம்பரங்களிலும், 200 பாடல்களிலும் நான் பணியாற்றி இருக்கிறேன்.பாண்டிச்சேரியில் எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் என்னைத் தொடர்பு கொள்கிற அளவுக்கு நான் வளர்ந்திருக்கிறேன்.
படப்பிடிப்பு ஏற்பாடு செய்த அனுபவங்களில் மறக்க முடியாதவை?
 இயக்குநர் கே வி ஆனந்த் அவர்கள் எனக்கு தொடர்ந்து வாய்ப்பு அளித்தார் .அவரது அயன் ,மாற்றான், காப்பான், அனேகன் போன்ற படங்கள் முழுக்க பாண்டிச்சேரியில்தான்  படபிடிப்பு நடக்கும். அயன் படமே 40 நாட்கள் அங்கு நடந்தது.பாண்டிச்சேரியில் இப்போது ஏராளமாகப் படிப்பிடிப்புகள் நடக்கின்றன .அதற்கு காரணம் அவர்தான் என்று சொல்வேன் .ஏனென்றால்அவர்தான் பாண்டிச்சேரியைத் தனது அழகான ஒளிப்பதிவின் மூலம்  வெளி உலகத்திற்குக் காட்டியவர்.
நடிகர் விஜய் அவர்களின் சுறா படத்திற்கு நான் படப்பிடிப்பிடங்களை ஏற்பாடு செய்து கொடுத்தேன்.மாஸ்டர் படப்பிடிப்பு சமயம் அது.ஒரு நாள் விஜய் சார் எனக்கு  போன் செய்தார். அப்போது நெய்வேலியில் படப்பிடிப்புக்கு அனுமதி வாங்கி தரச் சொன்னார் அதன்படி  செய்து கொடுத்தேன்.அவரது வேலாயுதம் படத்திற்காகப் பாலம்  உடைந்து விழுவது போன்ற காட்சியை எடுக்கத் தமிழ்நாட்டில் அனுமதியில்லை. இங்கே தான் எடுக்கப்பட்டது.
லிங்குசாமி அவர்களின் படங்கள் தொடர்ந்து இங்கேதான் நடக்கும் .வேட்டை அப்படி நடந்தது. விக்ரம் சார்  நடித்த ராஜபாட்டை இங்குதான் நடந்தது.விஷால் சார் படங்கள் தொடர்ந்து இங்கு தான் நடக்கின்றன.தனுஷின் அனேகன், பட்டாசு போன்ற படங்களும் இங்கு படப்பிடிப்பு நடந்தவைதான்.
விஜய் ஆண்டனி அவர்களுடன் பிச்சைக்காரன் படத்தில் பணியாற்றினேன். படப்பிடிப்பு இடங்கள் ஏற்பாடு செய்தேன்.அந்தப் படத்தில் எனக்கு நடிக்க வாய்ப்பும் கொடுத்தார்.படத்தின் கதைப்படி அவர் முதன் முதலில் பிச்சை எடுக்கச் செல்லும் காட்சியில் உனக்குக் கை கால் எல்லாம் நன்றாகத் தானே இருக்கிறது என்று அவரைக் கேலி செய்து அடிப்பது நான் தான்.
விஜயகாந்த் அவர்களின் சபரி படத்தில் நான் இப்படி அனுமதி வாங்கிக் கொடுத்தேன். அவர் விருதகிரி படம் எடுத்த போது தமிழ்நாட்டில் ஜெயலலிதா ஆட்சியில் அவருக்கு இங்கு அனுமதி கிடைக்கவில்லை. எங்கு போனாலும் பிரச்சினை வந்தது .அப்போது நான் அவருக்குப் பாண்டிச்சேரியில் இடங்களைத் தேர்வு செய்து அனுமதி வாங்கிக் கொடுத்தேன். குறிப்பாகப் பாண்டிச்சேரி பிரெஞ்ச் சிறையில் அனுமதி வாங்கிக் கொடுத்தேன் அதை வெளிநாடு போல் மாற்றிச் சண்டைக் காட்சிகள் எடுத்தார்கள்.
எனது வேலைகள் பற்றி மிகவும் மகிழ்ந்தார் .யாரும் செய்யாததை நீ செய்தாய் என்றார்.
கமல் அவர்களின் தசாவதாரம் படத்திற்கு நான் இடங்களைத் தேர்வு செய்து அனுமதி வாங்கிக் கொடுத்தேன்.
