‘கன்னி’ – விமர்சனம்
சன் லைஃப் கிரியேஷன்ஸ் சார்பில் எம் .செல்வராஜ் தயாரிப்பில் இயக்குநர் மாயோன் சிவா தொரப்பாடி இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘கன்னி’.
இப்படத்தில் அஷ்வினி சந்திரசேகர், மணிமாறன், தாரா கிரிஷ், ராம் பரதன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்துக்கு ஒளிப்பதிவு ராஜ்குமார்,இசை செபாஸ்டியன் சதீஷ்,படத்தொகுப்பு சாம், பாடல்கள் உமாதேவி, கலை சக்திவேல் மோகன், சண்டைப் பயிற்சி ரமேஷ் பாபு,
சேம்பி தன் தாத்தா வீட்டுக்குச் செல்கிறாள்.அந்த வீட்டில் ஆள் இல்லை எனவே ஒரு கோவிலில் தங்குகிறாள். பிறகு தாத்தாவைச் சந்தித்து மகிழ்ச்சியுடன் அங்கே இருக்கிறாள்.பிறகு அவளது முன் கதை காட்டப்படுகிறது.அவள் தனது அண்ணன் வேடன், அண்ணி நீலிமா என்று அண்ணன் குடும்பத்தோடு மிகவும் பாசமாக இருக்கிறாள்.அந்த ஊர் மூலிகைக்குப் பெயர் போனது.உயிராபத்து நோய்களையும் தீர்க்கும் மூலிகைகளும் மருந்துகளும் அங்கே உண்டு. அதைப் பாரம்பரியமாகப் பயன்படுத்தி வருகிறார்கள். அந்த இயற்கை வளங்களை ஆக்கிரமித்து வணிக மயமாக்கி பயன்படுத்திக் கொள்ள ஒரு கும்பல் முயல்கிறது.அதற்கு இடையூறாக இருப்பவர்களைத் துன்புறுத்துகிறார்கள், கொலையும் செய்கிறார்கள், அப்படி சேம்பியின் அண்ணனும் அண்ணியும் கொல்லப்படுகிறார்கள். அந்த மூலிகை ரகசியத்தையும் தன் உயிரையும் காப்பாற்றிக் கொள்ள அண்ணனின் இரு குழந்தைகளுடன் தப்பித்து வெளியூர் ஓடுகிறாள் சேம்பி.அப்படித்தான் ஜவ்வாது மலைப் பக்கம் உள்ள தன் தாத்தா ஊருக்குச் செல்கிறாள். அங்கே சென்றாலும் அவளை அந்தக் கும்பல் தேடி வந்து துரத்துகிறது.அவள் அவர்களை எப்படி எதிர்கொள்கிறாள்? அவள் தன் உயிரைக் காப்பாற்றிக் கொண்டாளா? அந்த மூலிகை மருந்துகளையும் மாந்திரீக ரகசியங்களையும் காப்பாற்றினாளா என்பதுதான் மீதிக் கதை.
படத்தில் சேம்பியாக அஷ்வினி சந்திரசேகர் நடித்துள்ளார். தோற்றம், நடிப்பு , உடை, உடல் மொழி என்று அந்தக் கதாபாத்திரமாகவே மாறியிருக்கிறார் .கொஞ்சம் கூட நடிப்பு என்று தெரியாமல் அந்த சேம்பியாகவே வாழ்ந்துள்ளார்.
படத்தின் பிரதான அம்சமாக பாராட்டப்பட வேண்டிய ஒன்று கதையின் நிகழ்விடங்கள்தான்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே புள்ளஹள்ளி ,மற்றும் ஜவ்வாது மலைப்பகுதிகளில் காட்சிகள் வருகின்றன. மலைப்பகுதியில் காடு, பாறைகள் நிறைந்த கரடுமுரடான இடங்களில் பல்வேறு கோணங்களில் படமாக்கி கண்முன்னே அழகான ஓவியங்களாகக் காட்சிகளைப் படப்பதிவு செய்துள்ளார் ஒளிப்பதிவாளர் ராஜ்குமார்.முழுக்க முழுக்க இயற்கை வெளிச்சத்திலேயே படமாக்கி உள்ளார். யதார்த்தமாக மட்டுமல்ல அழகியலும் நிறைந்த காட்சிகள் படத்தின் பெரும் பலம்.
படக் குழுவினர் எளிதில் நுழையாத லொக்கேஷன்களில் தேடிப் போய் படமாக்கி இருக்கிறார்கள். நடிகர்களும் கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார்கள். படத்தில் ஏதோ ஒரு போதாமையை உணர முடிகிறது. சொல்ல வேண்டிய கருத்துக்களை, உணர்வுகளை அழுத்தமான காட்சிகளால் உருவாக்காமல் மேலோட்டமாக கதை நகர்வது படத்தின் பெரும் பலவீனமாக இருக்கிறது.
படத்தில் சில பாத்திரங்களுக்கு அழுத்தமான காரணம் இல்லாததால் ஒட்ட மறுக்கின்றன.
மொத்தத்தில் வித்தியாசமான பின்னணியில், நல்ல நடிகர்களின் நடிப்பில், அழகுணர்வு கொண்ட காட்சிகளில், மண் மணம் மாறாத இசையில் 126.54 நிமிடங்கள் கொண்ட இப்படம் உருவாகி இருக்கிறது. ஆனால் தெளிவற்ற,சுமாரான திரைக்கதை கொண்ட ஒரு படமாகத்தான் தோன்ற வைக்கிறது.படத்தில் கன்னி என்பது தூய்மை, பரிசுத்தம், சக்தி என்ற பெயரில் சொல்லப்படுகிறது. ஆயிரம் இருந்தாலும் இந்தக் ‘கன்னி’, வணிக சூத்திரங்களுக்கு உட்படாத, ஆபாசக் கலப்பில்லாத,மழை மொழி பேசும் மலை மொழி பேசும், தொன்மையின் மணம் வீசும், பாரம்பரியத்தை உயர்த்திப் பிடிக்கும் படமாகத் தனித்து தெரிகிறது என்பதில் சந்தேகம் இல்லை.








