கடற்கரை கிராம மக்கள் மீன்பிடி தொழிலை நம்பியிருந்தாலும், அவர்களால் மீன்பிடிக்க கடலுக்கு செல்ல முடியவில்லை. காரணம், பேராசை பிடித்த ஒருவரது ஆன்மா அந்த கடலை ஆட்கொண்டு அங்கு வருபவர்களை கொன்று குவிப்பது தான். இதனால், அந்த ஊர் மக்கள் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பதோடு, கிடைக்கும் வேலைகளை செய்கிறார்கள். சில இளைஞர்கள் கடத்தல் தொழிலில் ஈடுபடுகிறார்கள். இந்த இளைஞர்களில் ஒருவரான நாயகன் ஜி.வி.பிரகாஷும், ஆரம்பத்தில் கடத்தல் தொழிலில் ஈடுபட்டாலும், அதன் உண்மையான பின்னணியை அறிந்துக் கொண்டு அதில் இருந்து விலகுவதோடு, தனது கிராம மக்கள் இழந்த வாழ்வாதாரதை மீட்க முடிவு செய்கிறார்.
மீனவ கிராமத்து இளைஞராக நடித்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், தோற்றம் மற்றும் நடிப்பு இரண்டிலும் எந்தவித மாற்றமும் இன்றி வழக்கம் போல் நடித்திருக்கிறார். இயக்குநர் சொன்னதை மட்டுமே செய்திருக்கும் ஜி.வி.பிரகாஷ் குமார், அதையும் தனக்கு தெரிந்த மாதிரி, ஒரே மாதிரி செய்திருக்கிறார்.
நாயகியாக நடித்திருக்கும் திவ்ய பாரதிக்கு பெரிய வேலை இல்லை என்றாலும், அவரை திணிப்பதற்காகவே சில காட்சிகள் படத்தில் திணிக்கப்பட்டிருக்கிறது.
அழகம்பெருமாள், சேத்தன், குமரவேல், வில்லனாக நடித்திருக்கும் சாபுமோன் அப்துசாமத், ஆண்டனி, ராஜேஷ் பாலச்சந்திரன், அருணாச்சலேஸ்வரன்.பி.ஏ, பிரவீன், பயர் கார்த்திக் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் தங்களது வேலையை சரியாக செய்திருக்கிறார்கள்.
கிரீன் மேட் படங்கள் என்றாலே கோகுல் பினாய் தான் என்ற முத்திரை குத்தப்பட்ட ஒளிப்பதிவாளர் கோகுல் பினாய், கடலின் அழகு, ஆபத்து மற்றும் பிரமாண்டம் என அனைத்தையும் திரையில் கொண்டு வர முயற்சித்திருக்கிறார், ஆனால் அனைத்தும் கிரீன் மேட் மூலம் கொண்டு வர வேண்டும் என்பதால், அவரது முயற்சி தோல்வியடைந்திருக்கிறது.

கதையில் இருக்கும் திகில் முக்கியமா? அல்லது திகில் பின்னணியில் இருக்கும் திருப்பங்கள் முக்கியமா? என்ற குழப்பத்தோடு காட்சிகளை தொகுத்திருப்பதால், சஸ்பென்ஸ்கள் கூட திரைக்கதையில் எந்தவித சுவாரஸ்யத்தையும் கொடுக்காமல் சாதாரணமாக கடந்துவிடுகிறது.
எழுதி இயக்கியிருக்கும் கமல் பிரகாஷ், கடலில் நடக்கும் திகில் கதையை ஃபேண்டஸியாக சொல்ல முயற்சித்திருக்கிறார். ஆனால், அழுத்தமான கதை மற்றும் பலமான திரைக்கதை இல்லாததால், அவரது ஃபேண்டஸி மற்றும் திகில் யோசனைகள் பார்வையாளர்களிடம் எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை.
கிராபிக்ஸ் மூலம் வடிவமைக்கப்பட்டிருக்கும் அமானுஷ்ய உருவம், கடலில் நடக்கும் ஆவிகளுடனான மோதல் ஆகியவற்றின் மூலம் படக்குழுவின் உழைப்பு தெரிந்தாலும், அந்த இடங்களில் வரும் கிராபிக்ஸ் காட்சிகளின் சொதப்பல் படத்திற்கு சற்று பலவீனமாக அமைந்திருக்கிறது.
சில நாட்கள் முன்பு தெலுங்கு ,தமிழில் வந்த தேவரா படத்தை ஞாபகப்படுத்துவதை தடுக்க முடியவில்லை.