அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். இந்த படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

சுரேஷ் சக்கரவர்த்தி ஒரே வளாகத்தில் குறுக்கே சுவர் எழுப்பி ஆண்கள் பள்ளி, இரு பாலர் பயிலும் பள்ளியை நடத்தி வருகிறார். அவர் மரணத்திற்குப் பிறகு பள்ளி ஒருங்கிணைக்கப்படுகிறது. ஆனாலும் 11 ஆம் வகுப்பு படிக்கும் ஆண்கள் பள்ளியை சேர்ந்த 5 பேருக்கும், இரு பாலர் பயிலும் பள்ளியை 5 பேருக்கும் இடையே அதிகார மோதல் ஏற்படுகிறது. ஒரு சண்டையில் இரு குழுவும் ஒன்றாக இணைகிறார்கள். அப்போது இவர்கள் கையில் பெயர் குறிப்பிடாமல் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துக் கொள்ளப் போவதாக எழுதிய கடிதம் கிடைக்கிறது.
அந்த கடிதத்தை எழுதியது யார்? .. இந்த தற்கொலை முயற்சி தடுக்கப்பட்டதா? இதுபோன்ற பிரச்சினைகளுக்கும் என்னதான் தீர்வு? என்பதை தன் பாணியில் பேசியுள்ளார் ‘பாபா பிளாக் ஷீப்’ படத்தின் இயக்குநர் ராஜ் மோகன்.

ராஜ்மோகன் தனது முதல் படம் என தெரியாத அளவுக்கு திரைக்கதை அமைத்துள்ளார். முதல் பாதி முழுக்க முழுக்க 2கே கிட்ஸ்கள் அட்ராசிட்டி, பள்ளி கால வாழ்க்கை, பள்ளிக்காதல், வகுப்பறை அலப்பறைகள் பற்றி பேசி கலகலப்பாக மாறியுள்ளது. இரண்டாம் பாதி அப்படியே வேறு டிராக்கில் கதை பயணித்தாலும் சொல்ல வந்த கருத்தை தொட்டுச் சென்றுள்ளது படம். ஆனால் இன்னும் அழுத்தமாக சொல்லியிருக்கலாமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்துகிறது.