2025 ஆம் ஆண்டு வருட இறுதியில் நமது நெஞ்சை பிழியும் ஒரு படம் சல்லியர்கள்.
தமிழ் சினிமாவில் அரிதாகவே சில படங்கள் வெளியாகும். வணிகக் கோஷங்களில் சிக்காமல், ஒரு சமூகப் பொறுப்போடு, வரலாற்றின் மறைக்கப்பட்ட பக்கங்களை நேர்மையாக பேசும் படங்கள் அவை. அத்தகைய அரிதான படைப்புகளில் ஒன்றாக ‘சல்லியர்கள்’ திரைப்படம் தன்னை உறுதியாக நிலைநிறுத்திக் கொள்கிறது.
‘சல்லியர்கள்’ என்ற பெயரே இந்தப் படத்தின் முதல் வெற்றி. போர்க்களத்தில் பணிபுரியும் மருத்துவர்களைக் குறிக்கும் இந்தச் சொல், பலருக்கு புதிதாக இருக்கும். அந்தச் சொல்லைத் தேர்ந்தெடுத்ததிலிருந்தே இயக்குநரின் ஆய்வும், நேர்த்தியும் வெளிப்படுகிறது. இதற்காக முதலில் இயக்குநர் கிட்டுவுக்கு ஒரு நேர்மையான பாராட்டு அவசியம்.
இலங்கைத் தமிழர்களின் போராட்ட காலகட்டத்தில், தலைவர் பிரபாகரன் அவர்கள் எவ்வாறு மனிதநேயத்தோடு நடந்துகொண்டார் என்பதற்கான சாட்சியமாகவும் இந்தப் படம் விளங்குகிறது. போர்க்களத்தில் காயமடைந்த வீரர்களுக்கு, அவர்கள் எந்த இனத்தைச் சேர்ந்தவர்கள் என்பதைக் கருத்தில் கொள்ளாமல், உரிய மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டதை படம் மிக அழகாக சொல்லிச் செல்கிறது. தமிழர் வீரர்களுக்கு மட்டுமல்ல, காயமடைந்த சிங்கள போர் வீரர்களுக்கும் சிகிச்சை அளிக்கப்பட்ட அந்த மனிதநேயத்தை, படம் எவ்வித மிகைப்படுத்தலும் இன்றி நேர்மையாக பதிவு செய்துள்ளது. மனிதநேயமிக்க உலகத் தலைவனின் பண்புகளை படம் நுட்பமாக உணர்த்துகிறது.போர்க்களத்தில் ரத்தத்தின் அவசியத்தை உணர்த்தும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிகர் கருணாஸ் சிறிது நேரமே தோன்றினாலும், அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் ஊதியிருக்கிறார். அவரது நடிப்பு படத்தின் உணர்ச்சி வலிமையை மேலும் உயர்த்துகிறது.
சிறிய படங்கள் மட்டுமல்ல, தரமான படங்களே ரசிகர்களை அடைய முடியாத சூழல் நீடித்தால், எதிர்காலத்தில் நல்ல சினிமாவுக்கே இடமில்லாமல் போகும் அபாயம் உள்ளது. அரசு, தயாரிப்பாளர் சங்கங்கள் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அமைப்புகள், இப்படிப்பட்ட தரமான படங்களுக்கு முன்னுரிமை கொடுத்து, அவற்றை ஊக்குவிக்க வேண்டிய கட்டாயம் உள்ளது.திரையரங்கம் கிடைக்காத காரணத்தால், ‘சல்லியர்கள்’ திரைப்படம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இந்தப் படம் வெற்றி பெற வேண்டும் என்பதே நல்ல சினிமாவை விரும்பும் ஒவ்வொரு ரசிகனின் கடமையாகிறது. ஒட்டுமொத்த ரசிகர்களின் ஆதரவே, இப்படிப்பட்ட படைப்புகளுக்கு உண்மையான வெற்றியாக அமையும்.
நமது இனத்திற்காக நம்மவர்கள் பட்ட கஷ்டத்தை வெட்ட வெளிச்சம் ஆக்கி திரைப்படமாக எடுத்த இயக்குனருக்கு ஒரு சபாஷ்.









