‘வெயில்’, ‘அங்காடி தெரு’ படங்களில் விளிம்பு நிலை மக்களின் வாழ்க்கையைச் சொன்னவர், இந்த தலைமை செயலகத்தில் திரில்லர் அரசியல் களத்தில் அசத்தியிருக்கிறார்.
கிஷோர், ஸ்ரேயா ரெட்டி, சந்தான பாரதி, Y.G. மகேந்திரன், விபின், ரம்யா நம்பீசன் நடித்துள்ள இந்தத் தொடரை ராதிகா சரத்குமார் தயாரித்துள்ளார். Z 5 ஒரிஜினல் ஒடிடி தளத்தில் வெளியாகியுள்ள இந்தத் தொடருக்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார்.
முதல் காட்சியில் ஜார்கண்ட்டில் ஒரு பெண் தன்னைத் துன்புறுத்தும் ஆண்களை வெட்டி வீழ்த்தும்போதே இது வழக்கமான வசந்தபாலன் படமல்ல என்று புரிந்து விடுகிறது. எட்டு எபிசோடுகளைக்கொண்ட இந்தத் தொடர் முதல் எபிசோடில் இருந்து கடைசி வரை கண்ணை அப்படியும், இப்படியும் நகர்த்தவிடாமல் பரபரப்பாக நகர்கிறது. இதுபோன்ற அரசியல் திரில்லர் புதிய அனுபவமாக இருக்கிறது.
பெரும்பாலும் வில்லனாக நடிக்கும் கிஷோர் எப்படி ஒரு பக்குவமான முதல்வராக நடித்திருக்கிறார்? என வியந்து பாராட்டுகிறோம்! ஒரு மூத்த அரசியல்வாதியாகவும், ஒரு குடும்ப தலைவனாகவும் நுண்ணிய உணர்வுகளைக் காட்டி சபாஷ் கிஷோர் எனச் சொல்ல வைக்கிறார்.
இது வரை சந்தானபாரதியை வந்தார், நடித்தார் என்பது போன்ற ‘கெஸ்ட்’ ரோலில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால், இந்தத் தொடரில் தன் முழு நடிப்புத் திறமையையும் காட்டி அசத்தியுள்ளார் என்று சொல்லலாம். ஒரு வயதான அரசியல்வாதியின் நடிப்பைச் சரியாக வெளிப்படுத்தி இருக்கிறார். ரம்யா நம்பீசன், ஆதித்யா மேனன், Y G மகேந்திரன் என நடித்தவர்கள் அனைவருமே சரியான பங்களிப்பைச் செய்திருக்கிறார்கள்.
ஜிப்ரானின் இசை, வொய்ட் ஆங்கிள் ரவிசங்கரின் ஒளிப்பதிவு, ரவிக்குமாரின் படத்தொகுப்பு இந்த மூன்றும் சேர்ந்து திரில்லர் திரைக்கதைக்குப் பலம் சேர்க்கிறது. இந்தப் படத்தில் வரும் கேரக்டர்கள் எந்த ஒரு நபரையும் மனதில் வைத்து உருவாக்கப்பட்டது இல்லை என இந்தத் தொடரின் அறிமுக விழாவில் கூறினார் வசந்தபாலன். ஆனால், இந்தத் தொடரைப் பார்க்கும்போது வாழ்ந்து மறைந்த, வாழ்ந்து கொண்டிருக்கும் அரசியல்வாதிகள் நினைவில் வருகிறார்கள்!
என்னைப் பொருத்தவரை, கிஷோர் கேரக்டரைப் பார்க்கும்போது காமராஜர், எம்.ஜி.ஆர், கருணாநிதி என மூவரின் நினைவும் வருகிறது. கிஷோர் – ஸ்ரேயா ரெட்டி நட்பைப் பார்க்கும்போது எம்.ஜி.ஆர் ஜெயலலிதா இருவரும் ஒரு சேர நினைவுக்கு வருகிறார்கள். அரசியல் ஏஜெண்டுகளைப் பார்க்கும்போது மத்தியில் அங்கம் வகிக்கும் முக்கிய தலைகள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். வாரிசு அரசியல் போட்டியைப் பார்க்கும்போது அட இது தமிழ்நாட்டுக்கு புதுசு இல்லையே என்று சொல்ல வைக்கிறது. ஹெலிகாப்டர் விபத்து காட்சியில், மறைந்த முதல்வர் மனதில் வந்து போகிறார். சந்தான பாரதியை பார்க்கும்போது பேராசிரியர் அன்பழகன் நினைவு வருகிறது.
என்ன வேலை இருந்தாலும் இந்த வெப் தொடரை பார்ப்பதற்கு முன்பு எல்லாம் முடித்துவிட்டு பார்க்கவும் என அந்த வெப் தொடரின் விறுவிறுப்பு மற்ற வேலைகளை மறக்கச் செய்யும்.