தசாவதாரம் படத்தில் நடித்த வெள்ளைக்காரர்களை எல்லாம் நான் தான் அழைத்து வந்தேன் .கமல் சாரிடம் இவர் தான் வெள்ளைக்காரர் என்றால் உடனே நம்பி விட மாட்டார்.வெள்ளைக்காரர்களில் பல ரகம் உண்டு. அவருக்கு இங்கிலாந்து காரருக்கும் பிரெஞ்சுக்காரருக்கும் ஜெர்மனிக்காரருக்கும் வித்தியாசம் தெரியும் முகத்தைப் பார்த்து, மூக்கைப் பார்த்து அவர், இவர் இந்த நாட்டுக்காரர் என்று கண்டுபிடித்து விடுவார்.தசாவதாரம் படத்தில் வரும் ஜார்ஜ் புஷ் கேரக்டருக்கான வெள்ளைக்காரரை நான் தான் ஆரோவில் இருந்து அழைத்து வந்தேன்.அந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிக்கு ,பாண்டிச்சேரி கடற்கரையில் 150 அடி நீளத்திற்கு டிராலி போட்டுப் படமாக்கினார்கள்.
அவரது உன்னைப்போல் ஒருவன் படத்திற்கும் ஏர்போர்ட்டில் படப்பிடிப்பு நடத்த அனுமதி வாங்கிக் கொடுத்தேன். ஹெலிகாப்டர் எல்லாம் வரவழைத்து உதவினேன்.
அவரது விக்ரம் படத்தின் கிளைமாக்ஸ் காட்சிகள் எல்லாம் இங்கு தான் எடுக்கப்பட்டன.இப்படி கமல் சாருக்கும் எனக்கும் தொடர்பு உண்டு.
உதயநிதி ஸ்டாலின் அவர்களின் நண்பேண்டா படத்தின் போது ஜெயலலிதா ஆட்சி இருந்ததால் தமிழ்நாட்டில் படப்பிடிப்பு நடத்துவதில் பிரச்சினை இருந்தது. எங்குமே நடத்த விடவில்லை.  திருச்சியில் செட் எல்லாம் போட்டுப் படப்பிடிப்பு நடத்த முடியாமல் கலைத்து விட்டார்கள். அப்படிப்பட்ட நிலையில் அவருக்கு நான் பாண்டிச்சேரியில் அனுமதி வாங்கிக் கொடுத்து 20 நாட்கள் படபிடிப்பு நடந்தது. அது மட்டுமல்ல  சைக்கோ, இப்படை வெல்லும் போன்ற படங்களுக்கும் இடங்களை நான் ஏற்பாடுகள் செய்தேன்.பாண்டிச்சேரியில் சைக்கோ படப்பிடிப்பை முடித்துவிட்டுத்தான்  அவர் தேர்தல் பிரச்சாரத்திற்குப் புறப்பட்டார்.
சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்மரெட்டி படத்திற்குப் பாண்டிச்சேரியில் இடங்களுக்கு அனுமதி வாங்கி கொடுத்தேன்.கே ஜி எஃப் 1 , 2 என இரண்டு படங்களுக்கும் நான் அனுமதி வாங்கிக் கொடுத்துள்ளேன்.தமிழ் ,தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று இப்படி ஏராளமான படங்களுக்கு நான் இந்த விஷயத்தில் உதவி இருக்கிறேன்.
மலையாளத்தில் 20 படங்களில் நான் பணியாற்றினேன். மம்முட்டி நடித்த கிரேசி கோபாலன் படத்தில் நானும் அவருடன் நடித்துள்ளேன்.
சந்தானம் எனக்கு மிக மிக நெருங்கிய நண்பர்.
சிம்பு நடித்த மாநாடு படப்பிடிப்பு இங்கே 35 நாட்கள் நடைபெற்றது. ஏர்போர்ட்டில் மட்டும் 15 நாட்கள் நடைபெற்றது. கொரோனா காலத்தில் அனுமதி இல்லாததால் சிரமப்பட்டு பாண்டிச்சேரியில் அனுமதி வாங்கிக் கொடுத்தேன். தொடர்ந்து படப்பிடிப்பு நடந்த போது இடையில் மழை வந்து குறுக்கிட்டது. மழை 120 சென்டிமீட்டர் அளவு வரை போனது.ஆனாலும் படப்பிடிப்பை நிறுத்தாமல் ஒரு மில்லில் ரகசியமாக ஏற்பாடு செய்து மூன்று நாட்கள் படப்பிடிப்புக்கு எல்லா ஏற்பாடுகளும் செய்துகொடுத்து,பாதுகாப்பாக இருந்து எந்த விதமான பிரச்சினையும் இல்லாமல் பார்த்துக் கொண்டேன்.
