“அரணம்” திரைப்படதின் இசை வெளியீட்டு விழா !!
தமிழ்த்திரைக்கூடம் தயாரிப்பில், பிரபல பாடலாசிரியர் பிரியன் எழுதி இயக்கி நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “அரணம்”. ஒரு மாறுபட்ட ஹாரர் திரில்லராக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு, படக்குழுவினர் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது.
இவ்விழாவினில்..
பாடலாசிரியர் சஹானா பேசியதாவது..அரணம் படத்தில் ஆரிராரோ எனும் பாடல் தான் என் முதல் பாடல் பிரியன் சாரின் தமிழ்திரைப்பா கோர்சில் படித்த போது, எழுதிய பாடல் ஆனால் எங்களுக்கு வாய்ப்பு தர வேண்டும் எனும் நோக்கில், படத்தில் என்னைப் பயன்படுத்த வைத்த பிரியன் சார், ராஜன் சாருக்கு நன்றி. தற்போது மெல்லிசை பாடல் அதிகம் வருவதில்லை. இப்படம் அந்த ஏக்கத்தைப் போக்கும். இப்படத்தை அனைவரும் ரசிப்பீர்கள், அனைவருக்கும் நன்றி.
பிரியன் சாரை எனக்கு ஆறேழு வருடங்களாகத் தெரியும், நானும் சாரும் இப்படம் பற்றி நிறைய முறை விவாதித்துள்ளோம், ஒரு புதுமையான முறையில் ஹாரர் திரில்லராக இப்படத்தை உருவாக்கியுள்ளோம். உங்களுக்கு நிறைய சர்ப்ரைஸ் இருக்கும், நீங்கள் மக்களுக்கு இப்படத்தைக் கொண்டு சேர்க்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். நன்றி
நாயகி வர்ஷா பேசியதாவது..முதலில் பிரியன் சாருக்கு நன்றி, என்னை நம்பி இந்த வாய்ப்பைத் தந்தார். முதல் படம் நடிக்கும் போது நாயகியுடன் யாராவது கூட வருவார்கள் ஆனால் இப்படத்தில் முழுப்படத்திலும் நான் தனியாக வந்து தான் நடித்தேன். இப்படத்தில் என்னை எல்லோரும் அவ்வளவு பாதுகாப்பாகப் பார்த்துக்கொண்டார்கள். பிரியன் சார் ஒவ்வொன்றையும் சொல்லித்தந்தார். பிரியன் சார், தன் கூட இருக்கும் அனைவரும் வளர வேண்டும் என்று நினைப்பவர். தமிழைக் கொண்டாடுபவர்களுக்கு இப்படத்தில் ஒரு பாடல் இருக்கிறது. படத்தில் நானே டப்பிங் பேசியுள்ளேன் உங்கள் எல்லோருக்கும் படம் கண்டிப்பாகப் பிடிக்கும் படத்திற்கு ஆதரவு தாருங்கள் நன்றி.
தமிழ்த்திரைப்பா கூடத்தில் பயின்றவர்களில் நான் தான் வயது மூத்தவன். பிரியன் அவர்கள் எப்போதும் யாரிடமும் கோபமாகப் பேச மாட்டார். அவரிடம் ஏன் பாடலாசிரியர்களை உருவாக்குகிறீர்கள் என்று கேட்டேன். சென்னைக்கு பாடலாசிரியர் ஆகும் கனவில் தான் வந்தேன் தமிழ் மொழி தான் எனக்கு வாழ்வு தந்தது அதற்கான கைமாறு தான் இது எல்லாம் என்றார். தமிழ் மொழி மீது தீராத அன்பு கொண்டவர். இந்தப்படம் க்ரவுட் ஃபண்டிங் முறையில் தான் உருவானது. முதலில் இப்படத்தில் வேறொருவர் இயக்கி வேறொருவரைத்தான் நடிக்க வைப்பதாக இருந்தது. மாணவர்கள் சொல்லிச் சொல்லி தான் பிரியன் சார் இறுதியில் இயக்கி நடித்தார். இந்தப்படத்திற்காக அவர் பட்ட கஷ்டம் அனைவருக்கும் தெரியும். அவர் பெரிய நடிகராக வருவார். படத்தை மிகப்பெரிய உழைப்பில் உருவாக்கியுள்ளார். இந்தப்படம் கண்டிப்பாகப் பெரிய வெற்றி பெறும்
விநியோகஸ்தர் ஹரி உத்ரா பேசியதாவது…அரணம் படத்தை எங்கள் நிறுவனம் சார்பில் வெளியிடுவது மிகப்பெரிய மகிழ்ச்சி. பிரியன் சார் எனக்கு நண்பர். இந்தப்படம் மூலம் நட்பு நெருக்கமாகிவிட்டது. அவர் இப்படத்தைப் பெரிய அளவில் கொண்டு வந்துவிட்டார், இனி எங்கள் பொறுப்பு அதிகமாகிவிட்டது. மாணவர்கள் சேர்ந்து குருவுக்காகப் படம் எடுத்தது இது தான் முதல் முறை. இந்தப்படம் சிறப்பாக வந்துள்ளது. அனைவரும் படத்திற்கு ஆதரவு தாருங்கள். ரெட் ஜெயண்ட்ஸ் நிறுவனம் நிறையப் படங்களை ரிலீஸ் செய்கிறது அந்த நம்பிக்கையில் நாங்கள் படங்கள் ரிலீஸ் செய்கிறோம். ஆனால் ரிலீஸ் பற்றி சில முன்னெடுப்புகளை உதயநிதி சார் எடுக்க வேண்டும். இங்கு சின்னப்படங்கள் வர முடிவதில்லை, வாராவாரம் வேற்று மொழிப்பாடங்கள் வருகிறது அது தியேட்டரை ஆக்கிரமித்துக் கொள்கிறது. ஆனால் சின்னப்படங்களுக்கு வாய்ப்பே இல்லாமல் இருக்கிறது. உதயநிதி சார் சின்னப்படங்களுக்கு ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு, நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன் நன்றி.
