ராஜுவின் அம்மா சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆதியா பிரசாத்தின் அம்மா தேவதர்ஷினி ஆகிய இருவருக்கும் இணைந்து திட்டம் ஒன்றை போடுகிறார்கள்.
அது என்ன திட்டம் என்றால், தங்களது குழந்தைகள் கல்லூரியில் யாரையாவது காதலித்து கெட்டு போய்விட கூடாது என்பதற்காக, இருவரும் சேர்ந்து நம் பிள்ளைகளை ஒருத்தரை ஒருத்தர் சந்திக்க வைத்து, காதலிக்க வைத்து திருமணம் செய்து வைத்து விடலாம் என திட்டம் போடுகின்றனர்.

இதில் அம்மக்களின் பிளான் ஒர்கவுட் ஆனதா, இல்லையா? இதற்கிடையில் நடந்த கலாட்டாக்கள் எல்லாம் என்ன என்பதை நகைச்சுவையுடன் கலந்து சில கருத்துக்களுடன் சொல்லப்பட்டியிருக்கும் கதை தான் பன் பட்டர் ஜாம்.
கதாநாயகன் ராஜு ஹீரோவாக தனது முதல் படத்திலேயே இயல்பான நடிப்பினாலும், நகைச்சுவை மற்றும் உணர்ச்சிவசமான நடிப்பினாலும் கவனத்தை ஈர்க்கிறார். அதே போல் கதாநாயகிகளாக நடித்துள்ள ஆதியா பிரசாத் மற்றும் பாவ்யா த்ரிகா இருவருமே தங்களது கதாபாத்திரத்தை கச்சிதமாக செய்துள்ளனர்.

பன் பட்டர் ஜாம் இளைஞர்களுக்கு ஒரு புதுமையான, உற்சாகமாக காதல் கதையை வழங்குகிறது. தலைமுறை இடைவெளி மற்றும் காதல் கனவுகளை பற்றி இப்படத்தில் நேர்த்தியாக கையாண்டுள்ளார் இயக்குநர் ராகவ் மிர்ததின்.
இளமை நிறைந்த காதல் – நகைச்சுவை திரைப்படமாக பன் பட்டர் ஜாம் உருவாகியுள்ளது. இது ராஜு ஜெயமோகனுக்கு நல்ல அறிமுகத்தை வெள்ளித்திரையில் தந்துள்ளது என்று தான் சொல்லவேண்டும். அதே போல் இப்படத்தில் வரும் நகைச்சுவை மற்றும் உணர்ச்சிகரமான காட்சிகள் இலகுவாக இருந்தாலும் அர்த்தமுள்ளதாக அமைந்துள்ளது.
இசையமைப்பாளர் நிவாஸ் கே. பிரசன்னாவின் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு. இளமை உயர்சாகத்தையும், உணர்ச்சிவசமான காட்சிகளிலும் இவர் அமைத்துள்ள பின்னணி இசை மனதை தொடுகிறது. மேலும் ஒளிப்பதிவு அழகு. எடிட்டிங் இன்னும் கூட இறுக்கமாக இருந்திருக்கலாம் என தோன்றுகிறது.









