“கிரிக்கெட் வீரர் மலிங்காவாக நடிக்க தயார்” ; ஆச்சர்யப்படுத்தும் லால் சலாம் பட ஆடை வடிவமைப்பாளர் சத்யா
சமீபத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்துடன் இலங்கை நட்சத்திர கிரிக்கெட் வீரர் மலிங்கா இணைந்து எடுத்துக்கொண்டது போன்ற புகைப்படம் ஒன்று சோசியல் மீடியாவில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. ஆனால் பலரும் நினைப்பது போல அவர் கிரிக்கெட் வீரர் மலிங்கா அல்ல.. தமிழ் சினிமாவில் பிரபல ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றி வரும் காஸ்ட்யூமர் சத்யா தான் அவர்.
மூன்று பேர் மூன்று காதல் படத்தின் மூலமாக ஆடை வடிவமைப்பாளராக தனது பயணத்தை துவங்கிய சத்யா கிட்டத்தட்ட 46 படங்கள் வரை பணியாற்றி உள்ளார். ராஜா ராணி, இரும்புத்திரை, தெறி, பைரவா, ரஜினி முருகன், மான் கராத்தே உள்ளிட்ட படங்களில் பணியாற்றி உள்ளதுடன் சமீபத்தில் டைம் டிராவலை மையப்படுத்தி வெளியான மார்க் ஆண்டனி படத்தின் சவாலான ஆடை வடிவமைப்பையும் அசத்தலாக செய்து முடித்தவர் இந்த சத்யா தான் என்பது இன்னொரு ஆச்சரியம்.
தனது புகைப்படம் சோஷியல் மீடியாவில் வைரலாகியுள்ள நிலையில், லால் சலாம் படத்தில் சூப்பர் ஸ்டாருடன் பணிபுரிந்த அனுபவம் குறித்தும் தற்போது இலங்கை கிரிக்கெட் வீரர் மலிங்காவாக திடீரென வைரலானது குறித்தும் உற்சாகத்துடன் பகிர்ந்து கொள்கிறார் சத்யா.
இந்த படத்தில் அவருக்கான ஆடைகளை வடிவமைக்கும் பொறுப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம். அவரைப் பொறுத்தவரை குறை நிறை எதுவாக இருந்தாலும் நம்மிடம் வெளிப்படையாக பேசி விடுவார். ஒரு விஷயத்தை சரியாக செய்து விட்டால் ஒன்றுக்கு மூன்று முறை திரும்பத் திரும்ப நம்மை பாராட்டுவார். ஒருமுறை சிரமமான விஷயம் ஒன்றை ரொம்பவே எளிதாக செய்து முடித்தேன் அதேசமயம் இன்னொரு விஷயத்தில் இரண்டு முறை முயன்றும் சரிவரவில்லை.. அப்போது என்னிடம் அவர், என்ன சத்யா ரொம்ப கஷ்டமான விஷயத்தை எளிதாக செய்து விட்டீர்கள்.. எளிதான ஒரு விஷயத்திற்கு இவ்வளவு சிரமப்படுகிறீர்களே என்று கூறினார்..
அவர் அப்படி சொல்வது கூட நம் மீதான அக்கறை, அன்புடன் தான் இருக்கும்.. இன்னும் ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள் சார் என்று அவரிடமே கேட்டு அதை சரியாக செய்து முடித்தேன்.. அதில் அவருக்கும் ரொம்பவே சந்தோசம். நாம் சொல்லும் ஒரு விஷயம் சரியாக இருந்தால் எந்த ஈகோவும் பார்க்காமல் அதை மனதார ஏற்றுக்கொள்வார். படத்தில் அவருடன் இணைந்து நடிக்கும்போது என்னுடைய நடிப்பை பார்த்துவிட்டு ‘சும்மா கலக்குறீங்களே’ என்று ஜாலியாக கூறி உற்சாகப்படுத்துவார்.
இந்த படத்திற்கு பிறகும் மீண்டும் அடுத்ததாக ரஜினி சாருடன் இணைந்து பணியாற்றுவேனா இல்லையா என்பது தெரியாது. அதனால் இந்த படத்தையே அவருடன் பணியாற்ற எனக்கு கிடைத்த கடைசி வாய்ப்பாக நினைத்து, எந்த அளவிற்கு சிறப்பாக பணியாற்ற முடியுமோ அந்த அளவிற்கு வேலை செய்துள்ளேன் என நினைக்கிறேன். படம் வெளியான பிறகு அவர் அணிந்துள்ள ஆடைகளை பார்த்து அதேபோல யாரேனும் ஒருவராவது விரும்பி அணிந்தார்கள் என்றால் அதுவே எனது வேலைக்கு கிடைத்த கவுரவமாக நினைபேன்.