‘வேம்பு’ திரைப்படம் அகமதாபாத் சர்வதேசத் திரைப்பட விழாவில் இரண்டு விருதுகளை வென்றது
அறிமுக இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு இயக்கியுள்ள இந்த படத்தில் மெட்ராஸ் (ஜானி), தங்கலான், கபாலி படங்களில் நடித்த ஹரிகிருஷ்ணன் நாயகனாக நடிக்க, டூலெட், மண்டேலா படங்களில் நடித்த ஷீலா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.
மாரிமுத்து, ஜெயராவ், பரியேறும் பெருமாள், கர்ணன், வாழை படங்களில் நடித்த ஜானகி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சமூகத்தில் நிகழும் குற்றங்களில் தன்னைத் தானே பாதுகாத்துக் கொள்ளாதவர்கள் வன்முறைக்கு இரையாகிறார்கள். வல்லூறுகளுக்கு மத்தியில் வாழ்தல் சாதாரண காரியமல்ல. அதையும் தாண்டி வாழும் பலம் முக்கிய தேவை. இதை வேறுகோணத்தில் பார்க்கும், பேசும் படமாக உருவாகியுள்ளது ‘வேம்பு’.
சமூகம் சார்ந்த பலமான கருத்தை முன்வைத்த இப்படம், தற்போது அகமதாபாத் சர்வதேச திரைப்பட விழாவில் கலந்துகொண்டு விருதுக்கான பிரிவில் போட்டியிட்டது.
அதில் சிறந்த நடிகைக்கான விருது ஷீலாவுக்கும், சிறந்த நடிகருக்கான விருது ஹரிகிருஷ்ணன்-க்கும் வழங்கப்பட்டது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது.
இச் செய்தியைப் பகிர்ந்துகொண்ட இயக்குநர் V.ஜஸ்டின் பிரபு கூறும்போது,
“சிறந்த கதை அம்சம்கொண்ட யதார்த்தமான திரைப்படங்கள் பல்வேறு மொழிகளில் வெளியாகி விருதுகளை அள்ளுவதுடன், திரையரங்குகளிலும் பெருவாரியான வெற்றியைப் பெற்று வருகின்றன.
நாயகன் ஹரிக்கும், நாயகி ஷீலாவுக்கும் விருதுகள் கிடைத்ததில் பெரும் மகிழ்ச்சி.
இந்த விருதுகள் எங்களுக்கு நம்பிக்கையைத் தந்துள்ளது. மக்களும் திரையரங்கில் வேம்பு படத்தைப் பார்த்து வெற்றியாக்குவார்கள் என்ற நம்பிக்கையுடன் மே மாதம் வெளியிடத் திட்டமிட்டுள்ளோம்.
அதற்கு முன்னதாக இந்த படத்தின் முன்னோட்டம் அடுத்தடுத்து வெளியாக இருக்கின்றன. அது குறித்த அறிவிப்புகளும் விரைவில் வெளியாக உள்ளது என்று கூறினார்..