கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ஜோஸ்வா : இமை போல் காக்க. வருண் , ராஹேய் திவ்யதர்ஷினி, விசித்ரா, கிருஷ்ணா, மன்சூர் அலிகான் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கார்த்திக் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

குந்தவை சர்வதேச அளவில் பிரபல வழக்கறிஞராக இருக்கிறார். போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டு கைதான மாஃபியா கும்பலின் தலைவனின் வழக்கை வாதாட இருக்கிறார் குந்தவை. இதனால் அவருடைய கூட்டாளிகள் அனைவரும் கொல்லப்படுகிறார்கள். குந்தவையை கொல்வதற்கு பெரும் தொகை பரிசாக அறிவிக்கப்படுகிறது. குந்தவையை இந்த கொலைகார கும்பல்களிடம் இருந்து காப்பாற்றி அந்த வழக்கை அவர் வாதாட வைப்பதே ஜோஸ்வாவின் இலக்கும் படத்தின் கதையும்.
ஜேம்ஸ் பாண்ட் படத்தைப்போல் நாயகனுக்கு காஸ்டியூம் எல்லாம் கொடுத்து சண்டைக் காட்சிகளை சிறப்பாக அமைத்திருக்கிறார்கள். யானிக் பென் வடிவமைத்திருக்கும் சண்டைக் காட்சிகள் அதற்கேற்ற வகையில் ஸ்டெடி கேம் ஷாட்கள் இந்த காட்சிகளை இன்னும் மெருகேற்றுகின்றன. ஆனால் கதையும் திரைக்கதையும் இல்லாத இந்தப் படத்தை வெறும் ஸ்டண்ட் மாஸ்டர் மற்றும் ஒளிப்பதிவாளரால் காப்பாற்ற முடியாமல் போகிறது.
ஆக்ஷன் காட்சிகளைத் தவிர்த்து வருணின் நடிப்பு சகித்துக்கொள்ளமுடியாத அளவிற்கு சுமாராக இருக்கிறது. ரொமான்ஸ் மற்றும் செண்டிமெண்ட்டான காட்சிகளில் அவருக்கு க்ளோஸ்-அப் வைத்தது தவறான முடிவு. கெளதம் மேனனின் படத்தின் கதாநாயகனுக்கு ஒரு உடல்மொழி இருக்கும் இல்லையா? அதை செய்துகாட்டுகிறேன் என்கிற பெயரில் ஜி.டி.ஏ அனிமேஷன் வீடியோ கேமில் வருவது போல் உடலை அசைத்துக்கொண்டே இருக்கிறார் வருண். குந்தவையாக நடித்திருக்கும் ராஹே செயற்கையான பாவனைகளால் பார்வையாளர்களை எரிச்சல்படுத்துகிறார்.









