பகாசூரன் – விமர்சனம்
சிவன் கோவில்களில் சாப்பிட்டு, தூங்கும் நாடோடியான பீம ராசு(செல்வராகவன்) ஒரு காம ஆசாமியை கொடூரமாக கொலை செய்வதுடன் படம் துவங்குகிறது. அதே சமயம் கிரிமினாலஜி மற்றும் குற்றம் சார்ந்த கதைகள் பற்றிய யூடியூப் சேனல் நடத்தி வரும் மேஜர் அருள்வர்மனை(நட்டி) அறிமுகம் செய்து வைக்கிறார்கள். தன் அண்ணன் மகளின் தற்கொலையால் அது குறித்து விசாரணை செய்து வருகிறார் மேஜர்.
விசாரணையின்போது ஒரு கல்வி நிறுவனத்தில் வேலை செய்பவர்களின் ஆதரவுடன் நடக்கும் செக்ஸ் தொழில் குறித்தும், பீம ராசுவுக்கு இருக்கும் தொடர்பு குறித்தும் அவர் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து பீம ராசுவின் பிளாஷ்பேக்கை காட்டுகிறார்கள்.
இளைஞர்களின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பம் எப்படி அவர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது என்பதை தெரிவிக்கும் நோக்கம் நல்லது தான் என்றாலும் அது போதனை செய்வது போன்றாகிவிட்டது.
குழந்தைகளின் செல்போன் பயன்பாட்டை கண்காணிக்குமாறு பெற்றோர்களை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெற்றோரிடம் எதையும் மறைக்காதீர்கள் பிள்ளைகளே எனும் ஒரு நல்ல மெசேஜை கொடுத்திருக்கிறார்கள். இதை மேலும் சிறப்பாக சொல்லியிருக்கலாம்.
திரைக்கதை வலுவில்லை. த்ரில்லர் என்றாலும் அடுத்தடுத்து என்ன நடக்கும் என்பதை எளிதில் கணிக்க முடிகிறது. இருப்பினும் மோகன் ஜி.யின் முந்தைய படங்களுடன் ஒப்பிடும்போது கதாபாத்திரங்கள் சிறப்பாக உள்ளன மற்றும் பின்னணி சுவாரஸ்யமாக இருக்கிறது.
தன் மகளுக்கு நியாயம் தேடி தொடர் கொலைகள் செய்யும் பீம ராசுவை பார்த்து நமக்கு பரிதாபம் வரவில்லை. செல்வராகவனின் நடிப்பு சிறப்பாக உள்ளது. நட்டியும் தன் கதாபாத்திரத்தை உணர்ந்து நடித்திருக்கிறார். ஃபரூக் பாஷாவின் ஒளிப்பதிவும், சாம் சி.எஸ்.ஸின் பின்னணி இசையும் சில காட்சிகளுக்கு உதவியிருக்கிறது. படத்தின் நீளம் சற்று அதிகமாக இருக்கிறது. படம் முடியும்போது நம்மிடையே பெரிதாக தாக்கம் ஏற்படவில்லை.