கோபத்தை வருத்தத்தை கூட அன்பால்தான் சொல்லுவார் கார்த்தி
இதன் ஒவ்வொரு உணர்வுக்கும் அடிப்படையான அன்பை பற்றி அதிகம் பேசுகிற படம். இவ்வுலகில் வெறுப்பு என்பது பழகி போன ஒன்றாகி விட்டது. மிதமான அன்பையே அழுத்தி சொல்லியாக வேண்டும் என்கிற நிலையில் நாம் இருக்கிறோம். அன்பாக இருக்கிறவர் பிழைக்கத் தெரியாதவர் என்கிறார்கள்..! எல்லா உணர்ச்சிகளுக்கும் தாயுணர்வு அன்புதான். அன்பாக இருப்பது எவ்வளவு அழகான விஷயம்னு சொல்றதுதான் இந்த மெய்யழகன்.
இங்கே காதலும் வீரமும் இருக்கத்தான் செய்கிறது, அன்பு என்பது இல்லாது போகும் காலகட்டத்தில் இருக்கோம். ஆனால் அன்பே உருவாக இருக்கக்கூடியவர்களும் இருக்காங்க. எனக்காகவும் உங்களுக்காகவும் முகம் தெரியாத யார் யாரோ அவங்களால் முடிந்த அன்பை காட்டுவதால் தான் இந்த உலகம் இன்னும் உயர்ந்திருக்கு. சிலரால் அன்பு செலுத்தாமல் இருக்க முடியாது என்பதுதான் உண்மை. அப்படி எல்லோராலும் இருக்க முடிந்தால் இங்கே குற்றங்களும் குழப்பங்களும் அன்பால் குறையும்.
கொரோனா சமயத்தில் மூன்று கதை எழுதி வைச்சிருந்தேன். ஒரு சிறுகதையும் எழுதினேன். அதை படித்த இயக்குநர் நண்பர்கள் சிலர், கதை நல்லா இருக்குன்னு சொல்ல அதையே நாவலாக எழுத உட்கார்ந்தேன். இதில் ஒரு பகுதி தான் 96. நாவலாக வெளியிடுவதற்கு முன்னாடி ஒரு தடவை விஜய் சேதுபதி கிட்டே படிக்க கொடுத்தேன். சேது படிச்சிட்டு கொண்டாட ஆரம்பிச்சிட்டார். சபையாக கூடி எல்லோர்கிட்டேயும் வாசித்து காட்டி கண்கலங்கி கட்டிப்பிடித்து கொஞ்சினார். என்னோட ரைட்டிங் அவருக்கு ரொம்ப பிடிக்கும். அவர்தான் என்னை டைரக்டர் ஆக்கினார். பிறகு புத்தகமாக போடலாம் முதலில் படமாக பண்ணுங்கன்னு சொன்னார். 96 ஷூட்டிங்கின் போது, இந்தக் கதையை நான் பண்ணலைனா வேறு யார் பண்ணலாம்னு சேது கேட்டார். நான் சொன்ன ஒரே பெயர் கார்த்தி. எனது இந்த நாவலை படித்துவிட்டு எப்படிங்க இப்படி ஒரு கதையை எழுதினீங்க என கேட்டார், கார்த்தி.எனக்கு பெருமூச்சு வந்தது. பிறகு சூர்யா சாரை பார்த்ததும் 2D மூலமாகவே ‘மெய்யழகன்’ ஆரம்பமானது.
அரவிந்த்சாமி வந்து நின்னாலே கம்பீரம் ஆளுமை வேணுங்கிற மாதிரி ஒரு இடத்தில் வரணும். ரொம்பவும் பேசாத வாழ்க்கையில் ஒரு பெரும் துயரத்தை பார்த்துவிட்டு அதிலிருந்து மீள முடியாமல் அமைதியானவர். உள்ளுக்குள்ளே பெரிய அன்பிருந்தாலும் அதை வெளிக்காட்டாமல் தனக்குள்ளே தன்னை அடக்கிக் கொண்ட கேரக்டர். யாரையும் அதிகம் நம்பாமல் நம்மையே நாம் பார்த்துக்கணும்னு நினைக்கிறவர் அரவிந்த்சாமி. ஒரு இழப்பின் காரணமாக இப்படி மாறியிருப்பார். அவர் அழகு, நிறம், ஆளுமை மட்டுமில்லை அவர்கிட்டே பேராண்மையும் சேர்ந்திருக்கும். அது அவருக்கு அவ்வளவு பொருத்தமாக இருக்கும். ஃபேமிலியில் ஒரு மூத்த அண்ணன் மாதிரி இருந்தார்.
ராஜ்கிரண், அரவிந்த்சாமியோட தாய் மாமன். கார்த்திக்கு பெரியப்பா. ரொம்ப சென்டிமென்ட் ரோல். அவரோடு காமெடியான ரோலும் இணைஞ்சிருக்கு.
மேலும், சுவாதி கொண்டே, ஶ்ரீரஞ்சனி, இளவரசு, சரண், ரேச்சல் ரெபேகா, அந்தோணி, ராஜ்குமார், இந்துமதி,ராணி சம்யுக்தா, கயல் சுப்ரமணி, அசோக் பாண்டியன் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.
கேமரா மகேந்திரன் ஜெயராஜூ. படத்தின் இன்னும் அசல் முகம் வேண்டி லைவ் சவுண்ட்தான் படத்தில் உபயோகப்படுத்தியிருக்கோம்.கோவிந்த வசந்தாவின் மியூசிக் இதில் ஊர் விருந்து மாதிரியிருக்கும். அப்படியே மனதை தட்டி தூக்கிட்டார். கதை சூழல் தெரியாமல் கேட்டவங்க கூட அழுதாங்க. கண்களில் தாரைதாரையாக கண்ணீர் கொட்டியது.
‘மெய்யழகன்’ – உங்கள் சொந்த ஊரை ஞாபகப்படுத்துவான். நாம் பேச வேண்டாம்ன்னு நினைச்சவங்க கிட்ட மன்னிப்பு கேட்க தோணும். படத்த பார்த்துட்டூ உங்ககிட்டே இருக்கிற அன்பு வெளிப்படும்.
பாடல்கள்: கார்த்திக் நேத்தா – உமாதேவி.