நான்கு ஆஸ்கார் விருதுகளை வென்ற  ஆங் லீ இயக்கிய ஹாலிவுட் படமான ‘லைப் ஆப் பை ‘படத்தின் படப்பிடிப்பு முழுக்க முழுக்க பாண்டிச்சேரியில் தான் நடைபெற்றது. நான்தான் முன்னின்று எல்லாமும் செய்து கொடுத்தேன்.
அமீர்கான் சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன்பு இங்கு வந்திருந்தார். அவரது தலாஷ் படத்திற்கு நான் இடங்களை ஏற்பாடு செய்து கொடுத்திருந்தேன்.ஒன்பது கார்கள் கடலில் சறுக்கிவிழும் காட்சி அப்போது படமாக்கப்பட்டது. அண்மையில் எனது யூடியூப் பார்த்து விட்டு என்னைத் தொடர்பு கொண்டார்.அண்மையில் ஒரு நாள் பாண்டிச்சேரி வந்தவர் 12 நாட்கள் யாருக்கும் தெரியாமல் ரகசியமாகத் தங்கி இருந்தார். எனது கூத்துப்பட்டறைக்குத்  தினமும் வந்து நம் நாட்டுப்புறக் கலைகள் எல்லாம் பற்றி நேரில் கேட்டு அறிந்து கொண்டார்.அவருடன் அடையாளம் தெரியாமல்  அதிகாலையில் சைக்கிள் ஓட்டியதும் பாண்டிச்சேரி தெருக்களில் சுற்றியதும் மறக்க முடியாதவை.
இப்படி அனைத்து நடிகர்கள் சார்ந்தும் ஏராளமான அனுபவங்கள் உண்டு.
குறிப்பாகப் படப்பிடிப்புகளுக்குப் பாண்டிச்சேரியை நாடுவதற்கு என்ன காரணம்?
பாண்டிச்சேரி மக்கள் வெளியில் இருந்து வருபவர்களை தங்களது விருந்தினர்கள் போலப் பார்ப்பார்கள் .எந்த தொந்தரவும் கொடுக்க மாட்டார்கள். படப்பிடிப்பை அமைதியாகக் கவனிப்பார்கள். இடையூறு செய்ய மாட்டார்கள். படப்பிடிப்பு சார்ந்த குறைந்தபட்ச அறிவு அவர்களுக்கு உண்டு.முகம் தெரியாதவர்களிடம் காசு பிடுங்கும் கலாச்சாரம் அங்கு இல்லை.சாலைகள் நீளமாக நேராக இருக்கும். அனுமதி வாங்குவது எளிது. எங்கு படப்பிடிப்பு நடந்தாலும் இடையூறு இல்லாமல் படப்பிடிப்பு  நடத்த முடியும். அரசியல்வாதிகளின் தொல்லை இல்லை.எனவே தான் இங்கு வருகிறார்கள்.இங்கு நடந்த படப்பிடிப்புகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். தமிழ்நாட்டில் பல இடங்களில் அலைந்துவிட்டுச் சரிப்பட்டு வராமல் கடைசியாக  என்னிடம் வருபவர்கள் அதிகம். தமிழ்நாட்டில் சரியாக இடங்கள் கிடைக்காத போதும் என்னிடம் கேட்பார்கள்.
ஒரு கூத்துக் கலைஞராக உங்கள் அனுபவம்?
 பாண்டிச்சேரியில் மஸ்க்ராத் என்று பாரம்பரியக் கலை ஒன்று உள்ளது.அதை அழிய விடாமல் காப்பாற்ற வேண்டும் என்கிற கடமை மக்களுக்கு உள்ளது. அதுமட்டுமல்ல நாட்டுப்புறக் கலைகள் எதையும் நலிய விடக்கூடாது. அவை நமது பாரம்பரியத்தின் அடையாளமாக இருப்பவை என்பதில் எனக்கு எப்போதும் மதிப்பு உண்டு.
நான் எனது கூத்துகளை கோவில்களிலும் விழாக்களிலும் நடத்தி வருகிறேன். வந்தவாசி எனது மாமியாரின் ஊர் .அங்கே ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி ஆலயம் உள்ளது . நான் முன் நின்று  நிர்மானப் பணிகளைச் செய்தேன்.அந்தக் கோயிலை உலகத்திற்கு அறிய வைத்தேன்.அங்கு சிவராத்திரி அன்று நடக்கும் மயானக் கொள்ளை புகழ்பெற்றது. அப்போது நான் உயிருள்ள ஆட்டை குடலைப் பிடுங்கி ரத்தம் குடிக்கும் நிகழ்ச்சி நிகழ்த்தப்படும்.
