இருமுடி கட்டு – விமர்சனம்

இருமுடி கட்டு –  விமர்சனம் 

 

ரவி தேஜா நடிப்பில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘இருமுடி கட்டு’. சிவா நிர்வாணா இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்துள்ளார். சாய்குமார், பேபி நக்ஷத்ரா, ரமேஷ் இந்திரா, ஸ்வஸிகா விஜய், மீசாலா லக்ஷ்மண், அஜய் கோஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் நவீன் யெர்னேனி மற்றும் ஒய் ரவி சங்கர் இணைந்து தயாரித்துள்ள படம் இருமுடி கட்டு.

பொல்லூரு கிராமத்தில் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி நக்ஷத்ரா) சந்தோஷமாக வாழ்கிறார். ஆட்டோ ஓட்டி, வாழைத்தோட்டம் நடத்தி வருகிறார். ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போடும் தீவிர பக்தர். மாலை போட்டிருக்கும்போது மதுவைத் தொடமாட்டார், ஆனால் மாலை கழற்றியதும் குடிப்பார். மகள் மீது உயிரையே வைத்திருக்கிறார். அந்த ஊருக்கு எம்.எல்.ஏ (ரமேஷ் இந்திரா) ஒரு பேருந்து வசதி செய்து தருகிறார். அதன் பிறகு நடக்கும் திடீர் மரணம், மர்மமான சம்பவங்கள்தான் படத்தின் கதைக்களம்.

ரவி தேஜா படம் என்றாலே மாஸ், காமெடி, ஆக்‌ஷன் என அனைத்தும் இருக்கும். ஆனால், இந்தப் படத்தில் ரவி தேஜா தெரியவில்லை, திரிநாத் என்ற கதாபாத்திரமாக தான் தெரிகிறார். அந்த அளவுக்கு நடிப்பில் ஒன்றிப்போயிருக்கிறார். அப்பா-மகள் சென்டிமென்ட் காட்சிகளில் இயக்குநர் சிவா நிர்வாணா நம்மை படத்துடன் ஒன்ற வைக்கிறார். சில த்ரில்லிங் திருப்பங்கள் இருந்தாலும், க்ளைமாக்ஸ் யூகிக்கக்கூடியதாக இருப்பது ஒரு மைனஸ். ஆனாலும், சிவா நிர்வாணாவின் எமோஷனல் மேக்கிங் படத்தை தூக்கி நிறுத்துகிறது.

திரிநாத் கதாபாத்திரத்தில் ரவி தேஜா வாழ்ந்திருக்கிறார். குறிப்பாக சென்டிமென்ட் காட்சிகளில் அசத்துகிறார். மகளாக நடித்த பேபி நக்ஷத்ராவும் சிறப்பாக நடித்துள்ளார். இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி படத்திற்கு பெரிய பலம். எம்.எல்.ஏ-வாக ரமேஷ் இந்திரா, டீச்சராக ஸ்வஸிகா விஜய், வில்லனாக அஜய் கோஷ் என அனைவரும் தங்கள் பாத்திரங்களை சிறப்பாக செய்துள்ளனர். குருசாமியாக வரும் சாய்குமாரின் பாத்திரத்தில் உள்ள ட்விஸ்ட் ஓகே ரகம்.

ஜி.வி. பிரகாஷின் இசையில் ஐயப்பன் பாடல்கள் படத்திற்கு உதவியுள்ளன. மற்ற பாடல்கள் சுமார் ரகம். கேமரா ஒர்க் நேர்த்தியாக உள்ளது. எடிட்டிங்கில் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். இயக்குநர் சிவா நிர்வாணா ஒரு நல்ல கதையை எடுத்திருந்தாலும், அது வழக்கமான கதைதான். ஆனால், அவர் கதையை சொன்ன விதம் சுவாரஸ்யமாக உள்ளது. அப்பா-மகள் சென்டிமென்ட் மற்றும் ஐயப்ப பக்தி தொடர்பான காட்சிகள் படத்திற்கு ப்ளஸ்.

உயிர் போன தன் குழந்தைக்கு மஞ்சள் நீராட்டு விழா நடத்தும் ரவிதேஜாவின் காட்சியை பார்க்கும் பொழுது நெஞ்சம் பதவ விதைக்கின்றது.

ஐயப்ப பக்தர்களின் பின்னணியில் ஒரு அப்பா-மகள் பாசப் போராட்டத்தை சொல்லும் எமோஷனல் ஆக்‌ஷன் டிராமா இந்த ‘இருமுடி கட்டு’. இது ரவி தேஜாவின் ஒரு புதிய முயற்சி. பெண் பிள்ளைகளை பயத்துடன் அல்ல, தைரியத்துடன் வளர்க்க வேண்டும் என்ற செய்தி அருமை. குடும்பத்துடன் பார்க்கக்கூடிய படமாக இந்த இருமுடி கட்டு அமைந்துள்ளது.

மொத்தத்தில் இந்த இருமுடி கட்டு படத்தை இருகரம் தூக்கி வரவேற்கலாம்.
Next Post

Recent News

error: Content is protected !!