நூறு சாமி – விமர்சனம்
சிவப்பு மஞ்சள் பச்சை (2019) படத்துக்குப்பின் இயக்குநர் சசி 7 வருட கால இடைவெளிக்குப் பின் இயக்கி இருக்கும் படம் நூறு சாமி. பிச்சைக்காரன் (2016) பிரம்மாண்டமான வெற்றிக்குப் பின் விஜய் ஆண்ட்டனி + சசி காம்போ 10 வருட இடைவெளிக்குப்பின் இணையும் படம்.
நாயகி தனது இளம் வயதிலேயே (26) கணவனை இழந்தவர். இரண்டு மகன்கள் உண்டு. சிங்கிள் மதராக அவர்களை வளர்த்து வருகிறார். தனக்கான இன்னொரு ஆண் துணையைத் தேடிக்கொள்ளலாம் என நாயகி நினைக்கும்போது மகனுக்கு அது பிடிக்கவில்லை.
சில வருடங்களுக்குப் பின் மகனுக்கு மெச்சூரிட்டி வந்த பின் அம்மாவின் ஆசைக்கு ஓக்கே சொல்கிறான். ஆனால் நாயகிக்கு இப்போது 42 வயது. சில சமூக சிக்கல்கள் காரணமாக அவரால் இன்னொரு துணையைத் தேடிக்கொள்ள முடியாத சூழல்.
தன் மகனுக்குத் திருமணம் செய்து வைக்க முயற்சி எடுக்கிறார். ஆனால் மகனோ அம்மாவுக்குத் திருமணம் ஆனால் தான் தனக்குத் திருமணம் என்பதில் உறுதியாக இருக்கிறான்.
இயக்குநர் சசி பூ படத்தில் ஒரு பெண்ணின் ஆட்டோகிராப் காதல் கதையாக உருவாக்கிப் பெண்களுக்காகக் குரல் கொடுத்திருந்தார். இதில் விதவைபெண் மறுமணம் என்ற சமூகத்துக்குத் தேவையான கருத்தை வலியுறுத்தி இருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் ஸ்வாசிகா பிரமாதமான நடிப்பு, கலக்கி விட்டார். லப்பர் பந்து படத்துக்குப்பின் கிடைத்திருக்கும் நல்ல ரோல். துணையை இழந்து தனிமையில் வாழும் பெண்ணின் வலிகளைக் கண்களாலேயே உணர்த்தி இருக்கிறார். தனக்கு மறுமணம் நடக்க இருக்கிறது என்றதும் அவரது முகம் மலர்வது அருமையான நடிப்பு. தேசிய விருது கிடைக்கலாம்.
நாயகனாக கெஸ்ட் ரோலில் வருகிறார் விஜய் ஆண்ட்டனி. இடைவேளைக்குப் பின் தான் இவரது எண்ட்ரி. அளவான நடிப்பு. 30 நிமிடங்கள் மட்டும் தான் இவருக்கான ஸ்க்ரீன் ஸ்பேஸ்.
நாயகியின் இரு மகன்களாக அஜய், சக்தி இருவரின் நடிப்பும் கனகச்சிதம்.
வில்லனாக இயக்குநர் பாலாஜி சக்திவேல் எரிச்சலை ஏற்படுத்தும் கேரக்டர் டிசைனை உள்வாங்கி நடித்திருக்கிறார்.
இவர்கள் போக கன்னியாஸ்திரியாக வரும் லிஜோமோல் ஜோஸ், காவ்யா, கருணாஸ் போன்ற அனைவரும் அவரவருக்குக் கொடுக்கப்பட்ட கேரக்டரில் கச்சிதமாக நடித்திருக்கிறார்கள்.
பகவதி பெருமாள், வினோதினி காமெடி டிராக் ஓக்கே ரகம்.
ஒளிப்பதிவு தர்சன் கிர்லோஸ். கிராமிய அழகைக்கண் முன் நிறுத்துகிறார். இசை பாலாஜி ஸ்ரீராம். மெலோடி இசையில் கவனம் ஈர்க்கிறார்.
எடிட்டர் பின் பாதியில் இன்னமும் கவனம் செலுத்தி இருக்கலாம். படத்தின் ரன்னிங் டைம் 127 நிமிடங்கள்.
உண்மை சம்பவத்தைக் கொண்டு கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் சசி.
பிச்சைக்காரன் படத்தில் அம்மாவை தெய்வமாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை சொன்ன இயக்குநர் இதில் அம்மாவை சக மனுசியாகப் பார்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லி இருக்கும் விதம் குட்.
விடிந்தால் நாயகிக்குத் திருமணம். நாளை முதல் மகன்களுக்கு சமைக்க மாட்டார். அவர்களாகத்தான் சமைத்துக் கொள்ள வேண்டும். இன்று இரவு சாப்பிடுவதுதான் அம்மா கையில் சாப்பிடும் கடைசி சாப்பாடு என்பதை உணர்ந்து மூவரும் கலங்கி அழும் காட்சி அருமையான எமோஷனல் கனெக்ட் கொடுத்த இடம்.
ஊருக்குள் நடக்கும் பஞ்சாயத்தை கலாய்க்கும் விதமும், அதையே க்ளைமாக்ஸ் ட்விஸ்ட்க்கு யூஸ் பண்ணிய விதமும் சபாஷ் போட வைக்கிறது.
2018 ம் ஆண்டு வளையம்பட்டி, கள்ளக்குறிச்சி பகுதியில் நடந்த உண்மை சம்பவம் இது என்பதால் உண்மைக்கு நெருக்கமாக நம் மனதுக்கு உருக்கமாகத் தெரிகிறது.
க்ளைமாக்சில் உண்மை சம்பவத்தில் வரும் ஜோடியைக் காட்டியபோது தியேட்டரில் ஆடியன்ஸ் எழுந்து நின்று கை தட்டினார்கள்.
முதல் பாதி நாடகம் போல் எதுவாக சென்றாலும் இடைவேளை காட்சி அடுத்து என்ன என்பதை யோசிக்க வைக்கிறது இரண்டாம் பாதி நாம் நினைத்தது போல் விறுவிறுப்பாகவும் பரபரப்பாகவும் திரைக்கதை அமைத்து ஜெயித்திருக்கிறார் சசி.
விதவைக்கு மறுவாழ்வு என்கிற கதையை படமாக எடுத்து அதில் வெற்றியும் கண்டிருக்கிறார் என்றே சொல்லலாம்.