சில ஆயிரம் பேர் மட்டுமே வந்து கொண்டிருந்த அந்த ஆலய விழா இப்போது லட்சக் கணக்கில் மக்கள் கூடும் அளவிற்குப் பெரிதாகிவிட்டது.
எனக்கு சினிமா, ஆன்மீகம், கலை, சமூக சேவைகளில் ஈடுபாடு உண்டு. கொரோனா காலத்தில் ஏராளமானவர்களுக்கு நான் உணவளித்தேன்.மேடை மாணவர்களுக்கு கல்வி உதவி தொகையும் வழங்கி வருகிறேன்.எனது சமூக  சேவைகளுக்காக நிறைய விருதுகளும் பெற்றுள்ளேன்.
நாடகக் கலை தந்தையான சங்கரதாஸ் சுவாமிகளின் நூற்றாண்டு விழாவை நான் பாண்டிச்சேரியில் பிரமாண்டமாக நடத்திக் கொண்டாடினேன். பாண்டிச்சேரியில் உள்ள ஏராளமான கலைஞர்கள் வரவழைக்கப்பட்டு  அவர்களுக்கு விருது, பரிசு உணவு உபசரிப்பு என்று கெளரவிக்கப்பட்டனர். என் செலவிலே அனைத்தும் செய்தேன். அதற்குத் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு அழைப்பு விடுத்தேன். அவர்கள் பெரிதாகக் கண்டு கொள்ளவில்லை. சங்கரதாஸ் சுவாமிகள் பெயரில் நடிகர் சங்கத்தை வைத்துக்கொண்டு அவர் பெயரில் நடக்கும் நூற்றாண்டு விழாவிற்குப் பெரிதாக ஆதரவு கொடுக்கவில்லை. ஏனோதானோ என்று ஒரு விக்னேஷ் என்ற நடிகரை அனுப்பி வைத்தார்கள். ஆனால் விஜய் ஆண்டனி மட்டும் வந்திருந்து முழு நாளும் விழாவில் கலந்து கொண்டு எங்களை கௌரவித்தார்.
பாண்டிச்சேரி அரசின் 75வது சுதந்திர தின விழாவில் எங்கள் குழுவினர் கலந்து கொண்டார்கள். எங்களுக்கு முதல் பரிசு கிடைத்தது.
பாண்டிச்சேரி அரசின் பொங்கல் விழாவில் பாண்டிச்சேரி ஆளுநர் தமிழிசை அவர்களின் திடீர் அழைப்பு மூலம் எனக்குக் கலை நிகழ்ச்சி வாய்ப்பு கிடைத்தது .எனது கலை நிகழ்ச்சியைப் பார்த்து அவரும் பாராட்டினார்.
அதுமட்டுமல்ல எனது கலைப் பணிகளைப் பாராட்டி பாண்டிச்சேரி அரசு வழங்கும் கலைமாமணி விருதும் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. எனது கலைப் பணிகளுக்கு எப்போது ஊக்கம் தரும் முதல்வர் ரங்கசாமி அவர்களுக்கும் ஆளுநர் தமிழிசை அவர்களுக்கும் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டுள்ளேன்.திரைப்படம் ஒரு மக்கள்  ஊடகமாக வளர்ந்திருக்கிறது. நமது பாரம்பரியத்தையும் நாட்டுப்புறக் கலைகளையும் அதன் வழியாக கொண்டு செல்ல வேண்டும் என்பதற்காகத்தான் நான் சினிமாவில் ஈடுபட்டு வருகிறேன். உலகம் முழுக்க பாரம்பரியக் கலைகளைக் காக்கும் நடவடிக்கைகள் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. நாமும் நம் பழமையை மறக்கக் கூடாது என்பதுதான் எங்கள் நோக்கம்.
 அண்மையில் காந்தாரா படம் வந்து பெரிய அளவில் வெற்றி பெற்றது .நமது தொன்மையான பாரம்பரியத்தை இந்தக் கால இளைஞர்களுக்குச் செல்ல வேண்டும் என்று தான் அந்தப் படம் எடுக்கப்பட்டது. படமும்  பெரிய வெற்றி பெற்றது.
