
ஒரு இயல்பான யதார்த்தமான கதை. அந்த கதையின் போக்கில் ஒரு சிக்கல், அந்த சிக்கலுக்கு தீர்வு காணும் க்ளைமாக்ஸ் என எளிய முறையில் பயணிக்கும் திரைக்கதையை எடுத்துக் கொண்டு, அதில் இவ்வளவு பெரிய ஓட்டையை வைத்திருப்பார்கள் என்று எதிர்பார்க்கவே இல்லை. வீட்டை காப்பாற்ற முடியாது என்பது தெரிந்துவிடுகிறது. கட்டிலையாவது காப்பாற்றுவோம் என்று களத்தில் இறங்குகிறார்கள். வீட்டை வாங்க இருக்கும் முதலாளி கட்டிலுக்கும் பெரும் தொகை கொடுக்கிறேன். எனக்கே விற்றுவிடுங்கள் என்று ஆசை காட்டுகிறான். நாயகனின் சகோதர சகோதரிகள் யோசிக்க, நாயகன் புத்திசாலித்தனமாக தனக்கு வரும் பங்கு காசில் கட்டிலுக்கான விலையை பிடித்தம் செய்து கொள்ளுங்கள் என்று சொல்ல அந்தப் பிரச்சனையும் தீர்கிறது. பிறகு ஒரு சிக்கல் புதிதாக வருகிறது.
அது என்ன சிக்கல்..?வீட்டை காலி செய்தபின்னர் நாயகன் குடிபோக இருக்கும் புதிய வீடு கட்டிலை வைக்கும் அளவிற்கு பெரியதாக இருக்க வேண்டும். அவ்வளவு பெரிய கட்டிலை வைப்பதற்கு ஏற்றார் போன்ற வீடு கிடைக்க வேண்டும்…? நாயகனும் தான் பார்க்கும் புது வீட்டின் வாசல்களை எல்லாம் டேப் கொண்டு அளந்து பார்க்கிறான். கட்டிலை உள்ளே கொண்டு வர முடியுமா…? முடியாதா…? என்று. இந்தக் காட்சியிலும் இந்தச் சிக்கலிலும் தான் ஒட்டுமொத்த படமும் ஒன்றும் இல்லாமல் போய்விடுகிறது.
கதையாக மிக எளிமையான இயல்பான கதை. அதை கையாண்ட விதத்திலும், திரைக்கதை அமைத்த விதத்திலும் அந்த இயல்புத்தன்மையோ யதார்த்தமோ இல்லாதது பெருங்குறை. மையக்கதையைவிட கிளைக்கதை சிறப்பாக இருக்கிறது. மொத்த கதையும் கர்ப்பிணிப் பெண் வீடு காலி செய்து போகக்கூடாது என்கின்ற மூடத்தனத்தை பறைசாற்றத்தான் எடுக்கப்பட்டதோ என்கின்ற கேள்வியும் மேல் எழுகிறது.









