பைரி – விமர்சனம்
தமிழ் சினிமாவில் புறாப்பந்தயத்தை வைத்து வெளியாகும் முதல் படம் என்ற பெருமையைப் பெற்றுள்ளது பைரி
நாகர்கோவில் ஏரியாவில் 19-ஆம் நூற்றாண்டில் புறாப்பந்தயம் இருந்ததாகவும் அதன் தொடர்ச்சியாக இப்போதும் புறாப்பந்தயம் நடப்பதாகவும் கதை அமைத்துள்ளார் இயக்குநர். ஹீரோ டீம் பங்கேற்கும் புறா பந்தயத்தில் ஏற்படும் பிரச்சனைகள் சிக்கல்கள், அதன் மூலம் எழும் பல்வேறு முடிச்சுகள் என ஒரு விறுவிறு திரைக்கதை அமைத்துள்ளார் அறிமுக இயக்குநர் ஜான் கிளாடி
ஹீரோவாக நடித்துள்ள சயத் மொய்தீன் நாகர்கோவில் மண்ணின் மைந்தனாகவே வாழ்ந்துள்ளார். வெடுக்கென்று வரும் கோபத்தையும் நண்பர்கள் மேல் வரும் பாசத்தையும் தன் நடிப்பு மூலம் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளார். ஹீரோவின் நண்பராக இயக்குநர் ஜான் கிளாடி நடித்துள்ளார். எதார்த்தம் மீறாத அவரது நடிப்பு ஈர்க்கிறது. மேலும் படத்தில் வரும் எல்லா கேரக்டர்களும் துளியும் மிகையில்லா நடிப்பால் படத்தைத் தாங்கியுள்ளனர்
படத்தை வேறோர் தளத்திற்கு எடுத்துச் சென்றுள்ளார் கேமராமேன். மிகவும் நெருக்கடி மிகுந்த தெருக்களில் கூட அவரது கேமரா பிசகாமல் சென்று சுழன்றுள்ளது. அருண்ராஜாவின் இசையில் பாடல்கள், RR இரண்டுமே ஹை ஸ்கோரிங். எடிட்டிங் சிறப்பான அம்சமாக வந்துள்ளது. சி.ஜி டீம் ஸ்பெசல் எபெக்ட் போட்டு உழைத்துள்ளனர்
ஒரு புறாப்பந்தயத்திற்கு பின்னாலிருக்கும் அரசியலை உளவியலை நிலவியலை சரியான புரிதலோடு காட்சிப் படுத்தியுள்ளார் இயக்குநர்..அதீதமான வன்முறை, வசைச் சொற்கள் ஆகியவை எதார்த்திற்காக காட்சிப்படுத்தினாலும் நெருடலாகத் தான் இருக்கிறது. காட்சி வழியாக கணம் சேர்த்த இயக்குநர் கதையில் எமோஷ்னலை கூடுதலாகச் சேர்த்திருக்கலாம். ரேஸில் சில இடங்களில் தவித்தாலும் தவிர்க்க முடியாத மேக்கிங்கால் இந்தப்புறா இலக்கை அடைந்து விடுகிறது
மொத்தத்தில் இந்த ‘பைரி’ புறாவை போல் உயரத்தில் பறக்கும்









