காளி வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தை சுற்றி நடக்கும் ஒரு அழகான வாழ்வியல் தான் இந்த மெட்ராஸ் மேட்னி.காளி வெங்கட்டின் மனைவியாக வருகிறார் ஷெல்லி, மகளாக வருகிறார் ரோஷ்னி மற்றும் மகனாக வருகிறார் விஷ்வா.சென்னையில் ஆட்டோ வைத்து அதனை வைத்து தனது குடும்ப வாழ்வாதாரத்தை பார்த்துக் கொள்பவர் காளி வெங்கட். மகளை நன்றாக படிக்க வைத்துவிடுகிறார். ரோஷ்னி பெங்களூருவில் தனியார் ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.மகன் விஷ்வா, 12ஆம் வகுப்பு முடிந்து கல்லூரியில் சேர காத்துக் கொண்டிருக்கிறார்.
![Trailer [OV]](https://m.media-amazon.com/images/M/MV5BYTU3NDZlMGUtMThlNi00NjVmLTg2ZTAtNmM5YWFlYjlhYmM2XkEyXkFqcGdeQXRyYW5zY29kZS13b3JrZmxvdw@@._V1_.jpg)
தனது அப்பா எல்லோரிடமும் மிகவும் தாழ்ந்து பேசுவதையும் நடந்து கொள்வதையும் பிடிக்காத விஷ்வா, அப்பா மீது ஒருமாதிரியான கோபத்தில் இருந்து வருகிறார்.
என்ன நடந்தாலும், தன் குடும்பத்தை தாங்கிச் செல்ல வேண்டும் என்ற எண்ணத்தில் அம்மாவாக ஷெல்லியும் இருக்க..இப்படியாக இருக்கும் குடும்பத்தில் அடுத்து என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக் கதை.இந்த கதாபாத்திரத்தில் இவரை விட்டால் வேறு யார் இருக்கிறார் என்று கூறும் அளவிற்கு மிகவும் நேர்த்தியான ஒரு நடிப்பைக் கொடுத்து அசத்தியிருக்கிறார் நடிகர் காளி வெங்கட். இவரைப் பார்த்தாலே அனைவருக்கும் தங்களது அப்பாவின் வாசனை வந்து செல்லாமால் இருக்காது. அப்படியாக அக்கதாபாத்திரமாகவே வாழ்ந்துவிட்டுச் சென்றிருக்கிறார்.
நடிகை ரோஷ்னி, தனது குடும்பத்தையும் தனது நிலையையும் நினைத்து கண்கலங்கும் காட்சியில் நம்மையும் சேர்த்து கண்கலங்க வைத்துவிட்டார். மகனாக நடித்திருக்கும் விஷ்வா, நாய் மீது வைத்திருக்கும் பாசம், அப்பாவை புரிந்து கொள்ளும் தருணம் என பல இடங்களில் தனது இயல்பான நடிப்பைக் கொடுத்து நடிப்பில் தனி ஒரு அங்கீகாரம் பெற்றிருக்கிறார். அம்மாவாக நடித்திருக்கும் ஷெல்லியும் கண்களில் வரும் ஈரத்துளிகளிலே ப்பாதி நடிப்பைக் கொடுத்துவிட்டுச் சென்று விடுகிறார்.

காமெடிகளை ஆங்காங்கே சிதறவிட்டுச் சென்றிருக்கிறார் இயக்குனர். காளி வெங்கட் கார் ஓட்டி பழகும் காட்சி, முதல் பாதியில் இருந்த குறைகள், முடிவடையாத க்ளைமாக்ஸ் என ஒரு சில இடங்களை இயக்குனர் இன்னும் சற்று நன்றாகவே கூர்ந்து கவனித்திருந்திருக்கலாம்.அதிலும், பெரிய குறை என்னவென்றால் சத்யராஜின் கதாபாத்திரம் மட்டுமே. படத்திற்கு துளியளவு இவரது கதாபாத்திரம் ஒட்டவில்லை என்பதே நிதர்சனம்.