அப்படி ஒரு பெரிய மாற்றம் தமிழிலும்  வரவேண்டும் என்று நான் நினைக்கிறேன்.அதற்காகவே சினிமாவைப் பின் தொடர்ந்து செல்கிறேன்.
வெளிப்புறப் படப்பிடிப்பு அனுபவங்களில் குறிப்பிடத்தக்க படங்கள்?
கார்த்தி நடித்த நான் மகான் அல்ல கிளைமாக்ஸ் இங்குதான் எடுக்கப்பட்டது அதேபோல அவர் நடித்த பிரியாணி படமும் இங்குதான் எடுக்கப்பட்டது.அலெக்ஸ் பாண்டியன் படத்திற்காக பெரிய கப்பல் செட் போடப்பட்டது. ஆயிரத்தில் ஒருவன் படத்திற்கும் பெரிய செட் போட்டு எடுத்தார்கள்.எங்கும் எளிதில் அனுமதி கிடைக்காத கார் சேசிங் ,பாம்ப் ப்ளாஸ்ட் போன்ற காட்சிகளை அனுமதி வாங்கி இங்கே நிறைய எடுத்துள்ளோம்.
இங்கே எடுக்கப்பட்ட ஒரு பிரெஞ்சு படத்திற்கு விருது கிடைத்தது. எனக்கும் ஒரு விருது கிடைத்தது. இதற்காக என்னை பிரான்ஸ் அழைத்தார்கள்.நகரம் சார்ந்த கதைகளுக்கு மட்டுமல்ல கிராமத்துக் கதைகளுக்கான லொகேஷன்களும் இங்கு உண்டு.கிராமத்தைப் போல இங்கே செட் போட்டும் எடுப்பார்கள்.தொலைக்காட்சி தொடர்களும் இங்கே ஏராளமாக எடுத்துள்ளார்கள். குறிப்பாக சி .ஜே. பாஸ்கரின் பல தொடர்கள் இங்குதான் எடுக்கப்பட்டன. அதற்கான படப்பிடிப்பு ஆண்டுக் கணக்கில் போகும்.சன் டிவியின் அழகி தொடருக்கு  25 நாட்கள் என்றால், அஞ்சலி தொடருக்கு ஓராண்டு இங்கே படப்பிடித்து நடந்தது .அமெரிக்காவின் எம்ஐஏ ஆல்பம் பாடலுக்காக இங்கே 100 படகுகள் ஏற்பாடு செய்தேன் .அது மட்டுமல்ல  1250 வாலிபர்களையும் ஏற்பாடு செய்தேன்.அதில் நடிக்க வைத்து நடுக்கடலில் இருந்து காட்சிகள் எடுக்கப்பட்டன. இந்தப் பாடல் வெளியாகிய ஒரு மணி நேரத்தில் மூன்று மில்லியன் பேர் பார்த்தார்கள். அந்த அளவுக்குச் சாதனை படைத்தது. இயக்குநர் பாலாவின் தாரை தப்பட்டை இங்குதான் எடுக்கப்பட்டது. ஆயிரம் பேரை குழுவாக ஏற்பாடு செய்து கொடுத்தேன். அவர்கள் இலங்கையில் இருப்பது போல் அந்த படத்தில் மேட்ச் செய்தார்கள்.
நான் பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு ஏற்பாடு செய்த படங்களில் ஏராளமான படங்கள் வெற்றிப் படங்கள். சிறுத்தை ,கோ, அனேகன், தனி ஒருவன், மாற்றான் இப்படி ஏராளமான வெற்றிப் படங்கள் உள்ளன. கோ பாண்டிச்சேரியிலேயே 200 நாட்கள் ஓடியது.
இப்படி நான் பணியாற்றிய  படங்கள் பெயர் சொல்லும் படங்கள் மட்டுமல்ல பெரிய வெற்றி பெற்ற படங்களும் ஆகும்.
இப்போது நடித்து வருபவை?
இப்போது நான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ஜெய்லர்  படத்தில் நடிக்கிறேன் .டீசல் படத்திலும் நடிக்கிறேன்.பிரபுதேவா அவர்களின் ஜல்சா படத்தில் எங்கள் குழுவினரின் நடனம் இடம்பெற்றுள்ளது அதேபோல் பிச்சைக்காரன் 2 படத்திலும் எங்களது நடனம் இடம்பெற்றுள்ளது.மேலும் 4 புதிய படங்களிலும் நடித்து வருகிறேன்.
Previous Post

