நவீன தொழில்நுட்பத்தில் 500-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் பிரமாண்டமாக ரீ ரிலீஸாகும் ‘கேப்டன் பிரபாகரன்’ ; ரிலீஸ் தேதி அறிவிப்பு
புரட்சிக் கலைஞர் கேப்டன் விஜயகாந்த் நடிப்பில் அவரது 100வது படமாக வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும் வசூல் சாதனையையும் செய்த படம் ‘கேப்டன் பிரபாகரன்’. ஆர்கே செல்வமணி இயக்கத்தில் 1991 ஏப்ரல் 14 தமிழ் புத்தாண்டில் வெளியான இந்த படம் கேப்டன் ரசிகர்களை மட்டுமல்ல அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்தது. வாழ்நாள் முழுவதும் மக்கள் அவரை அன்புடன் அழைக்கும் ‘கேப்டன்’ என்கிற ஒரு அற்புதமான பெயரையும் அவருக்கு பெற்று தந்தது..
‘கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம் வெளியாகி 34 வருடங்கள் ஆகிவிட்ட நிலையில், தற்போது நவீன 4K தொழில்நுட்பங்களுடன் டிஜிட்டலுக்கு மாற்றப்பட்டு புது வடிவம் பெற்று, வரும் ஆகஸ்ட் 22 ஆம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
கேப்டன் விஜயகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு இது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பு இன்று (ஆகஸ்ட் 24) காலை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமைக்கழக அலுவலகத்தில் நடைபெற்ற பத்திரிக்கையாளர் சந்திப்பில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக இயக்குநர் ஆர்.கே செல்வமணி, தேமுதிக தலைவர் பிரேமலதா விஜயகாந்த், தேமுதிக பொருளாளர் எல்.கே சுதீஷ், இயக்குனர்கள் விக்ரமன், ஆர்.வி.உதயகுமார், அரவிந்த்ராஜ் மற்றும் பேரரசு ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்படத்தை வெளியிடும் ஸ்பேரோ சினிமாஸ் நிறுவனம், கேப்டனின் பிறந்த நாளை முன்னிட்டு இந்த நிகழ்வில் கலந்து கொண்ட 1500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு சிறப்பான மதிய உணவை ஏற்பாடு செய்திருந்தனர்.









