குருமூர்த்தி’ விமர்சனம்
நட்டி ,பூனம் பாஜ்வா, ராம்கி, ரவிமரியா, மனோபாலா, மொட்டை ராஜேந்திரன், ஜார்ஜ் , பாய்ஸ் ராஜன், மோகன் வைத்யா,யோகிராம்,
சஞ்சனா சிங், அஸ்மிதா
மற்றும் பலர் நடித்துள்ள படம்.கே.பி. தனசேகர் இயக்கியுள்ளார்.பிரண்ட்ஸ் டாக்கீஸ் சார்பில் சிவசலபதி மற்றும் சாய் சரவணன் தயாரித்துள்ளனர்.தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார்.எஸ். என். பாசில் படத்தொகுப்பு செய்துள்ளார்.

குருமூர்த்தி என்கிற டைட்டில் ரோல் ஏற்று கதாநாயகனாக நடித்துள்ளார் நட்டி. போலீஸ் இன்ஸ்பெக்டராக வரும் அவர், பெரும்பாலும் ஜீப்பில் சுற்றிக் கொண்டிருக்கிறார். அவ்வப்போது வீட்டுடன் தொடர்பு கொண்டு செல்போனில் பேசுகிறார்.போலீஸ் இன்ஸ்பெக்டர் என்பதற்கு அவரது உயரம் கை கொடுக்கிறது. தன்னால் முடிந்த வகையில் அந்தப் பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். ஆனால் அவரிடமிருந்து மேலும் நடிப்புத் திறனை வெளிக்கொண்டு வரலாம். அவரது குணசித்திரம் மேலும் சித்தரிக்கப்பட்டு இருக்க வேண்டும்.

போலீஸ் டிரைவராக ரவிமரியா வருகிறார் .உடன் பயணிக்கும் ஹெட் கான்ஸ்டபிள் ஆக மனோபாலா வருகிறார். இவர்களுக்குள் நடக்கும் உரையாடல்கள் வழியாகச் சிரிப்பு முயற்சி செய்கிறார்கள்.நாம் நமட்டுச் சிரிப்பு தான் சிரிக்க முடிகிறது. பெரிதாக சிரிப்பு வரவில்லை.
ரவி மரியா, மனோபாலா இருவரும் மாமன் மச்சான் மொழியில் பேசிக் கொள்ளும் இடங்களில் நாடகத்தனம். அதுவும் அந்த யானை லத்தி காமெடி சகிக்க முடியாத கற்பனை.மனோ பாலாவை உருவக்கேலி செய்யும் காமெடியை சினிமாவில் எப்போது நிறுத்த போகிறார்கள்?

நட்டி- பூனம் பாஜ்வா தோன்றும் பாடல் காட்சிகள் நல்ல ஒளிப்பதிவுக் தரத்திலும் தொழில்நுட்ப நேர்த்தியிலும் அழகாக அமைந்துள்ளன.
ஆனால் அதே நேர்த்தி படம் முழுக்க பராமரிக்கப்படவில்லை, ஏன்?பட்ஜெட்டின் போதாமை தெரிகிறது.
எனவே அந்தப் பாடல் காட்சி ஓட்டாமல் நிற்கிறது;
அதே போல் மொட்டை ராஜேந்திரன் ,
சஞ்சனா சிங் , அஸ்மிதா தோன்றும்
‘செக்கசெவந்த
சுந்தரி
சேரநாட்டு முந்திரி’
பாடலில் கவர்ச்சி கொடிகட்டிப் பறக்கிறது.எண்பதுகளில் பார்த்த கிளுகிளு மசாலாவாக அப் பாடல் இருக்கிறது.
குடுகுடுப்பைக்காரராக வரும் ஜார்ஜ் இதுவரை ஏற்காத வேடமென்று பாவம் கொடுத்த வேலையைச் செய்துள்ளார். ஆனால் அவர் வருவதும் பேசுவதும் மிகைநடிப்பு.

பசுமையான மலைச்சரிவு பின்புலக் காட்சிகள் பார்ப்பதற்கு இதமாக, கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கின்றன.
படத்தின் இரண்டாவது பாதியில் வரும் ‘தாரகையே தாயும் நீயே’ பாடல் தனியே கேட்பதற்கு நன்றாக இருந்தாலும் படத்தில் வேகத்தடையாக உள்ளது.ஒரு திரைப்படத்தில்
பாடல்கள் நன்றாக இருந்தாலும் அதன் அமைவிடத்தின் மூலம் தான் ரசிக்கப்படும்.
படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ள தேவராஜ் ஒளிப்பதிவில் ஒரே சீரான தன்மையைப் படத்தில் கடைப்பிடிக்கவில்லை. காரணம் அவர் என்ன செய்வார்?பட்ஜெட்டின் நெருக்குதல் காரணமாக இருந்திருக்கலாம்.
இனிமையான பாடல்கள் கொடுத்த இசையமைப்பாளர் சத்யதேவ் உதய சங்கர், பின்னணி இசையில் சுமார் ரகம் என்றுதான் கூற வைக்கிறார்.
ஓர் எளிமையான திருடன் போலீஸ் மசாலா படத்தைக் கொடுக்க முயன்றுள்ளார் இயக்குநர் கே.பி.தனசேகரன். கால மாற்றத்தில் சினிமா அடைந்திருக்கும் வளர்ச்சியை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.
மொத்தத்தில் படம் ‘குருமூர்த்தி’ பட்ஜெட் மசாலா படம்.