“’வணங்கான்’ படப்பிடிப்பு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல இருந்தது” ; நாயகி ரோஷினி பிரகாஷ் பிரமிப்பு
சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இயக்குநர் பாலாவின் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘வணங்கான்’.
அருண்விஜய் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடித்துள்ளார்.
பொங்கல் பண்டிகை ரிலீஸாக வரும் ஜனவரி 10ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது..
பொதுவாகவே இயக்குநர் பாலாவின் படங்களில் நடிக்கும் கதாநாயகர்கள் அதன்பிறகு எந்த அளவிற்கு திரையுலகப் பயணத்தில் உச்சத்தை நோக்கிச் செல்வார்களோ, அதே போல கதாநாயகிகளும் மிகப்பெரிய அளவில் கவனம் பெறவே செய்கிறார்கள். அபிதா, லைலா, பூஜா, ஜனனி ஐயர், வரலட்சுமி என இதற்கு முந்தைய பல உதாரணங்களை சொல்லிக் கொண்டே போகலாம்.
அந்த வகையில் ‘வணங்கான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார் என அறிவிப்பு வெளியானதில் இருந்தே பரபரப்பு வளையத்திற்குள் வந்துவிட்டார் நடிகை ரோஷினி பிரகாஷ்.
2016ல் இருந்து தெலுங்கு, கன்னடம், தமிழ் என மும்மொழிகளில் தனது பயணத்தைத் தொடர்ந்து வருகிறார் ரோஷினி பிரகாஷ். கடந்த சில மாதங்களுக்கு முன்பு கன்னடத்தில் இவரது நடிப்பில் வெளியான மர்ஃபி திரைப்படம் அதிக வரவேற்பை பெற்றுள்ளது.
“வணங்கான் படத்திற்காக இன்ஸ்டாகிராமில் எனது ப்ரொபைல் பார்த்து எனக்கு ஆடிசனில் கலந்து கொள்ள அழைப்பு வந்தது. அங்கே போனதும் சில காட்சிகளை கூறி எனது கதாபாத்திரம் பற்றி சொல்லி நடித்துக் காட்டச் சொன்னார்கள். அங்கேயே உடனே ஓகேயும் சொல்லிவிட்டார்கள்.
பொதுவாகவே பாலா சார் படப்பிடிப்பில் கடுமையாக நடந்து கொள்வார் என்பது போன்று சில செய்திகள் கேள்விப்பட்டிருந்தேன். ஆனால் படப்பிடிப்பிற்கு சென்றபோது தான் அது எதுவுமே உண்மை அல்ல என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது. அந்த அளவிற்கு தனக்கு என்ன தேவையோ அதை அழகாக நம்மிடம் விளக்கி அவருக்கு வேண்டிய நடிப்பை பெற்றுக் கொள்வார்.
பாலா சாரின் படங்களில் நடிக்கும் அனைவருக்குமே மிக முக்கியத்துவம் கொடுக்கப்படும். நான் இந்த படத்தில் நடித்துள்ள கதாபாத்திரம் எனது திரையுலகப் பயணத்தில் இதுவரை நான் நடித்ததிலேயே கடினமான ஒன்று. இந்த கதாபாத்திரத்தில் நடித்த பிறகு இனி அடுத்து எந்த படம் வந்தாலும் எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் நடிக்கக்கூடிய துணிச்சலை இந்த படம் கொடுத்துள்ளது.
அதேபோல காட்சிகளில் சிறப்பாக நடித்தால் தட்டிக்கொடுத்து பாராட்டவும் தயங்க மாட்டார். முதல் கட்ட படப்பிடிப்பை திட்டமிட்டதற்கு மூன்று நாட்கள் முன்கூட்டியே முடித்தபோது அந்த அளவிற்கு சந்தோஷப்பட்டார் இயக்குநர் பாலா.
நாயகன் அருண்விஜய்யும் நானும் ஒரு காட்சியில் இணைந்து நடிக்கும் போது அவரிடம் நான் நடிப்பதற்கான ஒரு ஸ்பேஸ் வேண்டும் எனக் கேட்டால் அதை அழகாக உள்வாங்கிக் கொண்டு உதவி செய்வார். இயக்குநர் பாலா என்ன சொல்கிறாரோ அதை அழகாக உள்வாங்கிக் கொண்டு எவ்வளவு கடினமான காட்சி ஆனாலும் அதை உடனே செய்து காட்டுவார் அருண் விஜய்.
இயக்குநர்கள் சமுத்திரக்கனி, மிஸ்கின், ஏ எல் விஜய் என மிகப் பெரிய ஜாம்பவான்கள் இயக்குநர்களுடன் சேர்ந்து பணியாற்றியதால் ‘வணங்கான்’ படத்தின் படப்பிடிப்பு எனக்கு ஒரு மாஸ்டர் கிளாஸ் போல தான் இருந்தது.
இவர்களுடன் இணைந்து நடிக்கும்போது தங்களை ஒரு பெரிய இயக்குநர்களாகவோ நடிகர்களாகவோ அவர்கள் ஒருபோதும் நினைத்துக் கொள்வதில்லை. புதியவர் தானே என யாரையும் நினைக்காமல் அவர்களுக்கு வேண்டியதையும் கற்றுக் கொடுக்கிறார்கள். இப்படி நான்கு இயக்குநர்களுடன் சேர்ந்து ஒரே படத்தில் பணியாற்றுவது என்பது ரொம்பவே அரிதாக கிடைக்கக்கூடிய வாய்ப்பு. அது எனக்கு கிடைத்திருக்கிறது.
கன்னியாகுமரி போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்ற போது அவருக்கு படப்பிடிப்பு இல்லை என சில நேரங்களில் கிளம்பி ஊருக்கு சென்று விட்டால் அவர் திரும்பி வரும் வரை ஏதோ மிஸ் பண்ணியது போன்று இருக்கும். அவருடன் அமர்ந்து பேசும்போது எனக்கு என் வீட்டாருடன் இருப்பது போன்ற ஒரு உணர்வு கிடைத்தது.
ஒரு படப்பிடிப்பு தளத்தில் எப்படி ஒரு கட்டுப்பாடாக, ஒழுக்கமாக நடந்து கொள்ள முடியும் என்பது பாலா சாரின் படப்பிடிப்பில் அவ்வளவு தெளிவாக தெரிந்தது.
இதுவரை மூன்று மொழிகளிலும் பல படங்களில் நடித்திருந்தாலும் ‘வணங்கான்’ படம் எனக்கு ரொம்பவே ஸ்பெஷல். இந்த படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவில் அடுத்து நான் பயணிக்க வேண்டிய பல விஷயங்களை இதில் கற்றுக் கொள்ள முடிந்தது.
வெளிப்படையாகவே சொன்னால் இந்த படத்தில் நடிப்பதற்கு முன்பு வரை என்னை அவ்வளவாக யாருக்கும் தெரியாது. இந்த படத்தில் நடிக்க ஆரம்பித்த பின்பு தான் என்னைப் பற்றி ஓரளவுக்கு வெளியே தெரிய ஆரம்பித்தது. அந்த வகையில் இது ஒரு அதிர்ஷ்ட வாய்ப்பு என்று தான் சொல்வேன்” என்று கூறினார் ரோஷினி பிரகாஷ்..