இயக்குநர் நடிகர் பாடலாசிரியர் பிரியன் பேசியதாவது..அரணம் ஒரு பெரும் தவம். இந்தப்படம் எனக்கு மிகப்பெரும் அனுபவம், 20 வருடம் சினிமாவில் இருப்பவனையே இந்த அளவு அடிக்கிறார்கள் என்றால் புதிதாக சினிமாவுக்கு வருபவர்களை என்ன செய்வீர்கள்?. ஒரு கலையை அந்த துறையிலிருந்து கொண்டே அழிப்பது சினிமாவில் தான். அரணம் நிறையக் கற்றுத் தந்துள்ளது. தன்னுடைய படத்தின் விழாவிற்கே வராமல் இருக்கிறார்கள் நாயகிகள் ஆனால் வர்ஷா இந்தப்படத்தில் ஒரு உதவி இயக்குநராக பணியாற்றினார். இப்போது வரை படத்திற்காக பணியாற்றிக்கொண்டுள்ளார் அவருக்கு நன்றி. ஒளிப்பதிவாளர் நௌஷத் என்ன சொன்னாலும் உடனே செய்துவிடுவார், அவருக்கு நன்றி. பிகே சம்பளமே வேண்டாம், இந்தக்கதைக்காக நான் வேலை செய்கிறேன் என்று வந்து எடிட் செய்தார் அவருக்கு நன்றி. இசையமைப்பாளர் உடல்நிலை காரணமாக வரமுடியவில்லை நல்ல பாடல்கள் தந்துள்ளார் அவருக்கு நன்றி. இப்படத்தில் பணியாற்றிய எல்லோரும் தங்கள் படமாக நினைத்துத் தான் உழைத்தார்கள் அவர்கள் அனைவருக்கும் நன்றி. பாடலாசிரியர்கள், நான் பாடமெடுத்தவர்கள் இப்போது மேடையில் இருப்பது பெருமையாக உள்ளது. என்னை நம்பி இப்படத்தை முழுதாக இறங்கித் தயாரித்த என் தயாரிப்பாளர்களுக்கு நன்றி. என் முயற்சியில் 250 பாடலாசிரியர் உருவாகியிருப்பதே பெருமை தான், நீங்கள் எதிரிகளை உருவாக்குகிறீர்கள் என்றார்கள் சிலர், ஆனால் எனக்குப்பெருமைதான் ஏனெனில் தோற்றாலும் ஜெயித்தாலும் அது நான் என்பது தான் என் பெருமை. படம் எடுப்பது இப்போது மிகக் கஷ்டமாகிவிட்டது. படம் படைப்பாளிகள் கையில் இல்லை, கார்பரேட் கையில் இருக்கிறது. நல்ல படத்திற்கு இங்கு இடமில்லை. ஒரு பெரிய படம் வந்தால் நன்றாக ஓடும் சின்னபடங்களை எடுத்து விடுகிறார்கள். ஆயிரம் தியேட்டரிலும் ஓரே படம் தான் ஓடுகிறது. நான் இப்படிப்பட்ட இடத்தில் வந்து தோற்றாலும் நான் நிமிர்ந்து நிற்பேன் நான் இருக்கிறேன் என்பதைப் பதிவு செய்வேன். இப்போது எடுக்கும் 300 கோடி 400 கோடி படங்கள் எல்லாம் குப்பையாக இருக்கிறது. படம் எடுத்தா அடி, வெட்டு, இரத்தம் மட்டும் தான். கலைஞனுக்கு அறம் வேண்டாமா ? காசு மட்டும் இருந்தால் போதும், என்ன வேண்டாலும் செய்யலாமா?. வெளிப்படங்கள் வருவது கூட பொறுத்தக்கலாம் 10, 20 வருடம் ஆன முத்து, ஆளவந்தான் எல்லாம் இப்போது வந்து தியேட்டரில் ஓடுகிறது. அதெல்லாம் டிவியில் 300 தடவை போட்ட படம். யூடுப்பில் ரஜினி ஜப்பானில் பேசும் முத்து படமே இருக்கிறது. எதற்கு மீண்டும் மீண்டும் இப்படி சம்பாதிக்க நினைக்கிறீர்கள். புதுப்படங்களுக்கு கொஞ்சமாவது வழி விடுங்கள். ஒரு தரமான படைப்பை நாங்கள் தந்துள்ளோம். இது ஒரு எழுத்தாளனின் படைப்பு இந்தப்படத்தின் முதல் பாதியைப் பார்த்து இரண்டாம் பாதியைக் கணிக்கவே முடியாது, முழுப்படமும் உங்களை ஆச்சரியப்படுத்தும். படத்தைப் பார்த்து ரசியுங்கள் அனைவருக்கும் நன்றி.