M360° ஸ்டுடியோஸ் ரோஷ் குமார் வழங்கும், பி திருமலை பாலுச்சாமி இயக்கத்தில் சரத்குமார்- விதார்த் நடிக்கும் ‘சமரன்’ படத்தின் முதல்கட்டப் படப்பிடிப்பு முடிந்துள்ளது!

Next Post

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Next Post

மாஸ் மஹாராஜா ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் இணைந்து வழங்கும் பான் இந்திய பிரமாண்ட படைப்பு “டைகர் நாகேஸ்வர ராவ்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது

Popular News

  • அனைத்து வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி! ராக்கிங் ஸ்டார் யாஷ் நடிக்கும் ‘டாக்ஸிக்(Toxic): எ ஃபேரி டேல் ஃபார் கிரோன் -அப்ஸ்’ (A Fairy Tale for Grown-Ups)— முதலில் அறிவித்தபடியே மார்ச் 19, 2026 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது !

    0 shares
    Share 0 Tweet 0
  • “அதிரடியான மற்றும் பொழுதுபோக்கு அம்சம் கொண்ட அட்வென்ச்சர் ” என பிரிடேட்டர்: பேட்லேட்ண்ஸ் திரைப்படத்தை விமர்சகர்கள் பாராட்டி வருகின்றனர்!

    0 shares
    Share 0 Tweet 0
  • BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

    0 shares
    Share 0 Tweet 0
  • Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

    0 shares
    Share 0 Tweet 0
  • தேசிய தலைவர் – விமர்சனம்

    0 shares
    Share 0 Tweet 0

Recent News

கும்கி 2 படத்தின் முதல் சிங்கிள் “பொத்தி “பொத்தி உன்ன வச்சு” பாடல் வெளியானது !!

November 2, 2025

‘மெட்ராஸ் மாஃபியா கம்பெனி’ படத்தின் இசை & முன்னோட்ட வெளியீட்டு விழா !!

November 2, 2025

தேசிய தலைவர் – விமர்சனம்

November 2, 2025

Verus Productions வழங்கும் கெளதம் ராம் கார்த்திக் நடிப்பில் “ROOT” – படப்பிடிப்பு நிறைவு!

November 2, 2025

BR Talkies Corporation சார்பில் பாஸ்கரன் B, ராஜபாண்டியன் P, டேங்கி தயாரிப்பில், சுரேஷ் ரவி, யோகிபாபு நடிக்கும், புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து, போஸ்ட் புரடக்சன் பணிகள் நடந்து வருகிறது.

November 2, 2025

தடை அதை உடை – விமர்சனம் ரேட்டிங் – 3 / 5

November 2, 2025
  • About Us
  • Advertise
  • Privacy & Policy
  • Contact Us

© 2025 Tamil2daynews.com.

error: Content is protected !!
No Result
View All Result
  • தமிழ் நாடு
  • இந்தியா
  • விளையாட்டு
  • சினிமா
    • சினிமா செய்திகள்
    • கேலரி
    • விமர்சனம்
  • கிசு கிசு
  • வீடியோஸ்

© 2025 Tamil2daynews.com.