ரூம்பாய் – விமர்சனம்
ஜெகன் ராயன் இயக்கத்தில், சி.நிகில் நடிப்பில் உருவாகி வரும் ‘ரூம் பாய்’ (Room Boy) ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரைப்படமாகும். ஏலகிரியில் உள்ள ஹோட்டல் பின்னணியில், மேலாளர் கொலை மற்றும் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி கண்காணிப்பாளர் மாயமான சம்பவங்களை மையமாகக் கொண்டு, குடும்ப சென்டிமென்ட் கலந்து இந்தப் படம் உருவாகியுள்ளது.
கூர்நோக்கு பள்ளியில் பயின்ற படத்தின் நாயகன் நிகில், அங்கிருந்து தனது சித்தப்பா இருக்கும் ஏலகிரிக்கு செல்கிறார். அங்கிருக்கும் இமான் அண்ணாச்சியில் ஹோட்டலில் வேலைக்கு சேர்கிறார் நிகில். அங்கு ஏற்கனவே வேலை பார்க்கும் காத்து கருப்பு கலையோடு நட்பாகிறார்.
அந்த ஹோட்டலில் பல சம்பவங்கள் அரங்கேறுகின்றன. அங்கு வேலை பார்க்கும் இளைஞர்களை அடிமைப்படுத்தி வைத்திருக்கிறார் அங்குள்ள மேனேஜர். அதுமட்டுமல்லாமல், அங்கு வரும் ஜோடிகளை ஹிடன் கேமராவில் வீடியோ எடுத்து பணம் பறிக்கும் வேலையிலும் அந்த கும்பல் ஈடுபட்டு வருகிறது.
அந்த ஹோட்டலுக்கு தான் வேலைக்குச் செல்கின்றனர் நிகிலும் கலையும். மிகவும் கடுமையான போக்கில் நடந்து கொள்கிறார் அந்த ஹோட்டலின் மேனேஜர்.
முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் மேனேஜரை கொடூரமாக கொன்று விடுகிறார். மேனேஜரை கொன்ற அந்த நபர் யார்.?? எதற்காக அந்த கொலை நடந்தது.? இந்த ஒரு கொலையோடு அது நின்றதா காரணம் என்ன.?? உள்ளீட்ட பல கேள்விகளுக்கு இரண்டாம் பாதியில் பல ட்விஸ்ட் காட்சிகளை வைத்து பதிலளித்திருக்கிறார் இயக்குனர்.
ஆரம்பத்தில் ஏனோ தானோவென்று செல்லும் கதையானது, இண்டர்வேல் சீனில் நடக்கும் காட்சியில் கதையின் போக்கே மாறி விடுகிறது.அதன் பிறகு நடக்கும் அதிரடி திருப்பங்கள் படத்தின் சுவாரஸ்யத்தை உச்சிக்கு எடுத்துச் சென்று விடுகிறது. ட்விஸ்ட் காட்சிகளை மிகவும் நேர்த்தியாக கையாண்டிருக்கிறார் இயக்குனர்.
எந்த இடத்தில் எந்த காட்சியை வைக்க வேண்டும்.? எப்போது எந்த காட்சியை ரிவில் பண்ண வேண்டும் என்பதிலும் மிகவும் தெளிவாக இருந்து, காட்சிகளை மிகவும் சரியாக புகுத்தியிருக்கிறார்.
வில்லனோடு ஹீரோ சண்டையிடும் காட்சியை இன்னும் சற்று எதார்த்தமானதாக மாற்றியிருந்திருக்கலாம். ஹீரோ இன்னும் சற்று நடிப்பு பயிற்சி பெற்றிருந்திருக்கலாம்.
ஒளிப்பதிவு பல இடங்களில் தனது திறமையை காண்பித்திருக்கிறார். குத்து பாடல் ஆட்டம் போட வைத்திருக்கிறது. பின்னணி இசையும் கதையோடு நம்மை பயணம் புரிய வைத்திருக்கிறது.









