விஷால் நடிப்பில் ஆனந்தன் இயக்கியுள்ள சக்ரா திரைப்படம் தடைகளை தாண்டி வெளிவந்துள்ளது. இது குறித்த விஷயங்களைப் பார்ப்போம்.
ஒவ்வொரு முறை விஷால் படம் வெளிவரும்போதும் அது தடைகளை சந்திக்கிறது. இந்த முறை இயக்குநருக்கு எதிராக ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் வழக்கு தொடுக்க, சக்ரா படம் வெளியாக நீதிமன்றம் தடை விதித்தது. பின்னர் சுமூக பேச்சுவார்த்தை ஏற்பட்டதையடுத்து சக்ரா இன்று வெளியாகியுள்ளது.

சென்னையில் சுதந்திர தினத்தன்று இரண்டு கொள்ளையர்கள் வரிசையாக 50 வீடுகளில் கொள்ளையடிக்கின்றனர். இது தொடர்பாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்படுகிறது. சுதந்திர தினம் என்பதால் போலீசார் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்ததால், அவர்கள் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் கொள்ளையர்கள் தப்பித்து விடுகின்றனர்.கொள்ளையர்கள் கைவரிசை காட்டிய 50 வீடுகளில் விஷாலின் வீடும் ஒன்று. கொள்ளையர்கள் தாக்கியதில் விஷாலின் பாட்டி மயக்கமடைந்து விடுகிறார். ராணுவத்தில் பணியாற்றி வரும் விஷால், இச்சம்பவம் குறித்து தெரிந்ததும் ஊருக்கு விரைகிறார். தனது தந்தை வாங்கிய சக்ரா மெடலும் திருடு போனதை அறியும் விஷால் கொள்ளையர்களை பிடிக்க முனைப்பு காட்டுகிறார்.


ஒரு தொடர் திருட்டு சம்பவத்தை விசாரிக்க விஷாலின் உதவியை நாடுகிறார் ஷ்ரத்தா. விஷாலும் அந்த திருட்டு சம்பவத்தில் நேரடியாக பாதிக்கப்பட்டிருந்ததால் உதவ முன்வருகிறார். ஆனால் ஷ்ராத்தாவை முழுக்க முழுக்க ஓரம் கட்டிவிட்டு விஷாலே அனைத்தையும் விசாரித்து முடிக்கிறார். ஷ்ரத்தா சொல்லும் சில பரிந்துரைகளையும் ஏற்க மறுக்கிறார். வழக்கமாக டான்ஸ்களுக்கு மட்டும் நடிகைகளை பயன்படுத்தாமல் காவல்துறை அதிகாரி வேடம் கொடுத்திருக்கிறார்கள் என்று திருப்திப்படுவதற்குள் விஷால் ஷ்ரத்தாவை கான்ஸ்டபிள் போல நடத்தி மட்டுப்படுத்தி விடுகிறார்.
நாயகன் விஷால், ராணுவ அதிகாரியாக நடித்திருக்கிறார். மிடுக்கான உடற்கட்டுடன் திறம்பட நடித்திருக்கிறார். அதிரடி ஆக்ஷன், காதல், செண்டிமெண்ட் என அனைத்திலும் கலக்கி இருக்கிறார். கொள்ளையர்களை களையெடுக்க அவர் கையாளும் யுக்திகள் அனைத்தும் ரசிக்கும் படியாக உள்ளது.

அப்பாவிகளை பகடையாக்கி பின்னாலிருந்து இயங்கும் வில்லனின் கதைதான் என்றாலும் வில்லனுக்கு நிறைய எதிர்பார்ப்பை கூட்டியிருக்கிறார்கள். அந்த கேரக்டருக்கு ஏற்ற வெயிட்டேஜை கூட்ட வில்லன் நடிகரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்பல நாட்களுக்கு பின் கே.ஆர்.விஜயா சக்ராவில் நடித்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் சில நேரமே நீடித்தாலும் நடிப்பு சிறப்பு. கதை விறுவிறுப்பாக நகர்வதால் இடையிடையே வரும் ரோபோ ஷங்கரின் காமெடி எடுபடவில்லை.
இயக்குனர் எம்.எஸ்.ஆனந்த், அவருக்கு இது அறிமுக படமாக இருந்தாலும், திரைக்கதையை திறம்பட கையாண்டுள்ளார். கதாபாத்திரங்கள் தேர்வும் கச்சிதமாக அமைந்தது படத்திற்கு கூடுதல் பலம். எதிர்பார்க்க முடியாத பல்வேறு டுவிஸ்டுகளை கொடுத்து படத்திற்கு விறுவிறுப்பை கூட்டி உள்ளார்.
மொத்தத்தில் ‘சக்ரா’ அதிரடி.









