பிரேம் ஆனந்த் இயக்கத்தில் சந்தானம், மொட்டை ராஜேந்திரன், செல்வராகவன், கௌதம் வாசுதேவ் மேனன், யாஷிகா ஆனந்த், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, நிழல்கள் ரவி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ திரைப்படம் இன்று திரைக்கு வந்துள்ளது. நடிகர் ஆர்யா இப்படத்தை தயாரித்துள்ளார். ‘தில்லுக்கு துட்டு’ வரிசையில் நான்காவது பாகமாக இப்படம் வெளிவருகிறது.
இது வரை பேய் படமென்றால் பங்களாவுக்குள் பேய், டப்பாக்குள் பேய் என்றுதான் பார்த்திருப்போம். ஆனால் பேய் படத்திற்குள் ஒரு கதாபாத்திரமாக மாட்டி கொள்வது என்று மாற்றி யோசித்த ஐடியாவுக்காக டைரக்டர் பிரேம் ஆனந்தை பாராட்டலாம். நிஜ வாழக்கையில் சந்தானத்தின் அம்மாவாக வரும் கஸ்தூரி பேய் கதைக்குள் கிளாமர் பெண்மணியாக மாறுவது, ஆட்டோ டிரைவர் அப்பா பேய் கதையில் கப்பல் கேப்டனாக வருவது, அடக்கமாக வரும் தங்கை பேய் கதைக்குள் கவர்ச்சியாக மாறுவது போன்ற வித்தியாசமான ஐடியாக்களின் மூலம் டைரக்டர் தனித்துவமாக தெரிகிறார்
முதல் பாதியில் சந்தானம் காமெடி மழையில் நினைய வைத்து விட்டார் என்றே சொல்லலாம். ரசிகர்கள் அதிகம் கை தட்டுவதை கேட்க முடிகிறது. இரண்டாம் பாதியில் நகைச்சுவைக்கு முக்கியத்துவத்தை குறைத்து சீரியஸில் ஸ்கோர் செய்கிறார்.

குறிப்பாக செல்வராகவன் சினிமா விமர்சகர்களை பற்றி பேசும் வசனங்கள் ஹைலைட்டாக இருக்கின்றன. தீபக் குமாரின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் என்றால் ஆப்ரோவின் பின்னணி இசை மிகப்பெரிய பலம் என்று சொல்லலாம். இவரது பின்னணி இசை, பேய் கதையில் நாமே மாட்டி கொண்டது போல் ஒரு உணர்வைத் தருகிறது.
நண்பர்களான ஆர்யாவும், சந்தானமும் சேர்ந்து வித்தியாசமான பின்னணியில் இந்த கோடையில் ஜில்லென்ற ஒரு மாறுபட்ட காமெடி படத்தை தந்துள்ளார்கள். டி டி நெஸ்ட் லெவல் – சந்தானத்தின் சரவெடி.









