தமிழ் சினிமாவில் எப்போதாவது தான் சில நல்ல படங்கள் வரும் அந்த வகையில் வந்திருக்கும் படம் கெவி.
கொடைக்கானல் அதன் இயற்கை அழகுக்கு பெயர் பெற்றது மற்றும் பிரபலமான சுற்றுலாத் தலமாக பல சிறிய கிராமங்களால் சூழப்பட்டுள்ளது. கொடைக்கானல் தொகுதியில் 15 பஞ்சாயத்து கிராமங்கள் உள்ளன. கொடைக்கானலில் இருந்து சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் சாலை வசதி, மருத்துவ வசதி உட்பட எந்த ஒரு அடிப்படை வசதி இல்லாத கெவி என்கிற ஒரு மலைவாழ் கிராமத்தில் நிறைமாத கர்ப்பிணி மந்தாரை (ஷீலா) மற்றும் மலையன் (ஆதவன்) தங்களுக்கு பிறக்கப்போகும் குழந்தையை நினைத்து சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் அங்கே மலைச் சரிவு ஏற்பட்டு உயிருக்கு போராடியவர்களை காப்பாற்ற மலையன் மற்றும்; கிராம மக்கள் டோலி கட்டி 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மருத்துவமனைக்கு சாலை வசதி இல்லாத மலை பகுதியில் தூக்கி செல்கிறார்கள். போகும் வழியில் ஒவ்வொருவராக இறந்து விடுகிறார்கள்.
அதே நேரத்தில் தேர்தல் வரும்போது மட்டும் ஓட்டுக் கேட்க தங்களை சந்திக்க வரும் ஓர் ஆளுங்கட்சி எம் எல் ஏ வும், காவல் துறையினரும் எதிரில் வருகிறார்கள். அப்போது அவர்களிடம் மலையன் கேள்வி கேட்க தங்களுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்துகிறார். எம் எல் ஏ வுக்கு ஆதரவாக போலீஸ் இன்ஸ்பெக்டர் (சார்லஸ் வினோத்) மலையனுடன் பேசும் போது வாய் தகராறு ஏற்பட்டு அது மோதலில் முடிகிறது. இந்த மோதலில் போலீஸ் இன்ஸ்பெக்டர் சார்லஸ் வினோத் செருப்பால் தாக்கப்படுகிறார். எம் எல் ஏ வும் அவமானப் படுத்தப்படுகிறார். கோபத்தில் இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் எம் எல் ஏ விடம் இவர்களை ஒரு வழி செய்திடலாம் என்று கூறுகிறார். ஆனால் அந்த கிராமத்து மக்களின் வாக்குகள் வேண்டும் என்பதற்காக நடந்த சம்பவத்தை பற்றி மறந்துவிட வேண்டும் என போலீஸ் இன்ஸ்பெக்டரை எச்சரிக்கிறார் எம் எல் ஏ. ஆனால் கோபத்தில் இருக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் மலையனை பழிவாங்கத் திட்டம் தீட்டுகிறார். இந்நிலையில் மலையன் நிறைமாத கர்ப்பிணி மனைவியை வீட்டில் தனியாக விட்டு விட்டு, சந்தைக்கு செல்கிறான்.
மாலை மலைப்பகுதியில் ஊர் திரும்பும் மலையனை பழி தீர்க்க துடிக்கும் போலீஸ் இன்ஸ்பெக்டர் தன் சக போலீஸ் படையுடன் மலையனைச் சுற்றி வளைத்துப் பிடித்து அடித்து கொடூரமாக தாக்கி, உதைத்து சித்திரவதை செய்து மலையனை கொல்ல முயற்சியும் நடைபெறுகிறது.மலையன் அவர்களிடமிருந்து எப்படியோ தப்பித்து ஊர் வந்து சேருகிறார். இதற்கிடையில் பிரசவ தேதிக்கு முன்பே மந்தாரைக்கு பிரசவ வலி வருகிறது. நிறைமாத கர்ப்பிணியின் வயிற்றுக்குள் சிசு கொடி சுத்திக் கிடக்க ஆபத்தான நிலை ஏற்பட, அந்த கிராம மக்கள் ஒன்று கூடி டோலி கட்டி அதில் மந்தாரவை மருத்துவமனைக்கு அந்த மலைப் பகுதியில் அந்த இரவு நேரத்தில் காடு மேடுகளில் சுமந்து செல்கிறார்கள். ஊர் மக்கள் தபால்காரர் உதவியுடன் மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டால் அங்குள்ள தலைமை மருத்துவர் வர மறுத்து அவர்களை அலட்சியப்படுத்துகிறார்.
வழியில் மந்தாராவுக்கு பனிக்குடம் உடைந்து, குழந்தை தலை கொஞ்சம் வெளியே வந்து ஆபத்தான சூழ்நிலையை உருவாக்குகிறது. படுகாயங்களுடன் தப்பித்து கிராமத்தை அடையும் மலையன் மனைவியின் நிலையை அறிந்து மனைவியை தேடி மீண்டும் காட்டு பாதைக்கு சொல்கிறான். அப்போது மீண்டும் போலீஸ் இன்ஸ்பெக்டரிடம் சிக்கிக் கொள்கிறார்.
அதன் பின் ஆபத்தான சூழ்நிலையில் உள்ள மந்தாரை மற்றும் போலீஸ் பிடியில் சிக்கி உள்ள மலையன் இருவருடைய நிலை என்ன என்பதே கெவி படத்தின் மீதிக்கதை.
அழகான ஒளிப்பதிவில் அனைவரும் ரசிக்கும்படி வந்திருக்கும் படம் கெவி.